ADVERTISEMENT

"மீனவர்களின் படகுகளை ஏலம் விடுவதைத் தடுங்கள்"- பிரதமருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் கோரிக்கை!

03:13 PM Jan 25, 2022 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

இலங்கையில் தமிழ்நாடு மீனவர்களின் படகுகளை ஏலம் விடுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக, பிரதமருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (25/01/2022) எழுதியுள்ள கடிதத்தில், இந்தியா- இலங்கை கூட்டுப் பணிக்குழுவானது மீன்பிடித்தல் தொடர்பான பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்கவிருக்கும் சூழ்நிலையில், இந்த ஏலம் விடுவதற்கான அறிவிப்பு துரதிஷ்டவசமானது என்றும், நீண்டகாலமாக நிலுவையில் உள்ள இப்பிரச்சனைக்கு சுமுகமான தீர்வு காண முன்வந்துள்ள தமிழ்நாடு மீனவர்கள் மத்தியில் இலங்கை அரசின் இந்த நடவடிக்கை அதிர்ச்சியையும், அவநம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது எனவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் பல்வேறு துறைமுகங்களின் நிறுத்தப்பட்டுள்ள மீட்க இயலாத 125 தமிழ்நாடு மீன்பிடிப் படகுகளை அப்புறப்படுத்துவதற்கான செயல்முறை மற்றும் வழிமுறைகளை இறுதி செய்வதற்கு ஒரு தொழில்நுட்பக் குழுவை இலங்கைக்கு அனுப்புமாறு மத்திய அரசின் வெளியுறவுத்துறை அமைச்சகம் தமிழ்நாடு அரசைக் கேட்டுக் கொண்டுள்ளதாகவும், அதன் அடிப்படையில், மீன்பிடிப் படகுகளை ஆய்வு செய்து, அப்புறப்படுத்துவதை மேற்பார்வையிடவும், விற்பனை வருவாயை இந்தியாவிற்குத் திருப்பி அனுப்பவும், தமிழ்நாட்டில் இருந்து அதிகாரிகள் மற்றும் கொள்முதல் செய்வோரை நியமித்து, தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்து, அவர்களின் இலங்கை பயண விவரங்களையும் மத்திய வெளியுறவுத்துறைக்குத் தெரிவித்துள்ளதாகவும் தமிழ்நாடு முதலமைச்சர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இத்தகைய சாதகமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் வேளையில், இலங்கை அரசின் மீன்பிடி மற்றும் நீரியல் வளத்துறை, இலங்கையின் பல்வேறு துறைமுகங்களில் நிறுத்தப்பட்டுள்ள தமிழ்நாடு மீன்பிடிப் படகுகளை ஏலம் விடுவதற்கான ஒப்பந்தப்புள்ளிகள் கோருவதற்கு செய்திதாள்களில் விளம்பரம் செய்துள்ளதாக இலங்கை மற்றும் தமிழ்நாட்டில் உள்ள ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளதாகத் தெரிவித்துள்ள முதலமைச்சர், இலங்கை அரசு முறையாக கலந்தாலோசனை மேற்கொள்ளாமல் ஏலத்தை நடத்த அவசரம் காட்டுவது, வாழ்வாதாரத்தை இழந்த தமிழ்நாடு ஏழை மாணவர்களுக்கு உதவி செய்யும் நோக்கில் இந்தய தூதரகவும், தமிழ்நாடு அரசும் மேற்கொண்டு வரும் முயற்சிகளைப் பாதிக்கும் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், இலங்கை அரசால் கைப்பற்றப்பட்டு பல்வேறு துறைமுகங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு மீனவர்களின் மீன்பிடிப் படகுகள் அனைத்தும் இலங்கையில் உள்ள பல்வேறு நீதிமன்றங்களால் உரிய சட்ட நடைமுறைகளைப் பின்பற்றியே விடுவிக்கப்பட்டுள்ளன என்றும் அவர் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழ்நாடு மீனவர்களின் படகுகளை, எவ்வித சட்டப்பூர்வமான உரிமையும் இல்லாத இலங்கை அரசின் மீன்பிடி மற்றும் நீரியல் வளத்துறை ஏலம் விட உள்ளதாக வெளியிடப்பட்டுள்ள விளம்பரத்தைத் திரும்பப் பெறவும், இந்திய அரசின் சம்மந்தப்பட்ட உயர் அதிகாரிகளைக் கொண்டு இலங்கை அரசுக்கு இந்திய அரசின் மறுப்பையும், கண்டனத்தையும் பதிவு செய்யுமாறும் முதலமைச்சர் தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

இந்தச் சூழ்நிலையில், கடந்த 2018- ஆம் ஆண்டுக்கு முன் கைப்பற்றப்பட்ட மற்றும் பழுது பார்க்க இயலாதெனக் கருதப்படும் 125 தமிழ்நாடு படகுகளை ஒளிவுமறைவற்ற வெளிப்படைத்தன்மையுடன் அப்புறப்படுத்துவதற்கான முயற்சிகளை மத்திய அரசு தொடர வேண்டும் என்றும், இலங்கை கடற்படையினரால் 2018- ஆம் ஆண்டுக்கு பின்னர் கைப்பற்றப்பட்ட 75 படகுகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களை முன்கூட்டியே விடுவிப்பதை உறுதி செய்ய வேண்டுமென்றும், மத்திய அரசு இந்த விஷயத்தில் உடனடியாகத் தலையிட வேண்டுமென்றும், தமிழ்நாடு முதலமைச்சர் இந்திய பிரதமரை தனது கடிதத்தின் வாயிலாகக் கேட்டுக் கொண்டுள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT