ADVERTISEMENT

"இதுபோன்ற சம்பவம் கடைசி சம்பவமாக இருக்க வேண்டும்"- சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உருக்கம்! 

01:23 PM May 09, 2022 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

சட்டப்பேரவையில் மயிலாப்பூர் தொகுதிக்கு உட்பட்ட ராஜா அண்ணாமலைபுரத்தில் ஆக்கிரமிப்பு பகுதியில் உள்ள குடியிருப்புகள் அகற்றும் பணி தொடர்பாக, கொண்டு வரப்பட்ட கவனஈர்ப்பு தீர்மானத்துக்கு பதில் அளித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "மயிலாப்பூரில் நேற்று ஏற்பட்ட ஒரு சம்பவத்தைக் குறித்து, அதிலே கண்ணையா என்ற ஒருவர் தீக்குளித்து இன்று காலையிலே அவர் உயிரிழந்திருக்கிறார் என்ற அந்த நிலையில் சட்டமன்றத்திலே எதிர்க்கட்சித் துணை தலைவர் உள்ளிட்ட பல்வேறு கட்சியினுடைய தலைவர்கள் இது குறித்து பேசியுள்ளீர்கள்.

அதற்குரிய விளக்கத்தை வருவாய் துறை அமைச்சர், இங்கு விளக்கமாகக் குறிப்பிட்டு காட்டியிருக்கிறார். மயிலாப்பூரில் ஒரு விரும்பத்தகாத நிகழ்வு நடந்துள்ளது. உயிரிழந்த அந்த குடும்பத்தினருக்கு எனது ஆழந்த இரங்கலை நான் தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன். இனி வரக்கூடிய காலகட்டத்தில், இதுபோன்ற ஆக்கிரமிப்பு அகற்றும் பணி மேற்கொள்ளக் கூடிய நேரத்தில் முன்கூட்டியே, அந்த பகுதி மக்களுக்கு மறுகுடியமர்வு செய்யப்படும் இடம் குறித்து அவர்களுடைய கருத்து கேட்டு, அந்த பகுதி மக்களின் பிரதிநிதிகளுடன் கலந்து பேசி இணக்கமான சூழ்நிலையை நிச்சயமாக வரக்கூடிய காலகட்டத்தில் நாங்கள் ஏற்படுத்துவோம்.

புதிய இடத்திலே தேவைப்படும் அனைத்து வசதிகளோடு ஏற்படுத்தப்பட்ட பின்னரே மறுகுடியமர்வு செய்யப்படுவார்கள். இதற்காக மறுகுடியமர்வு கொள்கை அனைத்து மக்களின் நலன் சார்ந்த அம்சங்களாகக் கொண்டு விரைவிலே அதற்குரிய விதிமுறைகள் வகுக்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். இன்று நீங்கள் தெரிவித்த அனைத்து கருத்துக்களையும், அதைவிட கூடுதல் மனச்சுமையுடனும், ஆழ்ந்த துயரத்துடனும் நானும் இதிலே பங்கேற்கிறேன். இதுபோன்ற சம்பவம் கடைசி சம்பவமாக இருக்க வேண்டும் என்பது தான் என்னுடைய விருப்பம். நிச்சயமாக, இங்கே அமைச்சர் சொல்கின்ற போது அருகிலேயே, அந்த பகுதிகளிலேயே அந்த மறுகுடியமர்வு இருந்தால் சிறப்பாக இருக்கும் என்று கருதக்கூடிய அந்த நிலையை எடுத்து சொன்னார்.

ஏற்கனவே, குடிசை மாற்று வாரியத்தின் திட்டம் மூலமாக மந்தவெளி- மயிலாப்பூரில் கட்டப்பட்டு கொண்டிருக்கக் கூடிய வீடுகளில் நிச்சயமாக வீடுகள் ஒதுக்கித் தரப்படும் என்று அரசு முடிவெடுத்து இருக்கிறது" எனத் தெரிவித்தார்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT