ADVERTISEMENT

திருவண்ணாமலை தீப திருவிழா; பேருந்தில் செல்வோர் கவனத்திற்கு

03:33 PM Nov 21, 2023 | prabukumar@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

திருவண்ணாமலை அருணாச்சலேசுவரர் திருக்கோவிலில் கார்த்திகை தீப பெருவிழா நவம்பர் 17 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால், வெளியூரில் இருந்து வரும் பக்தர்களின் வசதிக்காக கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

இது குறித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில் கார்த்திகை தீபத் திருநாள் 26/11/2023 அன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 06.00 மணிக்கு நடைபெறவுள்ளதை முன்னிட்டும், 27/11/2023 அன்று பௌர்ணமி கிரிவலத்தை முன்னிட்டும், 25/11/2023 சனிக்கிழமை முதல் 27/11/2023 வரை அனைத்து பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் சார்பாக சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. சென்னையிலிருந்தும் தமிழ்நாட்டின் பிற முக்கிய நகரங்கள் மற்றும் அண்டை மாநிலங்களான பெங்களூரு, புதுச்சேரி ஆகிய இடங்களில் இருந்தும் மேற்கண்ட நாட்களில் 2700 சிறப்புப் பேருந்துகள் மூலம் 6947 நடைகள் (trip) பக்தர்கள் வசதிக்காக இயக்கப்பட உள்ளன.

மேலும், திருவண்ணாமலை நகரில் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள 9 தற்காலிகப் பேருந்து நிலையங்களிலிருந்து பக்தர்கள் கிரிவலப் பாதை சென்று திரும்பி வருவதற்கு வசதியாக 40 சிற்றுந்துகள் பயணிகள் கட்டணமில்லா சிற்றுந்துகளாக இயக்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பயணிகள் தங்களின் பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டு பயணம் செய்ய ஏதுவாக https://www.tnstc.in என்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்து பயன்படுத்திக் கொள்ளலாம்.

அதன்படி வேலூர் ரோடு அண்ணா ஆர்ச் பகுதியில் (Anna Arch) அமைக்கப்பட்டுள்ள தற்காலிகப் பேருந்து நிலையத்தில் இருந்து போளூர், வேலூர், ஆரணி, ஆற்காடு, செய்யாறு மார்க்கமாகச் செல்லும் பேருந்துகள் இயக்கப்படும். அவரலூர்பேட்டை ரோடு SRGDS பள்ளி எதிரில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பேருந்து நிலையத்தில் இருந்து சேத்துப்பட்டு, வந்தவாசி, காஞ்சிபுரம் மார்க்கமாக செல்லும் பேருந்துகள் இயக்கப்படும். திண்டிவனம் ரோடு - ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பேருந்து நிலையத்தில் இருந்து செஞ்சி, திண்டிவனம், புதுச்சேரி, தாம்பரம், அடையாறு, கோயம்பேடு மார்க்கமாக செல்லும் பேருந்துகள் இயக்கப்படும்.

வேட்டவலம் ரோடு சர்வேயர் நகரில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பேருந்து நிலையத்தில் இருந்து வேட்டவலம், விழுப்புரம் மார்க்கமாக செல்லும் பேருந்துகள் இயக்கப்படும். திருக்கோவிலூர் ரோடு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகில், அருணை மருத்துவக் கல்லூரி அருகில் மற்றும் வெற்றி நகர் தற்காலிக பேருந்து நிலையத்தில் இருந்து திருக்கோவிலூர், பண்ருட்டி, கடலூர், சிதம்பரம், கும்பகோணம், திட்டக்குடி, விருத்தாசலம், நாகப்பட்டினம், திருச்சி, மதுரை, திண்டுக்கல். திருநெல்வேலி மார்க்கமாக செல்லும் பேருந்துகள் இயக்கப்படும்.

மணலூர்பேட்டை ரோடு - செந்தமிழ் நகரில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பேருந்து நிலையத்தில் இருந்து மணலூர்பேட்டை, கள்ளக்குறிச்சி, தானிப்பாடி, சாத்தனூர் அணை மார்க்கமாக செல்லும் பேருந்துகள் இயக்கப்படும். செங்கம் ரோடு - அத்தியந்தல் மற்றும் சுபிக்க்ஷா கார்டனில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பேருந்து நிலையத்தில் இருந்து செங்கம், தருமபுரி, திருப்பத்தூர், சேலம், பெங்களூர், ஓசூர், ஈரோடு, கோயம்புத்தூர் மார்க்கமாக செல்லும் பேருந்துகள் இயக்கப்படும். காஞ்சி ரோடு டான் பாஸ்கோ பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பேருந்து நிலையத்தில் இருந்து காஞ்சி, மேல்சோழங்குப்பம் மார்க்கமாக செல்லும் பேருந்துகள் இயக்கப்படும்.

மேலும், பயணிகள் அடர்வு குறையும் வரை தேவைக்கு ஏற்ப பேருந்துகளை இயக்கிடவும் பக்தர்களுக்கு எவ்விதமான அசௌகரியம் ஏற்படாமல் அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொள்ள போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர்களுக்கு தகுந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது” எனப் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT