ADVERTISEMENT

தமிழகம் முழுவதும் இன்று ரேஷன் கடைகள் செயல்படாது!

11:18 AM Apr 06, 2023 | prabukumar@nak…

ADVERTISEMENT

மாதிரி படம்

ADVERTISEMENT

சிதம்பரம் லால்கான் தெருவைச் சேர்ந்தவர் ஜெயச்சந்திர ராஜா. இவர் தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளராகப் பணியாற்றி வருகிறார். மேலும் தமிழ்நாடு அரசு நியாய விலைக் கடை பணியாளர் சங்கத்தின் மாநிலத் தலைவராகவும் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், இவர் புதன்கிழமை காலை 10 மணி அளவில் சிதம்பரம் நகரத்திற்குட்பட்ட மெய் காவல் தெருவில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். இவரை இரு சக்கர வாகனத்தில் வந்த இரண்டு நபர்கள் வழிமறித்துள்ளனர். இவர் நின்றபோது அவர்கள் கத்தியை எடுத்துள்ளனர். இதனைப் பார்த்து பயந்து இருசக்கர வாகனத்தை அதே இடத்தில் போட்டுவிட்டு இவர் ஓடியுள்ளார்.

அப்போது இவரை விடாமல் துரத்திச் சென்று இவரது தலையில் மூன்று இடத்தில் பலமாக வெட்டியுள்ளனர். இவர்கள் வெட்டும்போது தடுத்ததால் இவரது கைவிரல் துண்டாகியுள்ளது. இதுகுறித்து அப்பகுதியில் உள்ளவர்கள் கூச்சலிட்டதால் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் தப்பி ஓடிவிட்டனர். பின்னர் இவரை 108 அவசர ஊர்தி மூலம் கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இது குறித்த தகவல் அறிந்த சிதம்பரம் நகர காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். பின்னர் வெட்டப்பட்ட இடத்தில் இருந்த ரத்தக் கரைகளை காவல்துறையினர் தண்ணீர் ஊற்றி அழித்தனர்.

இதேபோல் கடந்த மாதம் 21 ஆம் தேதி இரவு, இவர் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, பீர் பாட்டிலால் மர்ம நபர்கள் இவரது தலையில் அடித்ததால் காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். இது குறித்து சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இவர் மீது மீண்டும் பட்டப் பகலில் பொதுமக்கள் நடமாட்டம் உள்ள நேரத்தில் மர்ம நபர்களால் கொலைவெறி தாக்குதல் நடைபெற்ற சம்பவம் தமிழ்நாடு அரசு நியாய விலைக் கடை பணியாளர் சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்க சிறப்பு தலைவர் கு.பாலசுப்ரமணியன் கடலூரில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், "ரேஷன் கடை பணியாளர் சங்க மாநிலத் தலைவர் ஜெயசந்திர ராஜாவை மர்ம நபர்கள் தாக்கியது தொடர்பாக போலீசார் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. பட்டப் பகலிலேயே அவரை வெட்டிக் கொலை செய்ய முயற்சி செய்துள்ளனர். திட்டமிட்டே மீண்டும் மீண்டும் தாக்கி வருகின்றனர். எனவே தமிழக உள்துறை செயலாளர் இதில் தலையிட்டு தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது விரைவில் கைது நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த சம்பவத்தை கண்டித்து வியாழக்கிழமை (06.04.2023) தமிழகம் முழுவதும் உள்ள 30 ஆயிரம் ரேஷன் கடைகளை மூடி போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்" என்று தெரிவித்தார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT