ADVERTISEMENT

நேருக்கு நேர் மோதிய இருசக்கர வாகனங்கள்; கல்லூரி மாணவர்களுக்கு நேர்ந்த சோகம்

02:29 PM Oct 20, 2023 | mathi23

ADVERTISEMENT

ADVERTISEMENT

சென்னை அம்பத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் ஹரிஸ் (20). இவர் அரும்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். இந்த நிலையில், தனது நண்பரான அம்பத்தூரைச் சேர்ந்த தருண் (23) என்பவருடன் ராயப்பேட்டையில் நடைபெற்ற திருவிழாவில் கலந்து கொள்வதற்காக இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். இதையடுத்து, திருவிழா முடிந்து நேற்று அதிகாலை வீடு திரும்புவதற்காக அதே வண்டியில் வந்து கொண்டிருந்தனர்.

அப்போது அவர்கள், வில்லிவாக்கம், நியூ ஆவடி ரோடு சந்திப்பு வழியாக வந்த போது எதிரே வந்த மற்றொரு இருசக்கர வாகனத்தின் மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்கு ஆளாகினர். இந்த சம்பவத்தில் இருசக்கர வாகனம் ஓட்டி வந்த ஹரிஸ் மற்றும் எதிரே இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்தவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். ஹரிஸுக்கு பின்னால் இருசக்கர வாகனத்தில் அமர்ந்திருந்த தருணும், எதிரில் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்திருந்தவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இவர்களது அலறல் சத்தத்தால் அந்த பகுதியில் இருந்தவர்கள் சம்பவ இடத்திற்கு ஓடி வந்தனர். மேலும், இது குறித்து திருமங்கலம் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர்.

தகவல் அறிந்த காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பலியான ஹரிஸையும், மற்றொரு நபரையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், காயமடைந்த இருவரும் அதே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அவர்கள் நடத்திய முதற்கட்ட விசாரணையில், எதிரே இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்தவர் வில்லிவாக்கத்தை சேர்ந்த ஜெயபிரகாஷ் (23) என்பது தெரியவந்தது. மேலும், விபத்தில் பலியான இரண்டு பேரும் ஹெல்மெட் அணியவில்லை என்பதும், இருவரும் இருசக்கர வாகனத்தை அதிவேகமாக ஓட்டி வந்ததால் தான் இந்த விபத்து நடந்துள்ளது என்று காவல்துறையினருக்கு தெரியவந்தது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT