ADVERTISEMENT

புதிய கல்வித்கொள்கையை எதிர்த்து திருச்சியில் பிரமாண்ட மாநாடு ! 

11:24 AM Aug 21, 2019 | Anonymous (not verified)

ADVERTISEMENT

புதிய தேசிய கல்விக் கொள்கைக்கு தமிழ்நாட்டில் மிகப்பெரிய எதிர்ப்பு வலுத்து வருகிறது. கருத்து கேட்புக்கு நாட்கள் நீட்டித்து தமிழகத்தில் இருந்து எழுந்த குரலை அடுத்த 15 நாட்கள் நீட்டிப்பு கொடுத்தார்கள். இந்த நிலையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் தேசிய கல்விக் கொள்கையை திரும்ப பெற வலியுறுத்தி கல்வி உரிமை மாநாடு திருச்சியில் 23ம் தேதி மிக பிரமாண்டமாக நடக்கிறது.

ADVERTISEMENT

இதுகுறித்த திருச்சி பத்திரிகையாளர் சந்திப்பில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கத்தின் கௌரவ தலைவர் தமிழ்ச்செல்வன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: ‘’ முந்தைய தேசிய கல்வி கொள்கைக்கும் இப்போது கொண்டு வந்துள்ள தேசிய கல்வி கொள்கைக்கும் வேறுபாடு உள்ளது. தற்போது கல்வியை அரசியலின் கீழ் கொண்டு வந்துள்ளனர். பிரதமர் தலைமையிலான குழுதான் கல்வியை தணிக்கை செய்ய உள்ளனர்.

கல்வி என்பது படைப்பிற்கு முக்கியமானது. கல்வி கலாச்சாரத்தின் முக்கிய அம்சம். இதனை அரசியல் தலைவர் கீழ் கொண்டு வருவது சரியல்ல. மாநில பட்டியலில் இருந்த கல்வியை மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு செல்வது கூட்டணி தத்துவத்திற்கு எதிரானது. மாநில சுயாட்சிக்காக போரடிய நாம் இதை ஒருபோதும் அனுமதிக்க கூடாது.

புதிய கல்வி கொள்கையின் மூலம் மாநிலங்கள் கல்வியில் தங்களுக்கான சுதந்திரத்தை இழந்துவிடுவர். பாடத்திட்டங்களை மொழி பெயர்க்கும் வேலையைத் தான் செய்ய வேண்டி இருக்கும்.

மேலும் உயர்கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், ஆராய்சி நிறுவனங்களை ஒழிக்கும் செயலை செய்ய உள்ளனர். பல்கலைகழகங்களை தவிர்த்து கல்லூரிகளே தேர்வு நடத்தி பட்டங்கள் வழங்கலாம் என்கின்றனர். இது தனியார் மயத்திற்கு வழிவகுக்கும் மேலும் கல்வி தரம் கேள்விகுறியாகும். புதிய கல்வி கொள்கையின் ஒட்டுமொத்த அறிக்கைகளையும் நிராகரிக்க வேண்டும். இதில் மொழி, மதம் மட்டுமல்ல அனைத்துமே பிரச்சனை தான்.

இந்த கல்வி கொள்கையால் வருங்காலத்தில் மாணவர்களின் வாழ்க்கை கேள்விகுறியாகும் நிலை உள்ளது. இதற்கான போராட்டத்தை நடத்தாவிட்டால் அடுத்த சந்ததியினர் நம்மை மன்னிக்கமாட்டார்கள்.

புதிய கல்வி கொள்கை குறித்து கருத்து கேட்கிறார்கள் கருத்து கூறினால் ஏற்க மறுத்து கோபப்படுகிறார்கள். புதிய கல்வி கொள்கைக்கு எதிராக கேரளாவில் வீடு, வீடாக நோட்டிஸ் கொடுக்கப்பட்டு வருகிறது. கர்நாடகாவில் கருத்தரங்கம் போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. ராஜஸ்தானில் அரசே ஏற்க மறுக்கிறது. டெல்லியில் ஆராய்ச்சியாளர்கள் போராடுகின்றனர். ஆனால் தமிழகத்தில் பல மாவட்டங்களில் நோட்டிஸ் கொடுக்க கூட போலீசார் கெடுபிடி காட்டுகின்றனர்.

ஆசிரியர், பெற்றோர் கழகம் மூலம் மாணவர்களிடமும், பெற்றோர்களிடம் இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி மிகப்பெரிய இயக்கத்தை நடத்த வேண்டும். மக்களை நம்பினால் மாற்றம் நிச்சயம். இந்த மாநாட்டை ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி சுதர்சன்ரெட்டி துவக்கி வைத்து உரையாற்றுகின்றார்.

மாநாட்டில் திருச்சியிலிருந்து வரும் மொழிப்போர் தியாகி சின்னசாமி நினைவுச்சுடர், புதுக்கோட்டையில் இருந்து வரும் மருத்துவர் முத்துலட்சுமி நினைவு பெண் கல்விச்சுடர், பெரம்பலூரிலிருந்து வரும் அனிதா, கீர்த்தனா நினைவு நீட் எதிர்ப்புச்சுடர்கள் ஏற்றப்பட உள்ளன. மேலும் தேசிய கல்வி கொள்கை 2019 பின்னணியின் மர்மங்கள் என்ற நூலை வெளியிட உள்ளோம்’’ என்றார்.

பேட்டியின் போது வரவேற்புக்குழு செயல் தலைவர் கவிஞர் நந்தலாலா, திருச்சி மாவட்ட திமுக மாவட்ட செயலாளர் கே.என்.நேரு, தமுஎகச மாவட்ட செயலாளர் ரங்கராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT