காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி இந்தியா முழுதும் சுமார் 12 மாநிலங்களில் 3570 கிலோமீட்டர் நடைபயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்து உரையாட இருக்கிறார். இந்த பயணத்திற்கான திட்ட ஏற்பாடுகள் தயார் செய்யப்பட்டு இரண்டு நாட்களுக்கு முன்பு கன்னியாகுமரியிலிருந்து நடைபயணத்தை அவர் துவங்கினார். அவருடன் காங்கிரஸ் தலைவர்கள், தொண்டர்களுடன் இணைந்து நடைபயணத்தை ராகுல்காந்தி முன்னெடுத்து செல்கிறார். தமிழகத்தில் தொடங்கிய இந்த பயணம் 5 மாத முடிவில் காஷ்மீரில் நிறைவடைய இருக்கிறது.
இதற்கிடையே ராகுலின் இந்த பயணத்தை பாஜக கடுமையாக விமர்சனம் செய்து வருகிறது. நடைபயணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ள பாஜக தலைவர்கள் யாரை ஏமாற்ற இந்த பயணம் என்று கேள்வி எழுப்பியுள்ளனர். குறிப்பாக சில நபர்கள் ராகுல் குறித்து தனிநபர் தாக்குதலையும் முன்னெடுத்து வருகிறார்கள். இந்நிலையில் ராகுலின் நடைபயணம் குறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசும்போது, “ராகுல், மோடியை எதிர்க்க சரியான ஆள் கிடையாது. அவர் எத்தனை கிலோ மீட்டர் வேண்டுமானாலும் நடந்து செல்லலாம். ஆனால் நாட்டிற்கு அவரால் எந்த மாற்றமும் வர போவதில்லை. வேண்டுமானால் அவருக்கு மாற்றம் வரலாம். எனவே அவர் கால விரயம் செய்வதாகவே நான் நினைக்கிறேன்” என்றார்.