நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் குணசேகரன். இவர், தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது கொல்ல முயற்சி நடந்ததாக நாமகிரி பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததில் குணசேகரனின் மனைவியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை அடுத்த சின்னகாக்காவேரி பகுதியைச் சேர்ந்தவர் குணசேகரன். கூலித் தொழிலாளியான குணசேகரனுக்கு காயத்ரி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவருடன் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு காயத்ரி, சக்திவேல் என்பவரின் தோட்டத்திற்கு வெங்காயம் எடுக்கும் பணிக்காகச் சென்றுள்ளார். சக்திவேல் தனியார் பேருந்து ஓட்டுநராக வேலை செய்து வருகிறார். காயத்ரிக்கும், சக்திவேலுக்கும் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் அது திருமணத்தை மீறிய உறவாக மாறியுள்ளது. குணசேகரன் வீட்டில் இல்லாத நேரத்தில் காயத்ரியும், சக்திவேலும் அடிக்கடி சந்தித்து தனிமையில் இருந்துள்ளனர். குணசேகரனுக்கு நாளடைவில் உடல் நிலை சரியில்லாமல் போக அவர் வீட்டிலேயே இருந்துள்ளார்.
இதனால், தங்களது உறவில் தடை ஏற்பட்டுள்ளது என்று எண்ணிய காயத்ரி தனது கணவனைக் கொலை செய்யத் திட்டமிட்டுள்ளார். தன் கணவனைக் கொன்ற பிறகு காவல்துறையில் சிக்கிவிடக்கூடாது என்பதற்காக கை ரேகை பதியாமல் கொலை செய்வது எப்படி என்று யூடியூபில் தேடியுள்ளார். அதன்படி அவர், போலீசில் சிக்காமல் கொலை செய்வதற்கு ஒரு வீடியோவை பார்த்துள்ளார். அதனைத் தொடர்ந்து அந்த வீடியோவை சக்திவேலிடம் காட்டியுள்ளார். அந்த வீடியோவில் இருப்பது போல் கொலை செய்யத் திட்டமிட்ட காயத்ரி, சக்திவேலிடம் அந்த வீடியோவில் இருப்பதை போலவே செய்யச் சொல்லியுள்ளார். காயத்ரி கூறியதைத் தொடர்ந்து சக்திவேல், குணசேகர் தூங்கிக் கொண்டிருந்தபோது, அந்த வீடியோவில் வருவது போலவே கொலை செய்ய முயன்றுள்ளார். அந்த சமயம் சுதாரித்துக் கொண்ட குணசேகரன், சக்திவேலை பிடிக்க முயன்றுள்ளார்.
அப்போது பதறி அடித்தபடி ஓடிய சக்திவேல், தான் வந்த இருசக்கர வாகனத்தை அப்படியே போட்டுவிட்டு ஓடியுள்ளார். இந்தக் கொலை முயற்சியிலிருந்து உயிர் தப்பிய குணசேகரன், நாமகிரி பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்தப் புகாரை விசாரித்த காவல்துறையினருக்கு குணசேகரின் மனைவி மீது சந்தேகம் வலுத்துள்ளது. அதனைத் தொடர்ந்து அவரிடம் தீவிர விசாரணையை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் காயத்ரி நடந்தவற்றைக் கூறியுள்ளார். அதன் அடிப்படையில், காயத்ரியை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள சக்திவேலை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.