ADVERTISEMENT

பாலியல் வன்கொடுமை முயற்சியில் இளம்பெண் கொடூரக்கொலை; வாலிபரின் வெறிச்செயல்

03:45 PM Dec 22, 2023 | mathi23

தென்காசி மாவட்டம், புளியங்குடி - சிந்தாமணி மெயின் ரோட்டில் உள்ள வயல்வெளியில் கடந்த 18ஆம் தேதி 22 வயது இளம்பெண் ஒருவர் அரை நிர்வாணமாக பிணமாக கிடந்தார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அங்கிருந்தவர்கள், இந்த சம்பவம் குறித்து உடனடியாக புளியங்குடி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்த புளியங்குடி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்து கிடந்த அந்த பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ADVERTISEMENT

இதனையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அந்த விசாரணையில், இறந்து கிடந்த அந்த இளம்பெண், புளியங்குடி சிந்தாமணி முத்துமாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த மாரியம்மாள் என்பவரது மகள் என்பது தெரியவந்தது. மேலும், மாரியம்மாளும், அவரும் தனியாக வசித்து வருகின்றனர். அந்த இளம்பெண், புளியங்குடியில் உள்ள ஒரு கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். இதனிடையே, கடந்த 17ஆம் தேதி இரவு வேலை முடிந்து அவர் வீடு திரும்பாததால் மாரியம்மாள் பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இந்த நிலையில் தான், அடுத்த நாள் காலையில் இறந்துள்ளதாக காவல்துறையினருக்கு தெரியவந்தது.

ADVERTISEMENT

இதனை தொடர்ந்து, பாலியல் வன்கொடுமை முயற்சியில் இளம்பெண் வயல்வெளியில் தேங்கிய தண்ணீரில் மூழ்கடிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் என்று பிரேத பரிசோதன அறிக்கை மூலம் காவல்துறையினருக்கு தெரியவந்தது. இதையடுத்து, அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். அதில், அந்த இளம்பெண்னை ஒரு நபர் பின் தொடர்ந்து செல்வது தெரியவந்தது. அதன் அடிப்படையில், அந்த நபரை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தியதில், புளியங்குடி சிந்தாமணி பகுதியைச் சேர்ந்த கருப்பசாமி (35) என்பது தெரியவந்தது.

மேலும், கடந்த 17ஆம் தேதி மாலையில் அந்த இளம்பெண்னை தொடர்ந்து சென்று கருப்பசாமி தனது ஆசைக்கு இணங்குமாறு கூறியுள்ளார். அதற்கு அந்த இளம்பெண் மறுப்பு தெரிவித்து தப்பிக்க முயன்றுள்ளார். இதில் ஆத்திரமடைந்த கருப்பசாமி, இளம்பெண்ணை வயல்வெளியில் தள்ளி நீரில் மூழ்கடித்து கொலை செய்துள்ளார், என்ற அதிர்ச்சி தகவல் தெரிந்தது. அதன் பின்னர், கருப்பசாமி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இதையடுத்து, அவரை சிவகிரி கோர்ட்டில் ஆஜர்படுத்தி பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர். பாலியல் வன்கொடுமை செய்யும் முயற்சியில் இளம்பெண்ணை வாலிபர் ஒருவர் கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT