தூத்துக்குடியில் மொத்தமாக வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதிகளில் இன்று ஐந்து ஹெலிகாப்டர்கள் மூலம் உணவு விநியோகம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வரலாறு காணாத மழை நேற்று முன்தினம் நெல்லை, தூத்துக்குடி குமரி மாவட்டங்களில் பெய்த நிலையில் நேற்று மழை குறைந்துள்ளது. நேற்று காலை 8.30 மணி முதல் இன்று காலை வரை சாத்தான்குளத்தில் 4 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது.
குமரி மாவட்டத்தில் மழை ஓய்ந்த நிலையில், தென்காசியில் நேற்று இரவு விட்டு விட்டு சில நிமிடங்கள் மழை பெய்தது. தொடர் மழை மற்றும் வெள்ளம் காரணமாக நெல்லை ரயில் நிலையத்திலிருந்து புறப்படும் முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. நெல்லை-செங்கோட்டை, நெல்லை- நாகர்கோவில், நெல்லை-திருச்செந்தூர் சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. வாஞ்சி மணியாச்சி-திருச்செந்தூர் சிறப்பு ரயில் இன்று இரு மார்க்கத்திலும் ரத்து செய்யப்பட்டுள்ளது. திருச்செந்தூரில் இருந்து சென்னை எழும்பூர் வரும் விரைவு ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. திருச்சி-திருபுவனம் விரைவு ரயில் இரு மார்க்கத்திலும் ரத்து செய்யப்பட்டுள்ளது.