ADVERTISEMENT

தனியார் கல்லூரி வாகனம் மோதி சிறுமி பலி, சிறுவன் கால் துண்டானது!

11:53 PM Dec 10, 2019 | santhoshb@nakk…

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அறிவொளி நகர் ( நரிக்குறவர் காலனி) யை சேர்ந்தவர் சுரேஷ் வயல்களில் எலிப்பொறி வைத்து பிழைப்பு நடத்தி வருகிறார். அவருக்கு வசந்தி என்ற மனைவியும், தேவா (வயது 9), சுகந்தி (வயது 4) ஆகிய இரு குழந்தைகள் உள்ளனர். தேவா கீரமங்கலம் வடக்கு பள்ளியில் 4 ம் வகுப்பும், சுகந்தி அதே பள்ளி வளாகத்தில் உள்ள அங்கன்வாடியிலும் படிக்கிறார்கள்.

ADVERTISEMENT


இந்த நிலையில் சுரேஷ் மற்றும் தேவா ஆகிய இருவரும் ஐயப்பன் கோயிலுக்கு மாலை அணிந்திருப்பதால் பள்ளி முடிந்த நிலையில் மாலை நேர விரதம் முடிப்பதற்காக கீரமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் குளத்திற்கு 4 பேரும் ஒரு மோட்டார் சைக்கிளில் குளிக்கச் சென்றனர். பேருந்து நிலையம் அருகே சென்ற போது புதுக்கோட்டை வெங்கடேஷ்வர பாலிடெக்னிக் கல்லூரி வேன் மாணவர்களை இறக்கிவிட்டு பேருந்து நிலையம் அருகே வந்த போது எதிர்பாராமல் நடந்த விபத்தில் சுரேஷ் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதி ஏறி நின்றது.

ADVERTISEMENT


அதில் மாணவன் தேவா கால் மாட்டிக் கொண்டிருந்தது. அதைப் பார்த்த அப்பகுதியில் நின்றவர்கள் வேனை மீண்டும் எடுக்க சொன்ன பிறகு வேன் நகர்த்தப்பட்டது. உடனே அந்தப் பகுதியில் நின்ற கார், வேன் ஓட்டுநர்கள் காயமடைந்த தேவா மற்றும் சுகந்தியை ஒரு காரில் ஏற்றிக் கொண்டு கீரமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்ற போது அங்கே சிகிச்சை அளிக்க யாரும் இல்லை.


அதனால் அதே காரில் அறந்தாங்கி அரசு மருத்துவமனைக் கொண்டு சென்றனர். ஆனால் இருவரையும் பரிசோதித்த மருத்துவர்கள் சுகந்தி இறந்துவிட்டதாக சொன்னார்கள். தொடர்ந்து தேவாவிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. படுகாயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற பிறகு அங்கு கூடிய மக்கள் பார்த்த போது, அந்த மோட்டார் சைக்கிளில் மாணவன் தேவாவின் துண்டான கால் இருப்பதை பார்த்தனர். அதன் பிறகு மற்றொரு வாகனத்தில் எடுத்துச் சென்றனர்.


அந்த துண்டான கால் பகுதியை பொறுத்தும் சிகிச்சையும் நடப்பதாக கூறப்படுகிறது. விபத்தை ஏற்படுத்திய தனியார் கல்லூரி வேன் ஓட்டுநர் புதுக்கோட்டை விடுதியை சேர்ந்த ஆறுமுகத்தை கீரமங்கலம் போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த தலைமுறை தான் பள்ளிக்கு சென்று படிக்க தொடங்கி இருக்கிறார்கள் அறிவொளி நகர் மக்கள். அவர்களுக்கு இப்படி ஒரு சோகம் நடந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT