தமிழகத்தில் வரும் 19-ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுவதையொட்டி சிதம்பரம் மற்றும் அதன் உட்கோட்ட பகுதிகளில் பொதுமக்கள் அச்சம் இல்லாமல் வாக்களிக்கும் வகையில் சிதம்பரத்தில் காவல்துறையினர் இன்று அணிவகுப்பு பேரணியில் ஈடுபட்டனர்.
இதில் சிதம்பரம் பகுதியில் உள்ள காவல்துறையினர், சிதம்பரம் டி.எஸ்.பி. ரமேஷ்ராஜ் தலைமையில் இந்தப் பேரணி நடைபெற்றது. இதில், சிதம்பரம் நகர காவல் ஆய்வாளர் ஆறுமுகம், உதவி ஆய்வாளர்கள் நாகராஜ், சுரேஷ் முருகன், மகரம், ஆனந்த், மகேந்திரன், தமிழ்வாணன் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் கலந்து கொண்டனர். பேரணியில் ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களுக்கு அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்றும், பொதுமக்கள் வாக்களிக்கச் செல்லும்போது அனைத்து பாதுகாப்பு வசதிகளும் செய்து தரப்படும் எனவும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.