அரசுப் பள்ளிகளில் ஆறு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை பயின்ற மாணவிகளுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் வழங்கும் திட்டம் இன்று துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பைத் தமிழக அரசு கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவித்த நிலையில் இந்த திட்டம் இன்று தொடங்கப்பட்டு உள்ளது. மாதிரி பள்ளிகள் மற்றும் சீர்மிகு பள்ளிகள் துவக்க விழாவில் டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுடன் இணைந்து தமிழக முதல்வர் இத்திட்டத்தினை துவக்கி வைத்தார். இதன் மூலம் லட்சக்கணக்கான மாணவர்கள் பலனடைய உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் பேசிய டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்,ஒரு மாணவி தன்னுடைய உயர்கல்வியை தொடர அரசு மாதம் 1000 ரூபாய் கொடுப்பதால் மாணவிகள் தங்களது உயர்கல்வியை தொடராமல் பள்ளி வகுப்பிலேயே நிற்பது குறையும் என்றும் சிறுவயதில் மாணவிகளுக்கு திருமணம் செய்து வைப்பதும் குறையும் என்றும் கூறியுள்ளார்.
மேலும் "ஒரு மாநில முதல்வர் இன்னொரு மாநிலத்திற்கு சென்று பள்ளி மருத்துவமனைகளை பார்வையிடுவதை இது வரை கண்டதில்லை. ஆனால் முதல்வர் ஸ்டாலின் டெல்லி வந்து பார்வையிட்டு தமிழகத்திலும் இதே போல் அமைப்பேன் என கூறி தற்போது செய்து காட்டியுள்ளார். ஒவ்வொரு மாநிலமும் பிற மாநிலங்களில் உள்ள நல்ல விஷயங்களை எடுத்துக்கொண்டு செயல்பட வேண்டும்" எனவும் கூறியுள்ளார்.
இந்த திட்டத்தை நாடே மிக கவனமாக பார்த்துக்கொண்டுள்ளது. இந்த திட்டம் தமிழகத்திற்கு மட்டுமல்லாது இந்தியாவிற்கே மிகவும் புரட்சிகரமான திட்டம் என கூறியுள்ள அவர் இந்தியா எங்கும் ஒரு சில மாநிலங்களைத் தவிர பிற மாநிலங்களின் அரசு பள்ளிகளின் நிலையும் அவை செயல்படும் விதமும் கவலை அளிக்கின்றது எனவும் கூறியுள்ளார். மத்திய மாநில அரசுகள் ஒன்றிணைந்து செயல்பட்டால் அடுத்த 5 ஆண்டுகளுக்குள் அரசுப்பள்ளிகளின் தற்போதைய நிலையை மேம்படுத்த முடியும் எனவும் கூறியுள்ளார்.