ADVERTISEMENT

ஆன்லைன் லாட்டரியால் நேர்ந்த சோகம்! வீடியோ பதிவிட்டு தற்கொலை செய்துகொண்ட நூல் வியாபாரி! 

05:04 PM May 14, 2022 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

அரசும், அரசுத் துறை நிர்வாகமும் சட்டத்தை தீவிரமாக அமல்படுத்தினாலும் சட்டத்திற்கு புறம்பான சில செயல்பாடுகள் தொடர்ந்து ஆங்காங்கே நடக்கத்தான் செய்கிறது. அதில் ஒன்று தான் ஆன்லைன் சூதாட்டமும், லாட்டரி விற்பனையும்.

ஈரோட்டை சேர்ந்த நூல் வியாபாரி ஒருவர் தடை செய்யப்பட்ட லாட்டரியால் லட்சக்கணக்கில் பணம் இழந்ததாக வீடியோவில் பதிவிட்டு விட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ஒராண்டுக்கு முன்பே ஈரோடு மாவட்ட எஸ்.பி.யாக சசிமோகன் வந்த பிறகு லாட்டரி சீட்டை ஒழிக்கும் வகையில் மாவட்டம் முழுவதும் போலீசார் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வந்தனர். பல ஊர்களில் லாட்டரி விற்பனையில் ஈடுபடுபவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மாவட்டத்தில் கடந்த ஆண்டு ஜூன் முதல் தற்போது வரை தடை செய்யப்பட்ட ஆன்லைன் லாட்டரி விற்பனை தொடர்பாக 147 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அதில் 215 நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

இப்படி எஸ்.பி. மிகவும் கறாராக இது போன்ற கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தாலும் ஒரு சில இடங்களில் மறைமுகமாக லாட்டரி சீட்டு விற்பனை நடந்து வந்துள்ளது. வாட்ஸ்அப் மூலம் மேற்கொள்ளப்படும் இந்த லாட்டரி விற்பனையை தடுக்க, ரகசிய தகவலை சேகரிக்க, வாட்ஸ்அப் குழுக்களை ஊடுருவி தகவலை சேகரிக்க தனியாக காவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன் மூலம் ஆன்லைன் லாட்டரி சீட்டு விற்பனை ஓரளவு தடுக்கப்பட்டுள்ளது என்பதே உண்மை.

இந்நிலையில் தான் ஈரோட்டைச் சேர்ந்த நூல் வியாபாரி ஆன்லைன் லாட்டரி சீட்டில் ரூபாய் 62 லட்சத்தை இழந்து விட்டதாகவும் அதனால் ஏற்பட்ட வேதனையால் வீடியோ பதிவிட்டு வாட்ஸ்-அப்பில் பரப்பிவிட்டு தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். ஈரோடு எல்லப்பாளையம், முல்லை நகரைச் சேர்ந்தவர் 54 வயது ராதாகிருஷ்ணன். இவரது மனைவி மாலதி. இவர்களுக்கு இரண்டு மகள்கள். இதில் மூத்த மகளின் கணவர் இறந்ததால், தனது தாய் தந்தையுடன் வசித்து வருகிறார். இரண்டாவது மகள் குமாரபாளையத்தில் உள்ள கணவருடன் வசித்து வருகிறார்.


ராதாகிருஷ்ணன் முதலில் சொந்தமாக தறிப்பட்டறை நடத்தி வந்தார். அந்தத் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் நூல் கமிஷன் ஏஜென்டாக வேலை பார்த்து வந்திருக்கிறார். இந்நிலையில்தான் ராதாகிருஷ்ணன் 13ந் தேதி மாலை "நான் ஆன்லைன் லாட்டரி சீட்டை நம்பி ரூ. 62 லட்சம் வரை இழந்துவிட்டேன். இனிமேலும் உயிருடன் இருந்தால் அதற்கு மேலும் அடிமையாகி விடுவேன். அதனால் நான் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொள்கிறேன்” என்று வீடியோவில் பதிவிட்டுவிட்டு ராதாகிருஷ்ணன் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இது தொடர்பாக வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். “தற்கொலை செய்து கொண்ட ராதாகிருஷ்ணன் 62 லட்சத்தை எந்த காலகட்டத்தில் எவ்வாறு இழந்தார் என்பதற்கான ஆதாரங்களை திரட்டும் பணியில் போலீசார் ஈடுபட்டு உள்ளனர். இப்போது முதல் கட்ட விசாரனை நடை பெற்று வருகிறது. தற்கொலைக்கான உண்மையான காரணம் என்ன? தற்கொலைக்கு தூண்டிய நபர் யார் என்பதை புலன் விசாரணை செய்து வருகிறோம். ஈரோடு மாவட்டத்தில் எவ்வித சட்டவிரோத செயல்களுக்கும் இடமில்லை. மிக கடுமையான நடவடிக்கையும் தொடர் கண்காணிப்பையும் செய்து வருகிறோம். அரசு உத்தரவுப்படி குற்றச் செயலில் ஈடுபடும் நபர் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்" என உறுதியாக கூறினார் மாவட்ட எஸ்.பி. சசிமோகன்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT