தமிழகத்தில் ஏற்கெனவே ராகுல் காந்தி கோவை, ஈரோடு, திருப்பூர், கரூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.
தமிழக தென் மாவட்டங்களான, தூத்துக்குடி, நெல்லை மற்றும் தென்காசி ஆகிய மூன்று மாவட்டங்களில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள, ராகுல் காந்தி தனிவிமானம் மூலம் இன்று காலை 11.50 மணி அளவில் வந்து சேர்ந்தார். அதனைத் தொடர்ந்து தமிழகத்தில் 2-வது கட்டமாக அவர் இன்று (பிப்.27) தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார்.
விமான நிலையத்தில் காங்கிரஸ் தொண்டர்கள் அவரை வரவேற்றனர். வரவேற்பு முடிந்து ராகுல் காந்தி வெளியே வந்தபோது விமான நிலையம் முன்புறம் பெண்கள் கூட்டமாக நின்று மனுக்களை கொடுத்தனர். அந்த மனுக்களை அங்கேயே பிரித்துப் படித்தார். பின் அங்கிருந்து வ.உ.சி. கல்லூரிக்குச் சென்றார். அப்போது அவர் சென்ற வழியில் நான்கு பெண்கள் கைக்குழந்தைகளுடன் வந்தனர். அப்போது காரை நிறுத்தி அந்த குழந்தைகளை வாங்கிக் கொஞ்சிவிட்டு அவர்களிடம் நலம் விசாரித்துவிட்டு அங்கிருந்து தூத்துக்குடி, வ.உ.சி. கல்லூரி கூட்ட அரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.