ADVERTISEMENT

கல்வி புரட்சிக்கு வித்திட்ட சுவாமி சகஜானந்தா... கோரிக்கை வைக்கும் நந்தனார் பள்ளி முன்னாள் மாணவர்கள்

05:10 PM May 01, 2022 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

சுவாமி சகஜானந்தா ஏழை அடிதட்டுமக்கள் கல்வியால் மட்டுமே முன்னேற முடியும் என்ற உயரிய நோக்கில் கடந்த 100 ஆண்டுகளுக்கு முன் சிதம்பரம் அதன் சுற்றுவட்ட பகுதியில் திண்ணை பள்ளிகளை ஆரம்பித்து ஏழைமக்களுக்குக் கல்வியை கற்பித்து சமூக மாற்றத்திற்கு போராடிய இவர் ஆரணியை அடுத்துள்ள மேல்புதுப்பாக்கத்தில் பட்டியல் சமூகத்தில் 1890 ஜன 27-ல் பிறந்தார். இவரது இயற்பெயர் முனுசாமி. சிறுவயதிலிருந்தே ஆண்மீக பற்றுள்ள இவர் .குடும்ப வறுமையால் 8-ம் வகுப்புவரை கல்வி பயின்றார்.

பின்னர் கர்நாடக கோலார் தங்கசுரங்கத்தில் ‘பெற்றோர்களுடன் வேலை செய்துகொண்டு ஆன்மீக பற்று காரணமாக இவர் மாலை நேரத்தில் ஆன்மீக சொற்பொழிவு கேட்கக் கோவிலுக்குச் செல்லும் போது அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து சென்னை வியாசர்பாடியில் கரபாத்திரசுவாமிக்கு சீடராகப் பணியாற்றிய இவர் கடந்த 1910-ஆம் ஆண்டு ஏழை மற்றும் அடித்தட்டு மக்களுக்குச் சேவை செய்வதற்காகச் சிதம்பரத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார். இவர் சிதம்பரம் பகுதியில் சமூக நலன் மற்றும் ஆன்மீக சிந்தனையில் சிறப்பாகப் பணியாற்றியதால் அனைத்து சமூக மக்களும் இவருக்கு உதவியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து கல்வியறிவே என்னவென்று தெரியாத சிதம்பரத்தை சுற்றியுள்ள கிள்ளை, நஞ்சமகத்துவாழ்க்கை, கொடிப்பள்ளம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் திண்ணை பள்ளிகளைத் தொடங்கி அப்பகுதி மக்களிடம் யாசகம் பெற்று கல்வி கற்பிக்க வரும் மாணவர்களுக்கு உணவு வழங்கிக் கல்வியைக் கற்பித்து வந்துள்ளார்.

பின்னர் 1916-ஆம் ஆண்டு சிதம்பரம் அருகே ஆதிதிராவிடர் சமூக நாயன்மார்களில் ஒருவரான நந்தனார் பெயரில் ஓமக்குளத்தில் தொடக்க பள்ளியைத் தொடங்கினார். அதனைத் தொடர்ந்து அரசு நந்தனார் பெயரில் மேல்நிலைப்பள்ளி கட்டப்பட்டது. பின்னர் பெண்களுக்கு என மேல்நிலைப்பள்ளி, தனித்தனி விடுதி வசதிகளுடன் செயல்பட்டு வருகிறது. தற்போது தொழிற்கல்வி கூடமும் தொடங்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் தலைசிறந்த கல்வி நிறுவனங்களாகத் திகழ்ந்த இந்த இந்தப் பள்ளியில் அனைத்து சமூகத்தைச் சார்ந்த பல்வேறு அரசியல் தலைவர்கள், பல லட்சம் பட்டதாரிகள் உருவாகியுள்ளார்கள். பள்ளியின் சிறப்பை அறிந்த காந்தி, காமராஜர், நேரு உள்ளிட்ட தலைவர்கள் நேரில் வருகை தந்து பள்ளியின் கல்வி தரம் குறித்தும் ஒழுக்க நெறிகள் குறித்து பாராட்டியுள்ளனர். தற்போது இந்தக் கல்வி நிறுவனங்கள் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் செயல்பட்டு வருகிறது.

சகஜானந்தா கல்வி மற்றும் ஆன்மீக சேவையுடன் பொதுவாழ்கையிலும் தன்னை ஈடுபடுத்தி கொண்டார். அதன் பேரில் 34 ஆண்டுகள் சட்டப்பேரவை மற்றும் சட்ட மேலவை உறுப்பினராகவும் பணியாற்றி அனைத்து சமூக மக்களின் நன்மதிப்பை பெற்றார். தன் அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி தாழ்த்தப்பட்ட மக்களுக்கு உரிமைகளையும் நிவாரணங்களையும் சட்டப்பேரவையில் அவர்களின் குரலை ஒலிக்கச் செய்து பெற்றுத் தந்துள்ளார். இவரின் செயல்பாட்டால் சட்டமன்ற தந்தை என்று அழைக்கப்பட்டார். தமிழகத்தில் தமிழ் புலவர்களில் 8-வது புலவராகவும், சிதம்பரம் நகர் மன்ற துணைத் தலைவராகவும் சிறப்பாகப் பணியாற்றியுள்ளார்.

இவரது அயராத முனைப்பாலும், பல போராட்டங்களாலும் 1947-ல் அனைவரும் ஆலயத்துக்குச் சென்று வழிபடலாம் என்ற சட்டம் நிறைவேற்றப்பட்டது. விளிம்பு நிலை மக்களின் முன்னேற்றத்திற்காகப் பாடுபட்ட சுவாமி சகஜானந்தர், 1959-ம் ஆண்டு மே 1ம் தேதி 69-வது வயதில் மறைந்தார்.

அடிதட்டு ஏழை மக்களிடம் கல்வி புரட்சியை ஏற்படுத்திய சுவாமி சகஜானந்தாவை வரும் தலைமுறைகள் மறந்துவிட கூடாது அவரது பணிகள் குறித்து அனைவரும் அறியும் வகையில் அவர் வாழ்ந்த இடமான நந்தனார் ஆண்கள் பள்ளி வாயிலில் அவரது சிலையுடன் மணிமண்டபம் அமைக்க வேண்டும். என்று கடந்த 2011-ஆம் ஆண்டு மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றிய கே. பாலகிருஷ்ணன் (தற்போது சிபிஎம் மாநில செயலாளர்) சகஜானந்தா பணிகள் குறித்து சட்டமன்றத்தில் பேசினார். பின்னர் அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவிடம் அவரின் கல்வி பணிகள், ஆன்மிகம், தமிழ்வளர்ப்பு உள்ளிட்டவை குறித்து நேரில் விளக்கிகூறி கடிதமும் வழங்கினார். இதனை ஆய்வில் எடுத்துக் கொண்ட ஜெயலலிதா சகஜானந்தாவின் அரும்பணிகளை போற்றும் வகையில் ரூ125 லட்சம் செலவில் அவர் வாழ்ந்த இடத்தில் மணிமண்டபம் அமைக்க உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து அரசு மணிமண்டபம் அமைக்கப்பட்டு தற்போது அவர் பிறந்த ஜன 27-ந்தேதி அரசு விழாவாகக் கொண்டாடி வருகிறது. இதனை அனைத்து சமூக மக்கள் வரவேற்றுள்ளனர். கல்வி புரட்சி ஏற்படுத்திச் சமூக மாற்றத்திற்கு போராடிய சுவாமி சகஜானந்தா மறைந்த தினமான மே 1-ந்தேதி தொழிலாளர் தினத்தில் அவரின் 63-வது ஆண்டு நினைவை அனைவரும் போற்றுவோம்.

அதேநேரத்தில் மணிமண்டப வளாகத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் பாராளுமன்ற மேலவை உறுப்பினராக இருந்த ரங்கராஜன் தொகுதி வளர்ச்சி நிதி ரூ 24 லட்சத்தில் மாணவர்களுக்கு அரசு தேர்விற்கான பயிற்சி மையம், தமிழக அரசின் பொது நிதி ரூ 24 லட்சத்தில் நவீன நூலகம் கட்டப்பட்டு ஒரு ஆண்டாகக் கிடப்பில் உள்ளது. அதனைப் பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும். தமிழக சட்டப்பேரவையில் சட்டமன்ற தந்தையாகச் செயல்பட்ட சகஜானந்தாவின் படத்தை வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை நந்தனார் பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள், சமூக ஆர்வலர்கள், சகஜானந்தா மீது பற்றுள்ளவர்கள் மார்க்சிஸ்ட் கட்சி உள்ளிட்ட அனைத்து சமூக மக்களின் கோரிக்கையாக உள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT