இந்த மசோதா மூலம், மருத்துவ கவுன்சிலின் அனைத்து அதிகாரங்களும் பறிக்கப்படுவதுடன், மருத்துவ சேவைகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட வாய்ப்புள்ளதாக இந்திய மருத்துவ சங்கம் கருத்து வெளியிட்டது. மேலும் எம்பிபிஎஸ் படிப்பின் இறுதி தேர்வு, நெக்ஸ்ட் (NATIONAL EXIT TEST- "நேஷனல் எக்சிட் டெஸ்ட்") என்ற பெயரில் பொதுத்தேர்வாக நடத்துவதற்கும், இந்த மசோதாவில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதால் பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 300- க்கும் மேற்பட்ட மருத்துவ மாணவர்கள் ஒன்றிணைந்து மருத்துவ கல்லூரி வளாகத்தில் தேசிய மருத்துவ ஆணைய மசோதாவுக்கும்,நெக்ஸ்ட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து வகுப்புகளை புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பொது மக்கள் பெரிதும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.
இதனிடையே டெல்லியில் இன்று இந்திய மருத்துவ சங்கக்கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் ஆகஸ்ட் 8- ஆம் தேதி நாடு தழுவிய மருத்துவர்கள் வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. ஆகஸ்ட் 8- ஆம் தேதி காலை 06.00 AM முதல் 24 மணி நேரம் மருத்துவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுப்படவுள்ளனர். மருத்துவர்களின் வேலை நிறுத்த அறிவிப்பால் மருத்துவமனை உள்நோயாளிகள், வெளிநோயாளிகள் என பொதுமக்கள் அனைவரும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.