ADVERTISEMENT

10 வருட நண்பரை ஏமாற்றி ரூ.3 லட்சம் திருட்டு!

12:08 PM Sep 25, 2020 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பெரியார் நகர் என்.எல்.சி. சாலையில் வசித்து வரும் சரவணன்(46) என்பவர், அப்பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவர் தனது வியாபாரத்திற்காக சென்னையிலிருந்து வாகனத்தில் வரும் சிகரெட்டை சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வேப்பூர் அருகே நின்று மொத்தமாக கொள்முதல் செய்வது வழக்கம்.

அதன்படி கடந்த 22-ஆம் தேதி நள்ளிரவு இவர், விருத்தாசலம், அண்ணா நகரைச் சேர்ந்தவரும் தனது 10 வருட நண்பருமான சீனிவாசன் என்பவருடன் சிகரெட் கொள்முதல் செய்வதற்காக 3 லட்சம் ரூபாய் பணத்துடன் தனக்கு சொந்தமான ஆம்னி காரில் வேப்பூர் தேசிய நெடுஞ்சாலை ஒட்டியுள்ள ஒரு தனியார் பள்ளி அருகே உள்ள கார் பார்க்கிங் முன்புறம் தனது ஒம்னி வாகனத்தை நிறுத்திவிட்டு காரின் முன்புறமுள்ள டேஷ்போர்டில் பணத்தை வைத்துவிட்டு சென்னையில் இருந்து சரக்கு ஏற்றி வரும் வாகனத்திற்காக காரின் அனைத்து கதவுகளையும் முழுவதுமாக மூடிவிட்டு காரினுள் காத்திருந்தனர்.

அப்போது இருவரும் இரவு நேரம் என்பதால் தூங்கிவிட்டனர். அதிகாலை 2 மணியளவில் சரவணன் தூங்கி எழுந்து பார்த்தபோது டேஷ்போர்டில் வைத்திருந்த பணத்தை காணவில்லை, உடனிருந்த தனது நண்பர் சீனிவாசனை எழுப்பி பணத்தை காணவில்லை எனக்கூறியதும் இருவரும் கார் முழுவதும் தேடிப்பார்த்தும் பணம் கிடைக்கவில்லை.

காரின் முன்பக்க கண்ணாடி சிறிதளவு இறங்கியிருந்ததை பார்த்த சரவணனுக்கு தன்னுடன் இருந்த தன் நண்பர் சீனிவாசன் மீது சந்தேகம் ஏற்பட்டது. மேலும் காரினுள் பணம் இருந்த இடமும் அவருக்கு மட்டும்தான் தெரியும் என்பதால் சீனிவாசன் மீது சந்தேகப்பட்டு வேப்பூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

அப்புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, இன்ஸ்பெக்டர் கவிதா தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டதில், சரவணன் உறங்கி கொண்டிருந்ததை பயன்படுத்தி சீனிவாசன் காரினுள் இருந்து 3 லட்சம் ரூபாய் பணத்தை திருடி தனது நண்பரான விருத்தாசலம் வி.என்.ஆர். நகர் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்பவரை வரவழைத்து காரின் முன்பக்க கதவை சிறிது திறந்து பணத்தை கொடுத்து அனுப்பியது தெரிய வந்தது.

இதையடுத்து பணத்தை திருடிய விருத்தாசலம் அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த சேகர் மகன் சீனிவாசன் (29), அவரது நண்பர் விருத்தாசலம் வி.என்.ஆர். நகரை சேர்ந்த கலியபெருமாள் மகன் சுரேஷ் குமார் (36) ஆகியோர் மீது வேப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

திருடப்பட்ட 3 லட்சம் ரூபாய் பணத்தை மீட்டு பறிகொடுத்த சரவணணிடம் ஒப்படைத்தனர். 10 ஆண்டுகளாக நெருக்கமாக பழகிய நண்பனிடமே பணத்தை திருடிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT