ADVERTISEMENT

தள்ளிவைக்கப்பட்டது சசிகலா தொடர்ந்த வழக்கு!

04:51 PM Apr 23, 2021 | lakshmanan@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

அதிமுக பொதுக்குழு கூட்டத்தைச் செல்லாது என அறிவிக்கக் கோரி சசிகலா தொடர்ந்த வழக்கு ஜூன் மாதம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அதிமுக பொதுச் செயலாளராக இருந்த ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக 2016ம் ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதி மரணம் அடைந்தார். அதன்பின்னர், பொதுச் செயலாளராக வி.கே.சசிகலாவையும் துணைப் பொதுச்செயலாளராக டிடிவி தினகரனையும் அதிமுகவினர் ஒருமனதாகத் தேர்ந்தெடுத்தனர்.


இதன் பின்னர் சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா சிறையில் இருந்தபோது, 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் 12 ஆம் தேதி அதிமுக பொதுக்குழு சென்னையில் நடைபெற்றது. அந்தப் பொதுக்குழுவில் அதிமுக நிர்வாகிகளாக சசிகலா மற்றும் தினகரன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, அதிமுகவின் பொதுக்குழுக்கூட்டம் செல்லாது என அறிவிக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் சசிகலா மற்றும் டிடிவி.தினகரன் ஆகியோர் வழக்குகள் தொடர்ந்தனர்.

பொதுக்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 12 தீர்மானங்கள் செல்லாது என அறிவிக்க வேண்டும் எனவும் குறிப்பாக தங்களை கட்சியின் பொதுச்செயலாளர் மற்றும் துணைப்பொதுச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கியது செல்லாது என அறிவிக்க வேண்டும் எனவும் மனுவில் கோரியிருந்தனர். இந்த வழக்குகள் சென்னை நகர சிவில் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. டி.டி.வி.தினகரன் அமமுக என்ற கட்சியைத் தொடங்கி நடத்தி வருவதால் இந்த வழக்கில் இருந்து தான் விலகிக் கொள்வதாக டி.டி.வி.தினகரன் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

சசிகலா தொடர்ந்த வழக்கை நிராகரிக்கக் கோரி, அதிமுக நிர்வாகிகள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவிற்கு சசிகலா பதிலளிக்கவும், கடந்த முறை நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது நீதிமன்றத்தில் நீதிபதி விடுப்பின் காரணமாக வழக்கு விசாரணை ஜூன் 18ம் தேதி தள்ளி வைக்கப்பட்டது.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT