அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் என்ற ஊரில் சாலையோரம் ஒரு டீக்கடை வைத்து நடத்தி வருகிறார் வீரமணி என்பவர். இவரது டீ கடையில் ஊர்மக்கள் அக்கம் பக்கத்து கிராம மக்கள் தினசரி டீ குடிக்க வருவார்கள். வழக்கம்போல் நேற்று வீரமணி டீக்கடையில் அதே பகுதியைச் சேர்ந்த சீமான், பாஸ்கர் உட்பட சிலர் கடையில் உட்கார்ந்து டீ குடித்துக் கொண்டிருந்தார்கள்.
அப்போது அந்த வழியே தீயனூரை சேர்ந்த சண்முகம் என்பவர் விவசாயத்திற்கு பயன்படுத்தும் டிராக்டரை ஓட்டிக்கொண்டு வந்தார். அப்படி வரும்போது சண்முகத்தின் கட்டுப்பாட்டை இழந்த அந்த டிராக்டர் வீரமணி டீ கடையின் சுவரை இடித்துத் தள்ளிவிட்டு உள்ளே பாய்ந்தது. அப்போது டீக்கடைக்குள் அமர்ந்து டீ குடித்துக்கொண்டிருந்த சீமான், பாஸ்கர் மற்றும் டீக்கடை உரிமையாளர் வீரமணி ஆகிய மூவரும் படுகாயம் அடைந்தனர்.
அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து அவர்களை மீட்டு அரியலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதில் மருத்துவமனைக்கு வரும் வழியிலேயே சீமான் என்பவர் உயிரிழந்துவிட்டார். பாஸ்கர், வீரமணி ஆகிய இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து விக்கிரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து டிராக்டர் டிரைவர் சண்முகத்தை கைது செய்துள்ளனர். அந்த டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டு காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.