ADVERTISEMENT

பெரியார் மண்ணில் அம்பேத்கருக்கு சிலை...!

10:08 PM Jan 26, 2022 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

சுயமரியாதை சுடரொளி தந்தை பெரியார் பிறந்த ஈரோட்டில் பெரியார் சிலை அருகே சட்டமேதை, புரட்சியாளர் டாக்டர்.அம்பேத்கருக்கு சிலை திறக்கப்பட வேண்டும் என நீண்ட காலமாக திராவிடர் கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் கோரிக்கை வைத்திருந்தது. இதன் தொடர்ச்சியாக சென்ற சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்கு ஈரோடு வந்த தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா முகப்பில் அமைந்துள்ள தந்தை பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோரின் சிலைகள் உள்ள அதே பீடத்தில் புரட்சியாளர் அம்பேத்கருக்கும் திமுக சார்பில் சிலை அமைக்கப்படும் என அறிவித்திருந்தார்.

ஆட்சிக்கு வந்த பிறகு அந்த அறிவிப்பு வெறும் அறிவிப்பாக இல்லாமல் சொன்னதை செய்வோம் என்ற அடிப்படையில் அண்ணல் அம்பேத்கருக்கு சிலை திறக்க விரைந்து செயல்படுமாறு தி.மு.க, மா.செ.வும் ஈரோடு மாவட்ட அமைச்சருமான முத்துச்சாமிக்கு உத்தரவிட்டிருந்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

அதன் அடிப்படையில் சென்ற சில மாதங்களுக்கு முன்பே ஐதராபாத்தில் அம்பேத்கரின் முழு உருவ வெண்கல சிலை தயார் செய்யப்பட்டு வந்தது. லட்சக்கணக்கில் செலவான சிலை தயாரிப்புக்கு உண்டான தொகையை தி.மு.க. ஏற்றுக் கொண்டது. இந்தநிலையில் ஈரோட்டில் அம்பேத்கர் சிலை வைக்க சென்ற 22 ந் தேதி தமிழக அரசு சார்பில் முறையாக அனுமதியும் கொடுக்கப்பட்டது.

ஜனவரி 26 இந்திய குடியரசு தினத்தன்று இந்தியாவின் சட்டமேதையான அம்பேத்கரின் சிலையை, திராவிட இயக்கத்தின் குருகுலமான ஈரோட்டில் அம்பேத்கருக்கு உற்ற நண்பராக இருந்த பகுத்தறிவு தந்தை, தந்தை பெரியார் சிலை அருகே அம்பேத்கர் சிலை நிறுவப்பட்டு அதைச் சென்னையிலிருந்து காணொளி காட்சி மூலம் திறப்பு விழா செய்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

"சுதந்திரப் போராட்டத்தில் தமிழர்கள், தமிழ்நாட்டின் பங்கு, தியாக நெருப்பில் அணையா ஜோதியாக உள்ளது. இந்திய விடுதலை போராட்டத்தில் உயிரை ஆயுதமாகக் கொடுத்த ஆயிரக்கணக்கான தேசத்தின் கொடையாளர்களான தமிழர்களின் வீரஞ்செறிந்த வரலாற்றை மத்திய பா.ஜ.க.மோடி அரசு மறுதலித்து நாட்டு மக்களுக்குக் காட்சிப்படுத்த மறுத்தாலும் இந்திய மண் சுதந்திர சுவாசக் காற்றை சுவாசிக்க செங்குருதி சிந்திய தமிழக தலைவர்களின் வீரம் போற்றப்படும் என்பதை முதல்வர் மு.க.ஸ்டாலினின் செயல்பாடுகள் மூலம் மக்கள் அறிந்து வருகிறார்கள்.

உயர் சாதிகளான மேட்டுக்குடிகள் மட்டுமே கல்வி, வேலைவாய்ப்புகள், அரசியல் அதிகாரத்தில் முன்னிலை பெற முடியும் என்ற இழி நிலையை மாற்றி இந்திய அரசியலமைப்பு சட்டம் அனைவருக்கும் பொதுவானது என்பதை சட்ட அங்கீகாரம் பெற்றுத்தந்த சட்ட மேதை அம்பேத்கரை ஒரு மராட்டியராக பார்க்காமல் சிறந்த ஆளுமை மிக்க மனிதராக, இந்திய நாட்டின் ஒரு தலைவராக பார்த்ததினால் தான் ஈரோட்டு மண்ணிலும் அவருக்கு சிலை வைத்து மனித குலம் போற்ற வேண்டும் என புகழ் வணக்கம் செய்திருக்கிறது தி.மு.க....! மத அரசியல் வடிவமான ஆர்.எஸ்.எஸ்.பா.ஜ.க.வுக்கும் மனித குல விடுதலையை முன்னெடுக்கும் திராவிட இயக்கத்திற்கும் இது தான் சுய மரியாதை உணர்வாளர்களின் ஒப்பீடு..." என்றார்கள் சிலை திறப்பு நிகழ்வில் கலந்து கொண்ட திராவிட இயக்க பற்றாளர்கள்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT