சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா மரணம் அடைந்த நிலையில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 3 பேரும் குற்றவாளிகள் என்று உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. 4 ஆண்டுகள் சிறை தண்டனையையும் உச்ச நீதிமன்றம் உறுதிப்படுத்தியது. இதைத்தொடர்ந்து சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 3 பேரும் 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 15-ந்தேதி பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில் வருமான வரித் துறையினர் கடந்த 2017ம் ஆண்டு நவம்பர் மாதம் சசிகலா மற்றும் அவரது உறவினர் வீடுகள் உட்பட 187 இடங்களில் சோதனை நடத்தினர். இது தொடர்பான வழக்கில் சாட்சிகளிடம் குறுக்கு விசாரணை நடத்த அனுமதி வழங்கக் கோரி, சசிகலா தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

admk

Advertisment

அதில் ‘எனக்கு எதிராக சேகரித்த சாட்சியங்களின் விவரங்கள் மற்றும் ஆவணங்களை வருமான வரித்துறை வழங்காததால் என் மீதான குற்றச்சாட்டுக்கு விளக்கம் அளிக்க முடியவில்லை. வருமான வரித்துறையிடம் வாக்குமூலம் அளித்த எனது உறவினர்களான கிரு‌‌ஷ்ணப்பிரியா, ‌‌ஷகீலா, விவேக் ஜெயராமன், டாக்டர் சிவக்குமார் உள்ளிட்ட 14 பேரிடமும், எனக்கு சொந்தமானதாக கூறப்படும் நிறுவனங்களின் மேலாளர்கள் மற்றும் ஆடிட்டர்களிடமும் குறுக்கு விசாரணை நடத்த அனுமதிக்க வேண்டும். அதுவரை மதிப்பீடு தொடர்பாக வருமான வரித்துறை உத்தரவு பிறப்பிக்க தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

Advertisment

இதனையடுத்து நீதிபதி அனிதா சுமந்த் முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது வருமானவரித்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், மதிப்பீட்டு பணிகள் ஏற்கனவே நிறைவடைந்து விட்டது. எனவே சசிகலாவின் மனு செல்லுபடி ஆகாது என்று தெரிவித்துள்ளார். இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார். இதனால் சசிகலா தரப்பு அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது. மேலும் சசிகலாவிற்கு புதிய வழக்குகளால் சிக்கல் ஏற்பட்டால் தண்டனை முடிந்த பிறகும் மீண்டும் சிறை செல்ல வாய்ப்பு இருக்கும் என்று அரசியல் வட்டாரங்களில் கூறிவருகின்றனர்.