ADVERTISEMENT

'நாளைக்கே ரஜினி அரசியலுக்கு வந்தாலும் அவருடன் சேர்ந்தே பயணிப்பேன்'-தமிழருவி மணியன் பரபரப்பு 

01:41 PM Feb 02, 2021 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

ரஜினிகாந்த், அரசியல் கட்சி ஆரம்பிக்கப் போவதாக தெரிவித்து, பின்னர் தான் அரசியலுக்கு வரப்போவதில்லை எனவும், அதற்கான விளக்கத்தையும் அறிக்கை வாயிலாக தெரிவித்திருந்தார். ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிக்கும் முனைப்பில் இருந்தபோது, பாஜகவின் அறிவுசார் பிரிவின் மாநிலத் தலைவர் பதவியிலிருந்து விலகிய அர்ஜுன மூர்த்தியை கட்சிக்குத் தலைமை ஒருங்கிணைப்பாளராகவும், தமிழருவி மணியனை மேற்பார்வையாளராகவும் அறிவித்திருந்தார். அதன் பின் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்குவது தொடர்பான நிலைப்பாடு, அவர் அரசியலுக்கு வருவார் என எதிர்பார்த்த அவரது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருந்தது.

அதன்பின் ரஜினியின் அறிவிக்கப்படாத கட்சியின் மேற்பார்வையாளராக நியமிக்கப்பட்ட தமிழருவி மணியன் 'நான் இனி சாகும்வரை அரசியலில் ஈடுபட போவதில்லை' என அறிக்கை வெளியிட்டிருந்தார். இந்நிலையில் தமிழருவி மணியன் தற்போது அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், காந்திய மக்கள் இயக்கத்தில் ரஜினி மக்கள் மன்றத்தைச் சார்ந்த பலர் இணைந்து பணியாற்ற விரும்பி என்னுடன் தொடர்பு கொள்கின்றனர். ரஜினி மக்கள் மன்றத்தில் உள்ளவர்களுக்கு அன்புடன் ஒன்றை உணர்த்த விரும்புகிறேன்.


நீங்கள் அனைவரும் ரஜினி ஒரு நாள் அரசியல் களத்தில் அடியெடுத்து வைப்பார் என்ற எதிர்பார்ப்பிலும், முதல்வர் பதவியில் என்றாவது அமர்வார் என்ற கனவிலும் அவருடைய ரசிகர்களாக மாறவில்லை. அவருடைய இயல்பான நடிப்பு, செயற்கைப் பூச்சு இல்லாத பேச்சு, ஆணவத்திற்குச் சற்றும் இடம் தராத அடக்கம், உள்ளத்தில் பட்டதை ஒளிவு மறைவின்றி உரைக்கும் நேர்மை, மிகச் சாதாரண மனிதனாகத் தன்னைப் பாவிக்கும் பண்புநலன், அனைவரும் வியந்து பார்க்கும் ஆடம்பரமற்ற எளிமை, அன்பு சார்ந்து ஒவ்வொருவரிடமும் பழகும் உயர்குணம் ஆகியவற்றில் உங்கள் மனதைப் பறிகொடுத்துத்தான் நீங்கள் அனைவரும் அவருடைய இரசிகர்களாக மாறினீர்கள் என்பதுதான் மறுக்க முடியாத உண்மை. அவருக்காக எதையும் இழக்கத் துணியும் உங்கள் உயரிய அர்ப்பணிப்பைக் கடந்த நான்காண்டுகள் நேரில் கண்டு நான் நெஞ்சம் நெகிழ்ந்திருக்கிறேன்.

பாழ்பட்ட அரசியலைப் பழுது பார்க்கவே ரஜினி அரசியல் உலகில் அடியெடுத்து வைக்க முயன்றார். காலச்சூழல் அவருடைய கனவை நனவாக்க இடம் தராத நிலையில் இப்போது அவர் கட்சி தொடங்குவதைத் தவிர்த்திருக்கிறார். நான் எப்போதும் அரசியலில் அடியெடுத்து வைக்கப் போவதில்லை என்று அவர் அறிவிக்கவில்லை. ரஜினி மக்கள் மன்றத்தை அவர் கலைத்துவிடவுமில்லை.

இந்த நிலையில் அவருடைய கூற்றின்படி சிஸ்டத்தைச் சீரழித்தவர்களிடமே சில ரசிகர்கள் சரண் அடைந்திருப்பதையும், சிலர் இளைப்பாறும் வேடந்தாங்கல் எதுவாக இருக்க முடியும் என்று அலைபாய்வதையும் கண்டு நான் வருந்துகிறேன். ரஜினி மக்கள் மன்றத்திலிருந்து ஆள் பிடிக்கும் அநாகரிக அரசியலை நான் அடியோடு வெறுக்கிறேன். காந்திய மக்கள் இயக்கம் இந்த சந்தர்ப்பவாத செயலில் மறந்தும் ஈடுபடாது என்று உறுதிபட அறிவிக்கிறேன்.

காந்திய மக்கள் இயக்கம், ரஜினி மக்கள் மன்றத்தின் சகோதர அமைப்பாகத் தொடர்ந்து செயற்படும். அவரவர் இடத்தில் இருந்தபடி கரங்கள் இணந்து காரியமாற்றுவோம். நான் ”ஒரு காந்தியவாதி இறக்கும் நாள்வரை இடையறாமல் தன்னலமின்றி சமூக நலன் சார்ந்து இயங்கிக் கொண்டே இருக்க வேண்டும். இழிந்த விமர்சனங்களை இம்மியும் பொருட்படுத்தலாகாது. மாற்று அரசியலை வளர்த்தெடுக்கும் பணியில்

நீங்கள் தொடர்ந்து ஈடுபட வேண்டும் “என்று சான்றாண்மை மிக்க மூத்தோர் பலர் வழங்கிய அறிவுரையை ஏற்கிறேன். தரம் தாழ்ந்த, தன்னலம் வாய்ந்த அரசியலை என்றும் நான் நடத்தியதில்லை. எந்த லாவணிக் கச்சேரியிலும் ஒரு நாளும் நேரத்தை விரயமாக்காமல் ஆக்கபூர்வமான அர்த்தமுள்ள பணிகளில் காந்திய மக்கள் இயக்கம்முன்னிலும் முனைப்பாக ஈடுபடும்.

மார்ச் 7ஆம் நாள் திருப்பூரில் பொதுக்குழு கூடவிருக்கிறது. நாளையே ரஜினி அரசியலுக்கு வந்தாலும் காந்திய மக்கள் இயக்கம் அவருடன் சேர்ந்தே பயணிக்கும். அவர் அரசியலுக்கு வந்தாலும், வராமல் விலகி இருந்தாலும் பக்திபூர்வமாக அவரை நெஞ்சில் நிறுத்தி நேசிக்கும் எந்த மன்ற உறுப்பினரும் எவர் விரிக்கும் வலையிலும் சிக்கமாட்டார்கள் என்பது மட்டும் உறுதி எனத் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT