சென்னை ஆர்.ஏ.புரத்தில் வடமாநில தொழிலாளர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள சமுதாயக் கூடத்தில் ஆய்வு செய்த முதல்வர் பழனிசாமி, வெளிமாநில தொழிலாளர்களுக்கு நிவாரண உதவியும், உணவும் வழங்கினார். அதைத் தொடர்ந்து முதல்வர் சென்னையில் மற்ற முகாம்களுக்கும் சென்று ஆய்வு செய்தார்.
ஆய்வுக்குப் பின் வேளச்சேரியில் செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் பழனிசாமி, "வெளிமாநிலங்களிலிருந்து வந்து தமிழகத்தில் தங்கியுள்ள தொழிலாளர்களுக்கு அரசு பல்வேறு உதவி செய்துள்ளது.வெளிமாநில தொழிலாளர்களுக்குத் தங்குமிடம், உணவு, உடை வழங்கப்பட்டுள்ளது. வெளிமாநிலத் தொழிலாளர்கள் 1.34 லட்சம் பேர் தமிழகத்தில் தங்கி வேலை செய்கின்றனர். அத்தியாவசியப் பொருட்களை கொண்டு வருவதற்குத் தடை இல்லை.
மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்கவே ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. கரோனாவின் தாக்கத்தைப் பற்றி தெரியாமல் மக்கள் வெளியே சுற்றுகின்றனர்.கரோனா பரவாமல் தடுக்க மக்கள் அரசுக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும். மக்களைத் துன்புறுத்த 144 தடை உத்தரவு போடவில்லை;மக்களின் பாதுகாப்புக்காகவே போடப்பட்டது. அத்தியாவசியத் தேவையின்றி வெளியே வருபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். மக்கள் வெளியே சுற்றுவது அதிகரித்தால் 144 தடை உத்தரவைக் கடுமையாக்க நேரிடும்.தமிழக அரசு ஊழியரின் சம்பளம் பிடித்தம் செய்யப்படமாட்டாது.
ஏப்ரல் மாத இலவச ரேஷன் பொருட்களை இந்த மாத இறுதி வரை பெற்றுக்கொள்ளலாம்.டோக்கன் தரும்போதே கரோனா நிவாரண நிதி ரூபாய் 1,000 குடும்ப அட்டைதாரர்களுக்குத் தரப்படும்.அரசு அங்கீகரித்த செய்தியாளர்களுக்கு தலா ரூபாய் 3,000 நிவாரண உதவி வழங்கப்படும்." இவ்வாறு முதல்வர் பழனிசாமி பேசினார்.
ஆய்வின் போது முதல்வருடன் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, ஜெயக்குமார், சென்னை மாநகராட்சி ஆணையாளர் பிரகாஷ் மற்றும் உயர் அதிகாரிகள் ஆகியோர் உடனிருந்தனர்.