Skip to main content

கட்சி பெயரில் கழகம் இல்லை...பாஜக வேண்டாம்...ரஜினியின் அதிரடி அரசியல் திட்டம்! 

Published on 30/09/2019 | Edited on 30/09/2019

"தர்பார்" படத்தின் ஷூட்டிங், மும்பையில் தொடர்ச்சியாக முப்பது நாட்கள் நடந்து முடிந்த பின், சென்னை திரும்பினார் ரஜினி. பொதுவாக எந்தப் படத் தின் ஷூட்டிங்கும் தொடர்ச்சியாக நடந்தால், இடையில் சின்ன ரிலாக்ஸுக்காக சென்னை வருவார் ரஜினி. அப்படி ரிலாக்ஸுக்காக  "தர்பார்" பட ஷூட்டிங்கிலிருந்து வந்தபோதுதான் ஆக. 11-ஆம் தேதி துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடுவின் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டார்; பிரதமர் மோடியையும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் கிருஷ்ணர், அர்ஜுனர் என்றார். காஷ்மீர் விவகாரத்தில் அமித்ஷாவை ஆஹா ஓஹோ வென புகழ்ந்தார்.
 

rajini



ஆக. 14-ஆம் தேதி கதை, வசனகர்த்தா கலைஞானத்திற்கு நடந்த பாராட்டுவிழாவில் கலந்து கொண்ட ரஜினி, மறுநாள் "தர்பார்'’படத்தின் இரண்டாம் கட்ட ஷூட்டிங்கிற்காக ஜெய்ப்பூர் புறப்பட்டுச் சென்றார். ஒருமாதம் ஷூட்டிங்கில் கலந்துகொண்டு விட்டு, சின்ன ரிலாக்ஸுக்காக சென்னை திரும்பி, வீட்டில் ஓய்வெடுத்துக்கொண்டிருந்த போதுதான் அமித்ஷாவின் இந்தி வெறிப் பேச்சால் நாடே கொந்தளிப்பில் இருந்தது. அதிலும் தமிழ்நாட்டில் அதிகமாகவே அனல் அடித்தது.

 

rajini



மீண்டும் "தர்பார்' ஷூட்டிங்கிற்காக கடந்த 18-ஆம் தேதி மும்பை செல்வதற்காக, ரஜினி சென்னை ஏர்போர்ட் வந்திறங்கியதும், மீடியாக்கள் மைக்கை நீட்டின. "எந்த நாட்டுக்குமே பொதுவான ஒரு மொழி இருப்பது வளர்ச்சிக்கு நல்லது, ஆனா துரதிர்ஷ்டம் இந்தியாவில் அது முடியாமல் போச்சு. அதேநேரம் இந்தியைத் திணிப்பதை தமிழக மக்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்''’என ஒரு தினுசாக பதில் சொன்னார் ரஜினி. ""தலைவர் என்ன சொல்ல வர்றாரு, காஷ்மீர் விவகாரத்துல பி.ஜே.பி. ஆள் மாதிரியே பேசுறாரு. இந்தி விஷயத்துல ரெண்டு பக்கமும் பேசுறாரு''’என ரஜினி மக்கள் மன்றத்தினரே குழம்பினார்கள். தனது போயஸ் கார்டன் வீட்டில் ஓய்விலிருந்த சில நாட்களில், தனது நம்பிக்கை வட்டத்துடன் ஆலோசனை நடத்தியிருக்கிறார் ரஜினி. அதன்பின், அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் திட்டம் வகுத்துத் தரும் ஐ-பேக் சி.இ.ஓ.வான பிரசாந்த் கிஷோருடன் மும்பையில் ஆலோசனை நடத்தியிருக்கிறார். இதுதான் இப்போது ரஜினி மக்கள் மன்றத்தினரிடையேயும் தமிழக அரசியல் களத்திலும் விவாதத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது.


"ரஜினி ஏரியாவுக்குள் என்னதான் நடக்கிறது?' என ரஜினி மக்கள் மன்றத்தின் நிர்வாகிகள், ரஜினிக்கு நெருக்கமான ஆலோசகர்கள் வட்டாரம் என பல திசைகளிலும் விசாரணையில் இறங்கினோம். முதலில் ர.ம.ம.வின் கொங்கு மண்டல மா.செ. ஒருவர் நம்மிடம் பேசினார். "கிருஷ்ணர், அர்ஜுனர்... இந்தி இருந்தா நல்லது, ஆனா திணிக்கக் கூடாதுன்னு எங்க தலைவர் பேசுறதப் பார்த்தா குழப்பமாத்தான் இருக்கும். ஆனா அவர் ரொம்ப தெளிவா இருக்கார். இன்னொரு விதமா சொல்லணும்னா அவர் ஜெயலலிதா மாதிரி. உதாரணத்துக்கு, ராமர் கோயில் கட்டுவதற்கு செங்கல்லும் அனுப்புவார், பி.ஜே.பி.யின் சீனியர் லீடர் அத்வானிக்கு செலக்டிவ் அம்னீஷியான்னும் சொல்வார். சொத்துக் குவிப்பு வழக்கு ஸ்ட்ராங்கா போய்க்கிட்டிருக்குன்னு தெரிஞ்சதும் பி.ஜே.பி. யிடம் பம்மினார். தனக்கு இந்துத்வா முகம் இருப்பதையும் காட்டிக்குவார், சிறுபான்மையினரிடம் மன்னிப்பும் கேட்டுக்குவார்.

அதே மாதிரிதான் எங்க தலைவரும். இப்போது அவருக்கு இருக்கும் சிலபல காரணங்களால் தான் பி.ஜே.பி. வாய்ஸ் கொடுக்கிறார். தமிழ்நாட்டில் பி.ஜே.பி. ஸ்டேட்டஜி அரசியல் பண்ணினால் என்ன ரிசல்ட் வரும்னு அவருக்கும் தெரியும். அதனால் தனிக்கட்சி ஆரம்பிக்கும் வரைக்கும் இதே டிராக்லதான் போவார்''’என்கிறார். தென்மாவட்ட நிர்வாகி ஒருவரோ, "பி.ஜே.பி.யுடன் கூட்டணி வைத்துத்தான் அரசியல் பண்ணணும்னா, அதுக்கு நான் கட்சி ஆரம்பிக்காமலேயே இருந்துருவேன். அதனால ரசிகர்கள் யாரும் பயப்படத் தேவையில்லை. என்னை நம்பி இத்தனை வருஷமா இருக்கும் ரசிகர்களைக் கைவிட மாட்டேன் என்பதிலும் உறுதியா இருக்கும் தலைவர் 234 தொகுதிகளிலும் ஆபீஸ் திறக்கச் சொல்லியிருக்கார்''’என உற்சாகமுடன் பேசினார்.

ரஜினியின் ஆலோசனை வட்டத்தில் உள்ள சிலரிடம் பேசியபோது, "என்னதான் சொல்றாருன்னு தெரிஞ்சிக்கத்தான் பிரசாந்த் கிஷோரை தலைவர் சந்தித்தாரே தவிர, வேறொன்றும் இல்லை. காற்று எந்தப் பக்கம் அடிக்குதுன்னு தெரிஞ்சு அந்தப் பக்கம் ஒதுங்குவது பிரசாந்த் கிஷோரின் பழக்கம். வருகிற அக்டோபர் 28-ஆம் தேதி குருப்பெயர்ச்சி நடக்குது. தலைவரின் மகர ராசி, திருவோண நட்சத்திரப்படி, அவரின் எண்ணப்படியே எல்லாம் நடக்கும்.

அதைவிட விசேஷமான நாள் என்னன்னா ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதத்தில் ரோகிணி நட்சத்திரம் வரும் நாள்தான் தலைவரின் இஷ்ட சாமியான பாபாஜியின் பிறந்த நாள். இந்த வருஷம் பாபாஜியின் பிறந்த நாள் டிச. 11-ஆம் தேதி வருகிறது. அதற்கடுத்து தலைவரை பாபாஜி குகைக்கு அழைத்துச் செல்லும் ஹரியின் மகன் திருமணத்தை பெங்களூருவில் டிசம்பர் 15-ல் நடத்திவைக்கிறார் தலைவர். இப்படி எல்லா சுபநாட்களும் கூடிவருவதால், டிச. 12-ஆம் தேதி தலைவரின் பிறந்தநாளில் நல்லசேதி வரும் என்ற நம்பிக்கையில் இருக்கிறோம். அதேசமயம் கட்சிப் பெயரில் கண்டிப்பாக கழகம் கிடையாது. பாரதம், தேசியம் என்ற அர்த்தத்தில் தான் இருக்கும்''’என்கிறார்கள். ரஜினியின் அரசியல் கட்சி அறிவிப்பு வருமா, வராதா என்ற எதிர்பார்ப்பு மீண்டும் அதிகரித்துள்ளது.

Next Story

பிரதமர் மோடிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Election Commission notice to Prime Minister Modi

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது.

முன்னதாக பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்திருந்தனர். அந்த மனுவில், ‘சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் தேர்தல் பரப்புரையில் மதத்தை தொடர்புபடுத்தி பேசியதாக பிரதமர் மோடிக்கு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 77 கீழ் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதாவது பாஜக தலைவர் ஜேபி நட்டாவிற்கு அனுப்பட்டுள்ள இந்த நோட்டீஸில் வரும் 29 ஆம் தேதி காலை 11 மணிக்குள் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுளது. அதே போன்று பாஜக அளித்த புகாரில் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்திக்கும் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்கள், குறிப்பாக நட்சத்திர பேச்சாளர்களின் பேச்சு அதிக பொறுப்புடன் இருக்க வேண்டும். உயர் பதவிகளில் இருப்பவர்களின் பிரச்சார உரைகள் மிகவும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

Next Story

“ரூ.4 கோடிக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை” - நயினார் நாகேந்திரன்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
I have nothing to do with Rs. 4 crore Nayanar Nagendran

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அப்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்த பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்கு பதில் கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. அதேசமயம் இந்த பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய 3 மூவரும் கொடுத்து அனுப்பியதாக தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் நேற்று முன்தினம் (23.04.2024) தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர்.

அப்போது நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன் காவல்துறையில் அளித்த வாக்குமூலத்தில், “தனக்கும் கைப்பற்றப்பட்ட பணத்திற்கும் எவ்வித சம்பந்தம் இல்லை. நயினார் நாகேந்திரன் உதவியாளர் மணிகண்டன் 3 நபர்கள் பணம் கொண்டு வருகிறார்கள். எனவே இவர்களின் பாதுகாப்பிற்காக இருவரை அனுப்ப கேட்டுக்கொண்டதால் தான் தன்னிடம் வேலை பார்க்கும் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் என இருவரை அனுப்பி வைத்தேன். சென்னையில் 4 ஹோட்டல்களை வாடகைக்கு எடுத்து நடத்தி வருகிறேன். அதில் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் இருவரும் பணியாற்றி வருகின்றனர்” என தெரிவித்துள்ளார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நயினார் நாகேந்திரன், மணிகண்டனுக்கு காவல் துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தது.

இந்நிலையில் சென்னை தியாகராயர் நகரில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “இந்த விவகாரத்தில் முழுக்க முழுக்க என்னை டார்கெட் செய்கின்றனர். இது ஒரு அரசியல் சூழ்ச்சி ஆகும். ரூ.4 கோடியை எங்கேயோ பிடித்துவிட்டு என் பெயரையும் சேர்த்து பயன்படுத்துகின்றனர். தமிழகத்தில் சுமார் 200 கோடிக்கும் மேல் பணம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் ரூ. 4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது குறித்து விசாரிக்கின்றனர். கைப்பற்றப்பட்ட இந்த பணத்திற்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை. தாம்பரம் காவல் நிலையத்தில் மே 2 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக உள்ளேன்” எனத் தெரிவித்தார்.