ADVERTISEMENT

சிறுத்தையால் 3 வயது சிறுமிக்கு நேர்ந்த சோகம்; வனத்துறை தீவிர ஆலோசனை

08:41 AM Jan 07, 2024 | prabukumar@nak…

நீலகிரி மாவட்டம் பந்தலூர் பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டப் பகுதியில் சிறுத்தைகள் நடமாட்டம் அதிகளவில் இருந்து வருகிறது. இந்தச் சூழலில் மேங்கோ ரேஞ்ச் பகுதியில் 3 வயது சிறுமி ஒருவர் நேற்று (06.01.2024) அங்கன்வாடியிலிருந்து வீட்டிற்கு சென்றுகொண்டிருந்தபோது அங்கு வந்த சிறுத்தை ஒன்று, அந்த குழந்தையை அங்குள்ள தேயிலைத் தோட்டத்திற்கு இழுத்துச் சென்று தாக்கியுள்ளது. குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு அங்கிருந்தவர்கள், அந்தப் பகுதிக்கு உடனடியாக ஓடி வந்து படுகாயமடைந்த குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயன்றனர். ஆனால், அந்த குழந்தை மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தது. ஏற்கனவே 5 பேரை சிறுத்தை தாக்கியிருப்பதால், 3 வயது குழந்தையைத் தாக்கியது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ADVERTISEMENT

கடந்த 21 ஆம் தேதி சிறுத்தை தாக்கியதில் பழங்குடியின பெண் உயிரிழந்த நிலையில், தற்போது வடமாநிலத் தொழிலாளியின் 3 வயது குழந்தை சிறுத்தை தாக்கி உயிரிழந்துள்ள சம்பவம் பொதுமக்கள் மத்தியில் மிகுந்த அச்சம் ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் பொதுமக்களை அச்சுறுத்தி வரும் சிறுத்தையைப் பிடிக்க வலியுறுத்தி அப்பகுதி மக்கள் இரவு முழுவதும் மறியலில் ஈடுபட்டனர். மேலும் உடனடியாக சிறுத்தையைப் பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கூடலூர் மற்றும் பந்தலூர் ஆகிய பகுதிகளில் உள்ள வணிகர்கள் கடையடைப்பு போராட்டம் நடத்த உள்ளனர்.

ADVERTISEMENT

இதனையடுத்து கும்கி யானை உதவியுடன் சிறுத்தையைப் பிடிக்க வனத்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக கும்கி யானை வரவழைக்கப்பட்டுள்ளது. அதே சமயம் மயக்க ஊசி செலுத்தி சிறுத்தையைப் பிடிக்கவும் வனத்துறை மற்றும் கால்நடை மருத்துவர்கள் டிரோன் கேமராக்கள் மூலம் கண்காணித்து வருகின்றனர். மேலும் சிறுத்தையை சுட்டுப் பிடிக்க வனத்துறை சார்பில் தீவிர ஆலோசனை நடந்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT