ADVERTISEMENT

புதுச்சேரியில் ஒரே நாளில் 286 பேருக்கு தொற்று! அமைச்சர் மற்றும் மகனுக்கும் கரோனா!

02:47 AM Aug 06, 2020 | rajavel

ADVERTISEMENT

புதுச்சேரியில் இதுவரை இல்லாத அளவுக்கு நேற்று (5.08.2020) ஒரே நாளில் புதிதாக 286 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

ADVERTISEMENT

இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் கூறும்போது, ‘‘புதுச்சேரியில் இன்று (05.08.2020) அதிகபட்சமாக 1,024 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் எப்போதும் இல்லாத அளவுக்கு புதுச்சேரியில் 182 பேர், காரைக்காலில் 21 பேர், ஏனாமில் 80 பேர், மாஹேவில் 3 பேர் என மொத்தம் 286 பேருக்கு (27.9 சதவீதம்) தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது கடந்த நான்கரை மாதங்களில் இல்லாத அளவு அதிகமானதாகும். இதையடுத்து இதுவரை மொத்தம் 4,432 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல் கடந்த 24 மணி நேரத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 65 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் கரோனாவிலிருந்து 2,646 பேர் குணமடைந்துள்ளனர்.

நேற்று முன்தினம் தனியார் மருத்துவ கல்லூரி நிர்வாகிகளை அழைத்து பேசினேன். அப்போது 4 தனியார் மருத்துவ கல்லூரிகளில் தலா 100 படுக்கைகள் ஏற்பாடு செய்வதாக தெரிவித்துள்ளனர். அதேபோல் அறுபடை மருத்துவ கல்லூரியில் 400 படுக்கைகள் கேட்டோம். அதில் 300 படுக்கைகள் வழங்குவதாக ஏற்று கொண்டுள்ளனர், தற்போது அங்கு 50 படுக்கைகள் உள்ளன. இன்னும் 250 படுக்கைகளை 5 நாட்களுக்குள் ஏற்பாடு செய்வதாக கூறியுள்ளனர்.

லட்சுமிநாராயணா மருத்துவ கல்லூரியில் தற்போது 60 படுக்கைகள் உள்ளன. அங்கு மேலும் 140 படுக்கைகள் ஏற்பாடு செய்வதற்கு 5 நாட்கள் கேட்டுள்ளனர். இதன் மூலம் 6 மருத்துவ கல்லூரிகள் மூலம் 900 படுக்கைகள் கிடைக்கும். தினமும் வரும் கரோனா நோயாளிகளில் உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் இந்திரா காந்தி அரசு மருத்துவ கல்லூரி மற்றும் ஜிப்மர் மருத்துவமனையிலும் மற்றவர்கள் தனியார் மருத்துவ கல்லூரிகளிலும் அனுமதிக்கப்படுகின்றனர்.

6 ஆம்புலன்ஸ்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில் சிறப்பு மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள் இருப்பார்கள். வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட நோயாளிகளுக்கு உடல்நிலை சரியில்லை என்றால் உடனே சென்று சிகிச்சை அளிப்பார்கள். அங்கு நோயாளி உடல்நிலை மிகவும் மோசமாக இருந்தால் அவர்களை மருத்துவமனையில் சேர்ப்பார்கள். மேலும் ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் நிர்வாகிகளை அழைத்தும் பேசியுள்ளேன். மருத்துவ காப்பீடு திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்துவதாக உறுதியளித்துள்ளனர். அதேபோல், கதிர்காமம் மருத்துவ கல்லூரியில் அனுமதிக்கப்பட்டுள்ள கரோனா நோயாளிகளில் சிறுநீரக பாதிப்பு உள்ளவர்களுக்கு தனியாக டயாலிசிஸ் செய்வதற்கு பிம்ஸ் மருத்துவ கல்லூரி மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுபோல் தினமும் என்னென்ன செய்ய முடியுமோ, அதனை கலந்தாலோசித்து செய்து வருகிறோம்.

தனியார் மருத்துவ கல்லூரிகள் இதுவரை சாப்பாடு உள்ளிட்ட எதற்கும் நம்மிடம் பணம் கேட்கவில்லை. தற்போது நாள் ஒன்றுக்கு, ஒரு நோயாளிக்கு ரூ.200 வீதம் தனியார் மருத்துவ கல்லூரியில் அனுமதிக்கப்பட்டுள்ள கரோனா நோயாளிகளுக்கு வழங்குவதாக கூறியுள்ளேன். அதேபோல் மருத்துவர் மற்றும் செவிலியர்களுக்கு தேவையான பி.பி. கிட் உள்ளிட்ட உபகரணங்கள் வழங்குவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. புதிதாக 12 ஆம்புலன்ஸ் வாங்கவும் டென்டர் கோர உள்ளோம். மேலும், 3 மாதங்களுக்கு தேவையான மருத்துவ உபகரணங்கள் வாங்க நடவடிக்கை எடுத்துள்ளோம்’’எனத் தெரிவித்தார்.

இதனிடையே புதுச்சேரி சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமி மற்றும் அவரது இளைய மகன் விக்னேஷ் ஆகியோருக்கு கரோனா தொற்று உறுதியாகி, இருவரும் ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நேற்று முன்தினம் அமைச்சர் கந்தசாமியின் தாயாருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், அமைச்சர் கந்தசாமி மற்றும் அவரது மகன்கள் இருவர், மனைவி உள்ளிட்ட 9 பேருக்கு உமிழ்நீர் எடுக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அமைச்சர் கந்தசாமி மற்றும் அவரது மகன் விக்னேஷ் ஆகிய இருவருக்கும் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. புதுச்சேரியில் அமைச்சர் ஒருவருக்கு முதன்முறையாக தொற்று உறுதிசெய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT