ADVERTISEMENT

மாணவியின் உயிரை பறித்த மார்ஃபிங் புகைப்படம்! 

11:27 AM Oct 25, 2021 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

சமூக வலைதளங்களின் வளர்ச்சியால் சைபர் க்ரைம் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துவருகின்றன. இதில் அதிகமாக பாதிக்கப்படுபவர்கள் பெண்களாகவே உள்ளனர்.

சமீபத்தில் கேரள வாலிபர் ஒருவர், குமரி மாவட்டம் பளுகல் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவியைக் காதலிப்பதாகக் கூறி அந்த மாணவியின் புகைப்படத்தை மார்ஃபிங் செய்து சமூக வலைதளங்களில் பரவவிட்டதால் அந்த மாணவி தற்கொலை செய்துகொண்டார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குமரி மாவட்டம் பளுகல் மருதன்விளையைச் சேர்ந்த பீனா, வெளிநாட்டில் வேலை செய்துவருகிறார். இவரின் ஒரே மகள் ஆதிரா (19), படந்தாலுமூட்டில் உள்ள கல்லூரி ஒன்றில் வணிகவியல் 2ஆம் ஆண்டு படித்துவருகிறார். இவர், படந்தாலுமூட்டில் உள்ள அவரது உறவினர் அஜி என்பவர் வீட்டில் தங்கி படித்துவந்தார்.

கடந்த 23ஆம் தேதி மாலை அஜி வீட்டில் இருந்தவர்கள் வெளியே சென்றுள்ளனர். அப்போது வீட்டில் தனியாக இருந்த மாணவி அதிரா, தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். வெளியே சென்ற உறவினர்கள் வீட்டிற்கு வந்து ஆதிராவின் நிலையைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். அதன்பிறகு ஆதிராவின் தற்கொலை குறித்து அவர்கள், பளுகல் காவல் நிலையத்திற்குத் தெரிவித்துள்ளனர். உடனே அங்கு விரைந்த காவல்துறையினர், ஆதிராவின் உடலைக் கைப்பற்றி குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் ஆதிராவின் செல்ஃபோனை சோதனை செய்தனர். அப்போது, அவர் கடைசியாக கேரள வாலிபர் ஒருவரிடம் பேசியிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து காவல்துறை தரப்பில் தெரிவித்ததாவது, ‘ஆதிராவுக்கு கேரளா திருச்சூரைச் சேர்ந்த அஜய் என்ற வாலிபருடன் வாட்ஸ் அப் மூலம் தொடர்பு ஏற்பட்டுள்ளது. அதன்பிறகு வாட்ஸ் அப் பழக்கம் அவர்களைக் காதலர்களாக மாற்றியுள்ளது.

இந்த நிலையில் அஜய், ஆதிராவின் புகைப்படத்தை மார்ஃபிங் செய்து ஆதிராவுக்கு அனுப்பியுள்ளார். அதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த ஆதிரா, அவரிடம் சத்தம் போட்டு அந்தப் புகைப்படத்தை மாற்றச் சொல்லியிருக்கிறார். அதற்கு அஜய் 10 லட்சம் தந்தால் மாற்றலாம் என்றும் இல்லையென்றால் அந்தப் படத்தை சமூக வலைதளங்களில் பதிவிடப் போவதாகவும் கூறி அடிக்கடி மிரட்டி வந்துள்ளார்.

ஒரு கட்டத்தில் வெளிநாட்டில் இருக்கும் ஆதிராவின் தாயார் பீனாவுக்கும் அந்தப் புகைப்படத்தை அனுப்பியுள்ளார். இது தொடர்பாக ஆதிரா, மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் கொடுத்துள்ளார். ஆனாலும், தொடர்ந்து ஆதிராவை அஜய் மிரட்டி வந்துள்ளார். அதற்கு உடந்தையாக அஜய்யின் பெற்றோரும் இருந்துள்ளனர். இதில் ஆதிரா மிகுந்த மன வேதனையில் இருந்துள்ளார். சம்பவத்தன்றும் ஆதிராவை அவர் மிரட்டியுள்ளார். அதனால், யாரும் வீட்டில் இல்லாத நேரத்தில் ஆதிரா தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்’ என்று தெரிவிக்கின்றனர்.

மேலும், ஆதிரா தற்கொலை வழக்கில் இது மட்டும்தான் காரணமா அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் இருக்கின்றனவா என பல்வேறு கோணங்களிலும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். அதேசமயம், இது தொடர்பாக வழக்குப் பதிவுசெய்துள்ள பளுகல் போலீசார், கேரள போலீசார் உதவியுடன் அஜயை கைது செய்ய நடவடிக்கை எடுத்துவருகின்றனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT