நாடு முழுவதும், 28,050 பேர் பாதிக்கப்பட்டதில், 1,201 பேர் உயிரிழந்துள்ளதாக, மத்திய அரசு தெரிவித்துள்ளது. பன்றி காய்ச்சல் தடுப்புக்கு, தடுப்பூசி மற்றும் மருந்துகள் இருந்தாலும், ஆரம்ப நிலையில் சிகிச்சை பெறாததே இறப்புக்கு காரணம் என, சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
திருச்சி அரசு மருத்துவமனையில் பன்றி காய்ச்சலுக்கு பலியான மன்னார்குடி பெண் உடலை குடும்பத்தினரிடம் நிர்வாகம் தர மறுத்தது. மாநகராட்சி சார்பில் உடல் தகனம் செய்யப்பட்டது. திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அண்டோரா தெருவை சேர்ந்தவர் டெய்லர் முருகானந்தம். இவரது மனைவி கலாவதி (47). கடந்த 15 நாட்களுக்கு முன் திருச்சியில் ஒரு திருமண விழாவில் கலந்து கொண்ட கலாவதிக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டது. கடந்த சில நாட்களாக அவதிப்பட்டு வந்த அவருக்கு, மன்னார்குடி மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் பலனில்லை. இதனால் திருச்சியில் உள்ள கே.எம்.சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மருத்துவ பரிசோதனையில் பன்றி காய்ச்சல் இருப்பது தெரியவந்தது. அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் குணமாகவில்லை.
இதையடுத்து திருச்சி அரசு மருத்துவமனையில் பன்றி காய்ச்சல் வார்டில் கடந்த வாரம் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி 19.11.2019 அதிகாலை கலாவதி இறந்தார். அவரது உடல் மருத்துவமனையில் வைக்கப்பட்டு இருந்தது. உடனடியாக, தொற்று ஏற்படாமல் தடுக்க, வார்டில் சுகாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில் இறுதிசடங்கு செய்ய கலாவதியின் உடலை தரும்படி உறவினர்கள் கேட்டனர். ஆனால் தொற்று நோய் பரவும் என்பதால் உடலை தர மருத்துவமனை நிர்வாகம் மறுத்துவிட்டது. இதையடுத்து திருச்சி ஓயாமரி மின்மயானத்தில் கலாவதி உடல் மாநகராட்சி சார்பில் நேற்று தகனம் செய்யப்பட்டது. இதுகுறித்து டீன் வனிதா கூறுகையில், "பன்றி காய்ச்சலில் பாதிக்கப்பட்ட கலாவதி, 2 தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று முடியாமல் இங்கு வந்தார். முதலிலேயே வந்திருந்தால் உரிய சிகிச்சை அளித்து காப்பாற்றி இருக்கலாம்" என்றார்.