ADVERTISEMENT

“நிபுணத்துவ உறுப்பினர்கள் நிபுணர்களாக இருக்க வேண்டும்” - உயர்நீதிமன்றம் 

05:00 PM Apr 16, 2021 | lakshmanan@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

தீர்ப்பாய நிபுணத்துவ உறுப்பினர்களாக நியமிக்கப்படுபவர்கள், நிபுணர்களாக இருக்க வேண்டும் எனச் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தேசிய பசுமைத் தீர்ப்பாய நிபுணத்துவ உறுப்பினராக தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் நியமிக்கப்பட்டதை எதிர்த்து பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சார்பில் சுந்தர்ராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

விதிகளின்படி, ஐந்து ஆண்டுகள் சுற்றுச்சூழல் சார்ந்த பணிகளில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும் என்ற நிலையில், 3 ஆண்டுகள் ஆறு மாதங்கள் மட்டுமே அனுபவம் கொண்ட கிரிஜா வைத்தியநாதன் நியமிக்கப்பட்டுள்ளதாக மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு, இந்த வழக்கு முடிவடையும் வரை கிரிஜா வைத்தியநாதன் நியமனத்துக்கு இடைக்காலத் தடை விதித்திருந்தது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது வரி, சுற்றுச்சூழல், நுகர்வோர் விவகாரங்களில் உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்குப் போதிய நிபுணத்துவம் இல்லை என்பதாலேயே மத்திய அரசு தீர்ப்பாயங்களை உருவாக்கியது எனக் குறிப்பிட்ட தலைமை நீதிபதி, நிபுணராக இல்லாத ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் தற்போது நியமிக்கப்பட்டு வருகின்றனர். எனவே, நிபுணத்துவ உறுப்பினர் என்பவர் நிபுணராக இருக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

மத்திய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல், விதிகளின்படி, சுற்றுச்சூழல் படிப்பில் முதுகலை அல்லது முனைவர் பட்டம் பெற்று, 25 ஆண்டுகள் இத்துறையில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். அல்லது 20 ஆண்டுகால நிர்வாக அனுபவத்தில் ஐந்து ஆண்டுகள் சுற்றுச்சூழல் சார்ந்த துறையில் பணியாற்றிய அனுபவம் பெற்றிருக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது என்றார். தொடர்ந்து அவர், பெரும்பாலான அரசு நிறுவனங்களின் நிர்வாகக் கட்டுப்பாட்டை கவனிப்பது ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் தான் எனவும் குறிப்பிட்டார். பின் வழக்கு தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்யக் கூறி, வழக்கு விசாரணையை வரும் திங்கள் கிழமைக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT