கரோனா மற்றும் ஒமிக்ரான் பரவல் காரணமாக பல்வேறு அறிவிப்புகளைத் தமிழ்நாடு அரசு வெளியிட்டு வருகிறது. வரும் ஜனவரி 10-ஆம் தேதி வரை சில புதிய கட்டுப்பாடுகளைத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இந்நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று மருத்துவத்துறை உயர் அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
பொங்கல் பண்டிகை நெருங்கும் நிலையில், மேற்கொள்ள வேண்டிய தடுப்பு பணிகள் குறித்து இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாகத் தகவல் வெளியான நிலையில் முன்பு இருந்தது போன்று கோவில்கள் உள்ளிட்ட அனைத்து மத வழிபாட்டுத் தலங்களில் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய கிழமைகளில் பொதுமக்கள் வழிபாட்டுக்குத் தடை விதிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. அதேபோல் கடைகளுக்கு நேரக்கட்டுப்பாடு விதிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.