தமிழகத்துக்கு முன்கூட்டியே தேர்தல் நடத்தலாமா என சென்னையில் இரண்டாவது நாளாக தலைமை தேர்தல் ஆணையத்தின் உயர்மட்டக் குழு ஆலோசனை நடத்தி வருகிறது.
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் தொடர்பாக, சென்னையில் கிண்டியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையத்தின் செயலாளர் உமேஷ் சின்ஹா தலைமையில் இரண்டாவது நாளாக தேர்தல் ஆணையத்தின் உயர்மட்ட குழுக் கூட்டம் நடைபெற்று வருகிறது.
இந்த கூட்டத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு, தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம், தமிழக உள்துறைச் செயலாளர் பிரபாகர், தமிழக காவல்துறை டி.ஜி.பி. திரிபாதி, வருவாய்த்துறை செயலாளர், சுகாதாரத்துறை செயலாளர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதனிடையே, நேற்று (21/12/2020) அனைத்து கட்சிகளுடன் இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையத்தின் உயர்மட்டக் குழு ஆலோசனை நடத்தியது. அப்போது, தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்கூட்டியே நடத்த வேண்டும். அதாவது அடுத்தாண்டு ஏப்ரல் மூன்றாவது வாரத்தில் தேர்தலை நடத்த வேண்டும் என்று அ.தி.மு.க. வலியுறுத்தியது. அதேபோல், வழக்கம் போல தமிழகத்தில் ஒரே கட்டமாகத் தேர்தலை நடத்த தி.மு.க. வலியுறுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.