தஞ்சை பெரிய கோயில் குட முழுக்கு விழா நாளை நடைபெற உள்ளது. இந்த விழாவிற்கான பூஜைகள் ஜனவரி 27- ம் தேதி முதல் நடைபெற்று வருகின்றன. இதில் உச்சரிக்கும் சமஸ்கிருத மந்திரங்களை தமிழில் உச்சரிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் வலியுறுத்தினர்.
மந்திரங்களைத் தமிழில் சொல்லும்போதுதான் அதன் அர்த்தங்களை பக்தர்கள் அறிந்து கொள்ள முடியும் என்பதால், குடமுழுக்கு விழாவில் உச்சரிக்கும் மந்திரங்களைத் தமிழில் மொழி பெயர்த்து தெரிவிக்கும்படி அறநிலையத்துறைக்கு உத்தரவிடக் கோரி திருவள்ளூரைச் சேர்ந்த மணிகானந்தா என்பவர் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன் விசாரணைக்கு வந்தபோது, இந்த விவகாரம் தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ஏற்கனவே உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும், குடமுழுக்கு விழாவின் போது தமிழுக்கு முன்னுரிமை வழங்கப்படும் எனவும் அறநிலையத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.