ADVERTISEMENT

அடுத்தடுத்து மூதாட்டிகள் கொலை; சைக்கோ வாலிபர் சிக்கினார்!

10:24 AM May 22, 2023 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

பள்ளிபாளையம் பகுதியில் வீட்டில் தனியாக வசிக்கும் மூதாட்டிகளைக் குறிவைத்து பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்த சைக்கோ வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர்.

நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் ஓடப்பள்ளியைச் சேர்ந்தவர் பாவாயம்மாள் (65). இவர் கடந்த மார்ச் 19ம் தேதி, முக்குப்பாறை என்ற பகுதியில் கரும்பு தோட்டத்தில் கழுத்து அறுபட்ட நிலையில் சடலமாகக் கிடந்தார். உடற்கூராய்வில் பாவாயம்மாள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது. அவரை கொலை செய்தது யார் என்ற துப்பு கிடைக்காமல் காவல்துறையினர் திணறி வந்தனர்.

இந்நிலையில், பள்ளிபாளையம் பில்லுமடைக்காடு பகுதியில் தனியாக வசித்து வந்த பழனியம்மாள் (64) என்ற மூதாட்டியும், மே 11ம் தேதி மர்மமான முறையில் கொல்லப்பட்டார். அவருடைய சடலத்தை மே 12ம் தேதி காவல்துறையினர் கைப்பற்றி, உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்தனர். பழனியம்மாளும் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பிறகு, கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது.

பாவாயம்மாள், பழனியம்மாள் ஆகிய இருவரின் கொலையின் தன்மையும் ஒரே மாதிரி இருந்ததால், இந்த இரு சம்பவத்திலும் ஒரே ஆள் அல்லது ஒரே கும்பல் ஈடுபட்டிருக்கலாம் என பள்ளிபாளையம் காவல்துறையினர் கருதினர். எனினும், இவ்விரு சம்பவத்திலும் ஒரு துப்பும் கிடைக்காமல் தடுமாறினர். இதையடுத்து குற்றவாளிகளைப் பிடிக்க நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்நிலையில், பழனியம்மாளிடம் இரண்டு ஆண்டுக்கு முன்பு வேலை செய்து வந்த செல்வம் (32) என்ற வாலிபரை சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரித்தனர்.

கூலித்தொழிலாளியான செல்வத்தின் சொந்த ஊர், சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் ஆகும். இவர்தான், அவ்விரு மூதாட்டிகளையும் கொலை செய்திருப்பது தெரியவந்தது. கடந்த 5 ஆண்டுக்கு முன்பு பள்ளிபாளையம் அண்ணா நகர் பகுதியில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்துள்ளார். பிறகு, விலாங்கட்டூர் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து விவசாயக் கூலி வேலைகளுக்குச் சென்று வந்துள்ளார்.

யாரிடமும் சகஜமாக பேசிப் பழக்கம் இல்லாத அவர், மக்கள் கூட்டம் உள்ள இடங்களுக்குச் செல்வதை தவிர்த்து வந்துள்ளார். பெரும்பாலும் மக்கள் நடமாட்டம் இல்லாத காடுகள் உள்ளிட்ட ஒதுக்குப்புறமான இடங்களில் மட்டுமே சென்று வந்த செல்வம், ஆதரவின்றி தனியாக வசிக்கும் மூதாட்டிகளிடம் மட்டும் நட்பாக பழகி வந்துள்ளார். நன்றாக பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்ட பிறகு அவர்களிடம் பாலியல் உறவு வைத்துக் கொள்வதும், காரணமே இல்லாமல் அவர்களைக் கொலை செய்வதுமாக இருந்துள்ளார்.

இதேபோல்தான் சம்பவத்தன்று ஓடப்பள்ளி பாவாயம்மாளுடன் கரும்பு காட்டில் வைத்து பாலியல் உறவு கொண்டுள்ளார் செல்வம். அதன்பிறகு அவரை திடீரென்று கத்தியால் கழுத்தை அறுத்துக் கொலை செய்துள்ளார். அதேபோல் பில்லுமடைக்காடு பாவாயம்மாளையும் பாலியல் வன்கொடுமை செய்த பிறகு, அவரை கல்லால் தாக்கிக் கொலை செய்திருப்பது விசாரணையில் தெரியவந்தது. சில நேரம் அவர் சைக்கோ போல முன்னுக்குப் பின் முரணாக பேசியதாகவும் கூறுகின்றனர்.

உண்மையில் அவர் தனியாக வசிக்கும் மூதாட்டிகளை குறி வைத்துக் கொலை செய்யும் சைக்கோவா அல்லது அவ்வாறு நடிக்கிறாரா என சந்தேகமாக இருப்பதால் அவரை மனநல மருத்துவர் மூலம் பரிசோதிக்க வேண்டும் என்றும் காவல்துறையினர் கூறுகின்றனர்.

இதையடுத்து செல்வத்தைக் கைது செய்ததோடு, கொலைக்குப் பயன்படுத்திய கத்தியையும் அவரிடம் இருந்து பறிமுதல் செய்துள்ளனர். இதேபோல வேறு யாரையாவது கொலை செய்துள்ளாரா என்பது குறித்தும் காவல்துறையினர் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT