Skip to main content

எம்.ஜி.ஆர். விசுவாசிகளை ஈர்க்க நடிகை லதாவுக்கு அசைன்மெண்ட்! -எடப்பாடி முடிவு!

Published on 30/08/2019 | Edited on 30/08/2019

 

தமிழகத்திற்கு அந்நிய தொழில் முதலீடுகளை ஈர்க்க வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. வெளிநாடு செல்லும் முன்பு  பாஜக தலைவர் தமிழிசை சௌந்திரராஜன், த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், தேமுதிக இளைஞர் அணி செயலாளர் எல்.கே.சுதீஷ், ச.ம.க.தலைவர் சரத்குமார் உள்ளிட்ட தலைவர்கள்  பலரும்  முதல்வரை சந்தித்து வெளிநாட்டு பயணம் வெற்றியடைய தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர். 

 

Actress latha - edappadi palanisamy


அந்த வரிசையில், எடப்பாடியை சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்திருக்கிறார் பழம்பெரும் நடிகையும் எம்.ஜி.ஆரின் கதாநாயகியுமான நடிகை லதா.  காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசரின் ஆதரவாளராக இருந்தாலும் காங்கிரசில் இணையாமல் அதிமுகவில் ஐக்கியமாகியிருந்தார்.  ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக அரசியலில் தீவிரம் காட்டி வந்தார் லதா. 

இருப்பினும் அவருக்கான உரிய இடம் கிடைக்காமலே இருந்தது. இந்த நிலையில், கட்சியில் ஒதுங்கியிருக்கும் எம்.ஜி.ஆர். ஆதரவாளர்களை அரவணைத்து அவர்களுக்கான முக்கியத்துவத்தை அதிகரிக்க வேண்டும் என சமீபத்தில் மூத்த அமைச்சர்களுடன் ஆலோசித்திருந்தார் எடப்பாடி. இந்த சூழலில், வெளிநாடு பயணம் வெற்றியடைய தங்களை சந்தித்து வாழ்த்துக்களை தெரிவிக்க வேண்டும் என எடப்பாடியிடம் நேரம் கேட்டிருந்தார் லதா. எம்.ஜி.ஆர். விசுவாசிகளை ஒருங்கிணைக்க வேண்டும் என ஏற்கனவே ஒரு யோசனையை எடப்பாடி வைத்திருந்ததால் நடிகை லதாவுக்கு உடனடியாக நேரம் ஒதுக்கப்பட்டது. 


 

முன்னாள் அமைச்சர் பொன்னையனுடன் சென்று எடப்பாடியை சந்தித்த லதா, அவருடன் 15 நிமிடம் பேசிவிட்டுத் திரும்பினார். இந்த சந்திப்பு லதாவுக்கு பெருமகிழ்ச்சியைத் தந்திருக்கிறது. இது குறித்து லதாவுக்கு நெருக்கமான எம்.ஜி.ஆர். விசுவாசிகளிடம் நாம் பேசியபோது , ‘’அதிமுகவின் ஆணிவேராக இருப்பவர்கள் எம்.ஜி.ஆர். விசுவாசிகள். எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பிறகு அவரது விசுவாசிகள் ஓரங்கட்டப்பட்டே வந்தனர். புறக்கணிக்கப்பட்டாலும் அவர்கள் அதிமுகவிலேயே இருந்தார்களே தவிர மாற்று கட்சிக்கு இடம்பெயரவில்லை. எம்.ஜி.ஆர். ஆட்சிக்காலத்தில் பதவியில் இருந்தவர்கள் பலர், பதவிகளை அனுபவிப்பதற்க்காக  திமுக உள்ளிட்ட மாற்று கட்சிகளுக்கு தாவினார்கள். 


 

ஆனால், எம்.ஜி.ஆர். தொண்டர்கள் யாருமே போகவில்லை. இரட்டை இலை மீதான விசுவாசம் அவர்களுக்கு அப்படியேதான் இருக்கிறது. சசிகலா, தினகரன் தரப்பினரை அதிமுகவில் மீண்டும் நுழையவிடாமல் தடுக்க நினைக்கும் எடப்பாடி, அதிமுகவின் ஆகப்பெரிய சக்தியாக தன்னை நிரூபிக்க நினைக்கிறார். அதற்கு கட்சியில் ஓரங்கட்டப்பட்டிருக்கும் எம்.ஜி.ஆர். விசுவாசிகளுக்கு முக்கியத்துவம் தருவதன் மூலம்தான் வலிமையடைய முடியும் எனவும் கருதுகிறார் எடப்படி பழனிச்சாமி. 
 

அந்த வகையில், கட்சிக்கு ஒரு பெண் பிரபலம் தேவை என நினைக்கும் அவர், திரையுலகில் ஜெயலலிதாவுக்கு மாற்றாக எம்.ஜி.ஆரால் அடையாளம் காட்டப்பட்ட நடிகை லதாவை மீண்டும் பரபரப்பு அரசியலுக்கு கொண்டு வந்து அவர் மூலம் எம்.ஜி.ஆர்.விசுவாசிகளை ஒருங்கிணைக்க திட்டமிட்டுள்ளார். அதற்கு அச்சாரமாக, வெளிநாட்டிலிருந்து எடப்பாடி பழனிச்சாமி தமிழகம் திரும்பியதும், நடிகை லதாவுக்கு கட்சியில் முக்கிய பொறுப்பு வழங்கி எம்.ஜி.ஆர். விசுவாசிகளை ஒருங்கிணைக்கும் அசைன்மெண்ட் அவரிடம் தரப்படலாம் ‘’ என்கிறார்கள் அதிமுக தலைமைக்கழக நிர்வாகிகள்.    

 

சார்ந்த செய்திகள்

Next Story

புகைப்படம் எடுக்க மறுத்ததால் வாக்களிக்காமல் சென்ற முன்னாள் அதிமுக எம்பி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 Former AIADMK MP abstained from voting after refusing to be photographed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

திருச்சி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட செம்பட்டு ஆபட் மார்ஷல் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் எம்பியுமான ப.குமார் காலையில் வாக்களிக்க சென்றார். பின்னர் வாக்குச்சாவடி மையத்திற்குள் அவர் வாக்களிப்பதை புகைப்படம் எடுப்பதற்காக பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிருபர்கள் வந்தனர். அப்போது அங்கிருந்த வாக்குச்சாவடி அலுவலர்கள் வாக்குச்சாவடி மையத்திற்குள் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை என தெரிவித்தனர். இதனால் அவருடன் வந்த மாவட்ட இளைஞரணி செயலாளர் முத்துக்குமார், ஜெயலலிதா பேரவை மாவட்ட தலைவர் கவுன்சிலர் அம்பிகாபதி ஆகியோருக்கும் தேர்தல் அலுவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆவேசமடைந்த குமார் 'நான் இந்த தொகுதியில் இரண்டு முறை எம்பியாக இருந்திருக்கிறேன். விஐபிகள் வாக்களிக்கும் போது புகைப்படம் எடுப்பது நடைமுறையில் உள்ளது. கலெக்டரிடம் பேசிவிட்டு பின்னர் வாக்களிக்கிறேன்' என கூறிவிட்டு வாக்குச்சாவடி மையத்தில் இருந்து வெளியேறினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

அதிமுக பிரமுகர் குவாரியில் கோடிக்கணக்கில் பணம் பறிமுதல்! 

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
ADMK personalities in Quarry Rs 2.85 crore seized

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அரசியல் கட்சித் தலைவர்கள், எம்பிக்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின் வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சென்னையை அடுத்துள்ள பல்லாவரத்தில் உள்ள பெருமாள் நகர் பகுதியைச் சேர்ந்தவர் லிங்கராஜ். அதிமுக பிரமுகரான இவர் குவாரிகளை நடத்தி வருகிறார். இத்தகைய சூழலில் லிங்கராஜ் குவாரிகளில் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு அவரது வீடு மற்றும் குவாரிகளில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு இருந்த ரூ. 2.85 கோடி ரொக்கப்பணத்தை கைப்பற்றி பறிமுதல் செய்தனர். மேலும் வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக இந்த பணம் பதுக்கி வைக்கப்பட்டதா என்ற கோணத்தில் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.