தமிழ்நாட்டில் கடந்த 2019ஆம் ஆண்டு புதிதாக உருவாக்கப்பட்ட காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில், சில தினங்களுக்கு முன் தமிழ்நாடு தேர்தல் ஆணையம், விடுபட்ட மாவட்டங்களுக்கான உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி, அக்டோபர் 6 மற்றும் 9 தேதிகளில் இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெற இருக்கிறது.
இந்நிலையில் தற்பொழுது மாநில தேர்தல் ஆணையம் ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, முதற்கட்ட வாக்குப்பதிவு அக்.6 ஆம் தேதியும், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு அக்.9 ஆம் தேதியும் காலை 7 மணிமுதல் மாலை 6 மணிவரை நடைபெறும். எந்த அச்சுறுத்தலும் இன்றி முழு சுதந்திரத்துடன் வாக்காளர்கள் தங்களது வாக்கினைச் செலுத்த ஒத்துழைக்க வேண்டும். வாக்காளர்கள், தேர்தல் நடத்தும் அலுவலரிடம் அனுமதிச் சீட்டு பெற்றவர்களைத் தவிர வேறு எவரும் வாக்குச்சாவடிக்குள் நுழையக் கூடாது. மக்கள் தங்கள் வாக்கைச் செலுத்த அனைத்து அரசியல் கட்சியினரும், வேட்பாளர்களும் ஒத்துழைக்க வேண்டும். தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்கள் விதிமுறைகளை மீறிப் பயன்படுத்தப்படும் அனைத்து வாகனங்களும் பறிமுதல் செய்யப்படும். வாக்குச்சாவடிக்கு அருகே அமைக்கப்படும் முகாம்களில் தேவையில்லாமல் கூடுவதைத் தவிர்க்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.