ADVERTISEMENT

போதை மாத்திரைக்காக இருசக்கர வாகனங்களை திருடி விற்பனை செய்யும்  அவலம்!

03:38 PM Sep 21, 2020 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

சென்னையில் வாகன திருட்டு சம்பவங்களை தடுக்க காவல் துறையினரும் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக தொடர் வாகன திருட்டில் ஈடுபட்டுவந்த இரண்டு கொள்ளையர்களை காவல் துறையினர் தற்போது கைது செய்துள்ளனர். அந்த கொள்ளையனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

கடந்த 5ஆம் தேதி இரவு ஆர்.கே நகர், ஆசிஸ் நகர் வைத்தியநாதன் தெருவில் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உயர்ரக இருசக்கர வாகனமான யமஹா R15 வாகனத்தை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். மேலும் கடந்த 18ஆம் தேதி வண்ணாரப்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியிலும் பல்சர் 220 இருசக்கர வாகனத்தை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இதுபோன்ற தொடர் இரு சக்கர வாகனத் திருட்டை தடுக்கவும், குற்றவாளிகளை பிடிக்கவும் தனிப்டை அமைக்கப்பட்டது.

இருசக்கர வாகனங்களை திருடிய இடங்களில் இருந்த சி.சி.டி.விகாட்சிகளை காவல்துறையினர் ஆய்வு செய்தபொழுது அதில் முககவசத்தோடு அரைக்கால் டவுசர் அணிந்த இரண்டு நபர்கள் இரு சக்கர வாகனத்தை திருடி செல்லும் காட்சிகளும் பதிவாகி இருந்தது.

இது போன்ற தொடர்ந்து 30க்கும் மேற்பட்ட சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்த காவல்துறையினர் குற்றவாளிகளை அடையாளம் கண்டு எண்ணூர் பகுதியை சேர்ந்த அரவி (எ) அரவிந்தன், அவரது கூட்டாளியான கோடம்பாக்கம் பகுதியை சேர்ந்த சாய்கிருஷ்ணன் ஆகிய இருவரும் இந்த இரு சக்கர வாகன திருட்டில் ஈடுப்பட்டது தெரியவந்தது.

இருவரையும் தனிப்படை போலீசார் தேடிவந்த நிலையில் மூலகொத்திரம் பகுதியில் இருவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் கிடைத்தன. சாய்கிருஷ்ணனன் கடைசியாக வியாசர்பாடியில் மளிகை கடையில் கொள்ளை அடித்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தபொழுது அரவிந்தனுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

கடந்த மாதம் ஜாமினில் வெளியேவந்த இருவரும் சேர்ந்து சென்னையில் பல்வேறு இடங்களில் உயர்ரக இருசக்கர வாகனங்களை குறிவைத்து திருடி வெளி மாவட்டங்களில் ரூ.10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரை விற்பனை செய்து, அதில் வரும் பணத்தில் போதை மாத்திரை மற்றும் கஞ்சா வாங்கி பயன்படுத்தியுள்னர்.

சாதாரண வாகனத்தை திருடினால் குறைந்த விலைக்கே விற்பனை செய்ய முடியும் என்பதால் உயர்ரக வாகனத்தை குறிவைத்து திருடுவார்களாம், அதற்காக தனியாக டூப்ளிகட் சாவி கொத்து ஒன்றை தனியாக வைத்துள்ளார்களாம்.

ஜெயிலில் இருந்து வந்ததும் தி நகரில் தான் தங்களது முதல் திருட்டை ஆரம்பித்துள்ளனர். இருசக்கர வாகனத்தை திருடி அந்த வாகனத்தின் மூலம் செல்போன் பறிப்பிலும் ஈடுப்பட்டுள்ளனர். இருசக்கர வாகனத்தைத் திருடி விற்ற பணத்தில் போதைப்பொருள் வாங்கும் அவர்கள், பணம் தீரும் நிலையில் வேறு திருட்டில் ஈடுப்பட்டு வந்ததும் தெரியவந்தது.

இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து மூன்று உயர்ரக இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்துள்ளனர். இதன் மதிப்பு இரண்டு லட்சம் ஆகும். இது தொடர்பாக பேசிய காவல் ஆய்வாளர் தேவேந்திரன், “ஒருவர் சிறுக சிறுக சேமித்த பணத்தில் ஆசை ஆசையாய் வாங்கிய வாகனத்தை, கொள்ளையர்கள் மிகவும் எளிதாக திருடி சென்றுவிடுகின்றனர். இதற்காக கொள்ளையர்கள் பல்வேறு டெக்னிக்குகளை கையாள்கின்றனர். எனவே வாகனங்களின் உரிமையாளர்கள் மிகவும் கவனமாக இருப்பது அவசியம் எனவும், கள்ள மார்க்கெட்டில் இதுபோன்று மிகவும் குறைவான விலையில் ஒரு சிலர் வாகனங்களை விற்பனை செய்கின்றனர். விலை மிகவும் குறைவாக இருக்கிறதே என ஆசைப்பட்டு வாங்கி சிலர் சிக்கலில் சிக்கி கொள்கின்றனர். எனவே செகண்ட் ஹேண்ட் வாகனங்களை வாங்கும்போது நீங்கள் மிகவும் கவனமாக இருக்கவேண்டும்” எனவும் எச்சரிக்கை செய்தார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT