கடலூர் மாவட்டம் கம்மாபுரம் அருகேயுள்ளது பெரு வரப்பூர் கிராமம். இங்கு அரசு உதவி பெரும் தொடக்கப் பள்ளி ஒன்று நடைபெற்று வருகிறது. இந்த பள்ளியில் சுமார் 100 பிள்ளைகள் படிக்கின்றனர். இங்கு ஏற்கனவே தலைமையாசிரியர், உதவி ஆசிரியர் என இருவர் பணியில் இருந்தனர். இதில் உதவி ஆசிரியர் கடந்த 2017ம் ஆண்டு பணி நிறைவு பெற்று ஓய்வு பெற்று சென்று விட்டார். இதன் பிறகு தலைமையாசிரியை பார்வதி மட்டுமே இங்கு பணி செய்துள்ளார். இவரும் கடந்த ஜூன் 30ம் தேதியுடன் பணி ஓய்வு பெற்றுள்ளார். இருந்தும் கல்வி ஆண்டுக்கு இடையில் ஆசிரியர்கள் பணி ஓய்வு பெற்றாலும் கூட அந்த கல்வி அண்டு முழுவதும் பணி செய்யலாம் என்பது அரசு விதி.
இதன் அடிப்படையில் கம்மாபுரம் வட்டார கல்வி அலுவலர் அறிவழகன், தலைமையாசிரியை பார்வதியை 1.7.2019 முதல் 31 .5.2020 வரை பணி நீட்டிப்பு செய்து அதற்கான உத்தரவை அளித்துள்ளார். ஆனால் பள்ளி நிர்வாகி ரங்கசாமி என்பவர் இந்த பணி ஆணையை ஏற்க முடியாது என 1.7.2019 அன்று பள்ளிக்கு வந்த ஆசிரியை பார்வதியை உள்ளே விடாமல் தடுத்து வெளியே அனுப்பியுள்ளார்.
கல்வி அதிகாரியின் இந்த முறையான உத்தரவை காட்டியும் பள்ளி தாளார் கரார் காட்டினார். இதனால் கோபமுற்ற ஆசிரியை பார்வதி பள்ளி முன்பு அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார். விஷயம் பரவியதும் ஊர் மக்கள் போலீசார் கல்வி அதிகாரிகள் என அனைவரும் பள்ளிக்குள் குவிந்தனர்.