சென்னை தியாகராய நகரில் அமைந்துள்ள சரவணா ஸ்டோர்ஸ் எலைட் நகைக்கடையில் நகை வாங்கிச் சென்ற திருவேற்காட்டைச் சேர்ந்த தனசேகரன், நகை போலியானது எனவும் தான் பத்திரிகையாளர் எனவும் மிரட்டி 15 லட்சம் ரூபாய் பணம் பறித்தார். அதைத் தொடர்ந்து தனது நண்பர்களான ஜீவா, வழக்கறிஞர்கள் ஜெகதீசன், ஸ்ரீராம் உள்ளிட்டோருடன் இணைந்து மீண்டும் சரவணா ஸ்டோர்ஸ் நகைக்கடைக்குச் சென்று 1 கோடி ரூபாய் கேட்டு மிரட்டிய போது, கடை நிர்வாகம் காவல்துறைக்கு அளித்த தகவலின் பேரில் கடந்த நவம்பர் 14- ஆம் தேதி மாம்பலம் போலீசார் தனசேகரன், ஜெகதீசன் உள்ளிட்ட 9 பேரை கைது செய்தனர்.
முன்ஜாமீன் மனு நீதிபதி சேஷசாயி முன்பு விசாரணைக்கு வந்தபோது, அரசுத்தரப்பில் ஆஜரான மாநில தலைமை குற்றவியல் வழக்கறிஞர் நடராஜன், இந்த சம்பவம் சமூகத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளதாகவும், முன்ஜாமீன் கோரியுள்ள சதீஷ் இந்த பணப் பறிப்புக்கு மூளையாக செயல்பட்டு உள்ளதாகவும் எடுத்துரைத்து முன்ஜாமீன் வழங்க கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார்.