ADVERTISEMENT

போலீசாருக்கு மிரட்டல் பேரணி; விசிக மாவட்டச் செயலாளர் இடைநீக்கம்

12:20 PM Jan 30, 2023 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

திருவண்ணாமலை மாவட்ட விசிக மாவட்டச் செயலாளரை அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் இடைநீக்கம் செய்ய உத்தரவிட்டுள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு எதிர்புற வணிக வளாகத்தினுள் ஒரு கடையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மா.செ பகலவன் கட்சி அலுவலகம் வைத்துள்ளார். அந்த வணிக வளாகத்துக்கு பின்புறம் ஊராட்சி ஒன்றிய அலுவலகமும் 3 கடைகளைக் கட்டி வாடகைக்கு விட்டுள்ளது. அதில் ஒரு கடையை டெண்டர் வழியாக எடுத்து நடத்தி வருகிறார் சின்னக்கண்ணு. கடந்த சில வாரங்களுக்கு முன்பு சின்னகண்ணுவின் கடையின் சுவரை கட்சி அலுவலகத்தின் வழியாக உடைத்து அந்தக் கடையை ஆக்கிரமித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வடக்கு மாவட்டச் செயலாளர் பகலவன் என்கிற பாஸ்கரன், ஆரணி ஒ.செ ரமேஷ் அதனைக் கட்சி அலுவலகத்தோடு இணைத்துள்ளனர்.

இதனால் அதிர்ச்சியான சின்னகண்ணு ஆரணி நகர காவல் நிலையத்தில் பாஸ்கரன், ரமேஷ் உட்பட சிலர் மீது புகார் தந்துள்ளார். புகாரை பெற்ற போலீசார் விசாரணைக்கு பலமுறை பகலவன் என்கிற பாஸ்கரனை அழைத்தும் வரவில்லையாம். நீண்ட வற்புறுத்தலுக்கு பின் விசாரணைக்கு வந்தவர், 'என்னையே விசாரணைக்கு அழைப்பியா?' என காவல்நிலையத்திலிருந்த எஸ்.எஸ்.ஐ கிருஷ்ணமூர்த்தியை ஒருமையில் பேசியவர், அவரின் சாதி பெயரைக் கேட்டு மிரட்டும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியது. இதன் பின்னர் கடந்த ஜனவரி 8 ஆம் தேதி அதிகாரியை பணி செய்ய விடாமல் தடுத்தார், கட்டடம் இடித்து ஆக்கிரமிப்பு போன்ற குற்றச்சாட்டின் கீழ் பாஸ்கரன், ரமேஷ் இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்துச் செல்லும்போதே காவல் டெம்போ ட்ராவலரை முற்றுகையிட்டு அவரது ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். அவர்களிடம் இருந்து மீண்டு நீதிபதி முன் நிறுத்தி நீதிமன்ற உத்தரவுப்படி அவரை சிறையில் அடைத்தனர்.

சிறையிலிருந்த பாஸ்கரனுக்கு கடந்த ஜனவரி 26 ஆம் தேதி பிணை கிடைத்தது. வேலூர் மத்திய சிறையிலிருந்து வெளியே வந்தவருக்கு மாலை, மரியாதை செய்து காரில் அவரை ஊர்வலமாக பந்தாவாக அழைத்து வந்தனர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர். ஆரணி நகரத்துக்குள் அனுமதி இல்லாமல் நூற்றுக்கும் அதிகமானவர்கள் கலந்துகொண்டு ஊர்வலம் நடத்தினர். அப்போது மா.செ பாஸ்கரன் போலீசுக்கு எதிராக குரல் எழுப்ப அவரது ஆதரவாளர்கள் பின்பாட்டு குரல் எழுப்பினர். வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்த ஆரணி நகர காவல் நிலையம் முன்பும் ஊர்வலமாக வந்து அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் கோஷம் எழுப்பினர். இதனை போலீசாரால் வேடிக்கை மட்டுமே பார்க்க முடிந்தது.

காவல்துறையை படுமோசமாக விமர்சிக்கும் இந்த வீடியோ சோசியல் மீடியாவில் ட்ரண்டாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது காவல்துறை தலைமை கவனத்துக்கு சென்றுள்ளது. வடக்கு மண்டல காவல்துறை அதிகாரிகள், இதுகுறித்து திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் விசாரித்துள்ளனர். காவல்துறை அனுமதி இல்லாமல் ஊர்வலம் நடத்தியவர்கள், காவல்துறைக்கு எதிராக கோஷமிட்டவர்கள் என 50க்கு மேற்பட்டோர் மீது 10 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்ய முடிவு செய்துள்ளனர். இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்ட விசிக செயலாளர் பகலவன் கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். பகலவன் கட்சியின் நற்பெயருக்கு ஊறு விளைவித்ததாகக் கூறி இதற்கான அறிவிப்பினை கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT