ADVERTISEMENT

எம்.ஜி.ஆரின் இதயத்தில் இடம்பெற்ற இன்னிசை நிலா எஸ்.பி.பி.! - முதல்வர் எடப்பாடி பழனிசாமி 

05:35 PM Sep 25, 2020 | rajavel

ADVERTISEMENT

ADVERTISEMENT

பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மறைவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

உடல்நலக்குறைவு காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியன் 25.09.2020 வெள்ளிக்கிழமை பிற்பகல் காலமானார். அவருடைய மறைவுக்குத் திரையுலகினர், ரசிகர்கள், அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டு மக்களை தேனினும் இனிமையான தனது குரலால் கவர்ந்த பிரபல திரைப்பட பின்னணிப் பாடகரும், திரைப்பட நடிகரும், 'எஸ்.பி.பி' என்று எல்லோராலும் அன்புடன் அழைக்கப்படும் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இன்று இயற்கை எய்தினார் என்ற செய்தி அறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன்.

இந்திய இசை உலகத்திற்கு 20-ம் நூற்றாண்டில், இறைவன் அளித்த இனிய கொடையாக வந்து உதித்தவர் மறைந்த எஸ்.பி.பி. 'ஆயிரம் நிலவே வா' என்ற புகழ் வாய்ந்த பாடலை அவர்தான் பாட வேண்டும் என்று காத்திருந்து வாய்ப்பு அளிக்கும் அளவுக்கு எம்.ஜி.ஆரின் இதயத்தில் இடம்பெற்ற இன்னிசை நிலா எஸ்.பி.பி. அவரது குரலில் நேற்றும், இன்றும், நாளையும் ஒலிக்கும் 'தங்கத் தாரகையே வருக வருக, தமிழ் மண்ணின் தேவதையே வருக வருக' என்ற ஜெயலலிதாவின் புகழ்பாடும் பாடல், அ.தி.மு.க.வின் வரலாற்றில் என்றும் இணைந்திருக்கும்.

எஸ்.பி.பி. கடவுள்மீது பக்திகொண்டு 'கந்த சஷ்டி கவசம்' மற்றும் 'ஆயர்பாடி மாளிகையில் தாய் மடியில்', போன்ற பல பாடல்களை உள்ளம் உருக பாடி, பக்தர்களின் மனங்களில் நீங்கா இடம் பிடித்தவர். எஸ்.பி.பி குரல் இனிமைக்கு நிகர் அவரே. இவர் மிக அதிகமான பாடல்களைப் பாடி கின்னஸ் சாதனை படைத்து, புகழின் உச்சிக்கே சென்றவர். இவர் பாடகர், நடிகர், பின்னணிக் குரல் பேசுபவர், இசையமைப்பாளர் போன்ற பன்முகத்தன்மை கொண்டவர்.

'கலைமாமணி' விருது, 'தேசிய' விருது, பல மாநில விருதுகள் உட்பட பல்வேறு விருதுகளுக்கு எஸ்.பி.பி சொந்தக்காரர். மத்திய அரசு இவருக்கு 'பத்ம பூஷன்' மற்றும் 'பத்மஸ்'ரீ விருதுகளை வழங்கி கவுரவித்தது. எஸ்.பி.பி மறைவு தமிழ் திரைப்படத் துறைக்கும், இசை ரசிகர்களுக்கும் மிகப் பெரிய இழப்பாகும். இவருடைய இடத்தை இனி எவராலும் நிரப்ப முடியாது. அவர் மறைந்தாலும், அவரது பாடல்கள் என்றும் நம் செவிகளில் ஒலித்துக் கொண்டே அவரது நினைவைப் போற்றிக் கொண்டிருக்கும்.

தனது ஈடு இணையற்ற குரல் வல்லமையால் தமிழ்த் திரைப்பட உலகுக்கும், குறிப்பாக தமிழ்நாட்டுக்கும் பெருமை சேர்த்த எஸ்.பி.பி மறைவு திரைப்படத் துறைக்கும், கலை உலகுக்கும், எனக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். அவரை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கும், திரை உலக நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அவரது ஆன்மா இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்"

இவ்வாறு முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT