ADVERTISEMENT

ரோடு மேல ரோடு போட்டு வயலை எல்லாம் அழிச்சுப்போட்டு சோத்துக்கு எதை தின்ப? விவசாயிகள் கூக்குரல்!!

09:36 PM Apr 15, 2019 | elayaraja

ADVERTISEMENT


சேலம் - சென்னை எட்டுவழிச்சாலை திட்டம் உறுதியாக நிறைவேற்றப்படும் என்று சேலத்தில் நடுவண் அமைச்சர் நிதின் கட்கரி கூறியது, சேலம் மாவட்ட விவசாயிகளிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

ADVERTISEMENT


மக்களவை தேர்தலில் போட்டியிடும் தேஜகூ வேட்பாளர்களை ஆதரித்து, நடுவண் அமைச்சர் நிதின் கட்கரி சேலத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 14, 2019) பரப்புரை செய்தார். அவர் பேசுகையில், ''சேலம் மாவட்டத்தின் வளர்ச்சிக்கு சேலம் & சென்னை எட்டுவழிச்சாலைத் திட்டம் அவசியம். இது தொடர்பான வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பு அளித்திருக்கிறது. என்றாலும், விவசாயிகளின் ஒப்புதலைப் பெற்று, இந்த திட்டத்தை நிறைவேற்றுவோம். கூடுதல் இழப்பீடும் வழங்கப்படும்,'' என்றும் பேசினார்.


எட்டுவழிச்சாலை விவகாரத்தில் பாதிக்கப்படும் விவசாயிகளிடம் கருத்துகளை கேட்காமலும், சமூக பாதுகாப்பு அம்சங்களை கருத்தில் கொள்ளாமலும், சுற்றுச்சூழல் துறையின் அனுமதி பெறாமலும் திட்டத்திற்காக நிலத்தை கையகப்படுத்துவது தவறு என உயர்நீதிமன்றம் சம்மடி அடியாக கடந்த 8ம் தேதி தீர்ப்பு அளித்திருந்தது. எங்கே இந்த தீர்ப்பால், தேர்தலில் பின்னடைவு ஏற்பட்டு விடுமோ என பயந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யமாட்டோம். எட்டுவழிச்சாலைத் திட்டம் கொண்டு வரப்படமாட்டாது என்று பரப்புரை கூட்டங்களில் பேசி வந்தார்.


இந்த திட்டத்தை எதிர்த்து, பொதுநல வழக்கு தொடர்ந்த பாமகவின் அன்புமணி ராமதாஸ், இந்த தீர்ப்பு தனக்கும், கட்சிக்கும் வாக்குகளை பெருமளவில் அறுவடை செய்து தரும் என்று நம்பிக் கொண்டிருந்தார்.


இந்த நிலையில்தான், சேலத்தில் பாமக நிறுவனர் ராமதாசையும், எடப்பாடி பழனிசாமியையும் பக்கத்தில் வைத்துக்கொண்டே, எட்டுவழிச்சாலை கொண்டு வரப்படும் என தடாலடியாக யார்க்கர் பந்தை வீசினார். இதைக்கேட்டு பக்கத்தில் இருந்த இபிஎஸ்ஸூம், ராமதாஸும் ரொம்பவே ஆடிப்போனார்கள். அவர்களின் முகம் வெளிறியது.


இந்த திட்டத்தால் ஏற்கனவே நொந்து போயிருந்த சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய ஐந்து மாவட்ட விவசாயிகளும் கட்கரியின் பேச்சால் ரொம்பவே கொந்தளித்தனர். இதைக் கண்டித்து சேலத்தை அடுத்த பூலாவரியில் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் உடனடியாக திரண்டு வந்து கருப்புக்கொடி ஏந்தி எதிர்வினை ஆற்றினர்.


இரண்டாவது நாளாக, சேலத்தை அடுத்த ராமலிங்கபுரம், குள்ளம்பட்டி ஆகிய பகுதிகளிலும் திங்கள் கிழமையன்றும் (ஏப்ரல் 15, 2019) விவசாயிகள் கருப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தினர். ராமலிங்கபுரத்தில் 70க்கும் மேற்பட்ட விவசாயிகள் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.


இதுகுறித்து குப்பனூரைச் சேர்ந்த விவசாயி நாராயணன் கூறுகையில், ''எட்டுவழிச்சாலைத் திட்டத்தை ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் தீர்ப்பை மதிக்காத வகையில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, மீண்டும் எட்டுவழிச்சாலையைக் கொண்டு வருவோம் என்கிறார். அதை நாங்கள் மிக வன்மையாக கண்டிக்கின்றோம். நிதின் கட்கரி பினாமிகள் மூலம் 450க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதனால்தான் இத்திட்டத்தை செயல்படுத்த அவர் துடிக்கிறார்.


முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், பாமக நிறுவனர் ராமதாசும் மேடையில் இருக்கும்போதே எட்டுவழிச்சாலையைக் கொண்டு வருவோம் என்று மத்திய அமைச்சர் பேசுகிறார். அதை அவர்கள் இருவரும் மறுத்துப்பேசாமல் அமைதி காத்தனர். விவசாயிகள் ஒன்றிணைந்து அதிமுக, பாஜக கூட்டணியை இந்த தேர்தலில் தோற்கடிப்போம். அதற்கான பரப்புரைகளைச் செய்து வந்தோம். ஆனால் நிதின் கட்கரி, எங்களுக்கு வேலை இல்லாமல் செய்து விட்டார். அவரை பேச வைத்து, எடப்பாடி பழனிசாமி தனக்குத்தானே ஆப்பு வைத்துக்கொண்டார்,'' என்றார்.


குள்ளம்பட்டியில் எட்டுவழிச்சாலை எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் அருள் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. விவசாயிகள் பன்னீர்செல்வம், அன்புராதா, கவிதா, செல்வி, சித்ரா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


''கண்டிக்கின்றோம் கண்டிக்கின்றோம் நிதின் கட்கரியை கண்டிக்கின்றோம்', 'மதிப்புக்கொடு மதிப்புக்கொடு விவசாயிகளுக்கு போராட்டத்திற்கு மதிப்புக்கொடு', 'ரோடு மேல ரோடு போட்டு வயலை எல்லாம் அழிச்சுப்போட்டு சோத்துக்கு எதைத் தின்ப?,' 'எடப்பாடியே பதில் சொல் கட்கரியே பதில் சொல்,' 'சாலை மட்டும் வளர்ச்சியா? பதில் சொல் கட்கரியே! மவுனம் ஏன் எடப்பாடியே? 'தர மாட்டோம் தர மாட்டோம் எங்கள் நிலத்தை தர மாட்டோம்,'' என்று முழக்கமிட்டனர்.


விவசாயிகள் அன்புராதா, கவிதா ஆகியோர் கூறுகையில், ''அன்புமணி ராமதாஸ் நான்தான் வழக்குப்போட்டு இந்த திட்டத்தையே நிறுத்தி வைத்திருப்பதாக சொல்லி வருகிறார். ஆனால் அவர் தொடர்ந்த வழக்கின் வாதங்கள் ஏதும் தீர்ப்பில் குறிப்பிடப்படவில்லை. அன்புமணி, தர்மபுரி தொகுதியில் தீர்ப்பைக் குறித்து வீடு வீடாக வாக்கு சேகரித்து வருகிறார். அதேநேரம், சேலத்தில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி எட்டுவழிச்சாலைத் திட்டத்தை கொண்டு வருவோம் என்கிறார். விவசாயிகள் ஒவ்வொருவரும் அதிமுக, பாஜக கூட்டணியை தேர்தலில் தோற்கடிப்போம். இந்தக் கூட்டணிக்கு எதிராக தலா 100 வாக்குகளை திரட்டி வாக்களிப்போம்.


எட்டுவழிச்சாலை திட்டம் என்ன என்று மக்களிடம் சொல்லாமலேயே திடீரென்று நிலத்தை அளந்து முட்டுக்கல் போட்டுவிட்டனர். இதனால் ஒட்டுமொத்த விவசாயிகளும் அதிர்ச்சி அடைந்தனர். இந்த நிலையில்தான் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு எங்களுக்கு நிம்மதியைக் கொடுத்தது. ஆனால், மத்திய அமைச்சரின் பேச்சால் இப்போது மீண்டும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி இந்தப் பகுதியில் வந்தால் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் செய்வோம். அதிமுக கூட்டணியை தோற்கடிப்போம்,'' என்றனர்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT