இக்கூட்டத்திற்கு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் சக்கரபாணி தலைமை தாங்கினார். பழனி சட்டமன்றஉறுப்பினர் ஐ.பி.செந்தில்குமார் மற்றும் ஒட்டன்சத்திரம் நகர செயலாளர் வெள்ளைச்சாமி உட்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் என ஏராளமானோர்; கலந்துகொண்டனர். இக்கூட்டத்திற்கு ஒட்டன்சத்திரம் தொகுதியில் இருந்து 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட பொதுமக்கள் சாரை சாரையாக வந்தனர். அவர்களை உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி இருகரம் கூப்பி வரவேற்றார். இக்கூட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி மற்றும் உணவு மற்றும் உணவு வழங்கல்துறை அமைச்சர் சக்கரபாணி ஆகியோர் மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சச்சிதானந்தத்தை பொதுமக்கள் மத்தியில் அறிமுகப்படுத்தினார்கள்.
இக்கூட்டத்தில் அமைச்சர் சக்கரபாணி பேசும்போது, திண்டுக்கல் மாவட்டத்தை நாம் தி.மு.க. கோட்டையாக உருவாக்கி இருக்கிறோம். 34 மாத கழக ஆட்சியில் செய்த சாதனைகள் ஏராளம். தமிழக முதல்வரின் சாதனையை இந்தியாவே உற்றுப் பார்க்கிறது. தமிழகத்தில் பொற்கால ஆட்சி நடைபெற்று வருகிறது. சொல்லாத வாக்குறுதிகள் அத்தனையையும் நம் முதல்வர் நிறைவேற்றி இருக்கிறார். பெண்களுக்கு செய்த திட்டங்கள் ஏராளம். உரிமைத் தொகை கிடைக்காத தகுதிவாய்ந்த தாய்மார்களுக்கு விரைவில் அத்தொகை கிடைக்க ஏற்பாடு செய்துள்ளேன்.
முக்கியமான மூன்று கோரிக்கைகளை மக்களிடத்தில் நாம் சேர்க்க வேண்டும். கூட்டணி கட்சி வேட்பாளராக போட்டியிடும் சிபிஎம் சின்னமான அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்தை வீடுதோறும் கொண்டுபோய் சேர்க்க வேண்டும். பா.ஜ.க. துரோகத்தை மக்களிடம் சொல்ல வேண்டும். தமிழக முதல்வரின் சாதனையை விளக்கி பொதுமக்களிடம் சேர்க்க வேண்டும். கழகத்தின் மீது பொதுமக்களிடையே அன்பும், பாசமும் உள்ளது. இந்த பாராளுமன்ற தேர்தலில் இந்தியாவிலேயே அதிக வாக்குகள் வாங்கிய தொகுதியாக திண்டுக்கல் தொகுதி இருக்க வேண்டும். அதற்கு நீங்கள கடுமையாக உழைக்க வேண்டும்” என்று கூறினார்.
இக்கூட்டத்தில் இறுதியாக அமைச்சர் ஐ.பெரியசாமி பேசும்போது, “காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கான நிதி ஒரு லட்சம் கோடியாக இருந்து வந்தது. ஆனால், பிஜேபி அரசு தற்பொழுது அறுபது ஆயிரம் கோடியாக குறைத்துள்ளது. இதனால் நூறு நாள் வேலை திட்டத்தில் பணிபுரியக்கூடியவர்களுக்கு வேலை குறைக்கப்படுகிறது. அதற்கான கூலியும் முறையாக தரப்படுவதில்லை. மத்தியஅரசு ஜிஎஸ்டி மூலம் பொதுமக்களிடம் இருந்து வரி வசூல் செய்கிறது. மத்திய அரசுக்கு அதிக வரி செலுத்துவதில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. ஆனால் மத்திய அரசு தமிழகத்தை வஞ்சிக்கின்றது.
அரசு திட்டங்களுக்கு வழங்க வேண்டிய தொகையை மத்திய அரசு வழங்க மறுத்து வருகிறது மேலும் தமிழக அரசு மீது பொதுமக்கள் மத்தியில் கெட்ட பெயரை உருவாக்க வேண்டும் என்பதற்காக மத்திய அரசு இது போல் செய்து வருகிறது. ஆனால், அது நடக்காது தமிழக முதல்வர் ஏழை எளிய நடுத்தர மக்களின் தேவைகளை பூர்த்தி செய்துவருகிறார். மக்களுக்கு என்ன தேவை என கண்டறிந்து அதனை நிவர்த்தி செய்துவருகிறார் இது போல் செய்யக்கூடிய முதல்வர்கள் யாரும் கிடையாது இந்தியாவிலேயே தமிழக முதல்வர் ஒருவர் மட்டுமே. ஆட்சியில் இருந்த அதிமுக கடந்த பத்து ஆண்டுகளில் விவசாயிகளை பட்டினி போட்டது விவசாயிகளுக்கு எதுவும் செய்யவில்லை ஆட்சி முடிய போற நேரத்தில் ஓட்டு வாங்க வேண்டும் என்பதற்காக விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என பேருக்கு சொல்லிவிட்டு சென்றனர். ஆனால், தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நிதி ஆதாரமில்லாத சூழ்நிலையிலும் விவசாயிகளுக்கு ரூ.12 ஆயிரம் கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டது.
கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் திமுக எம்.எல்.ஏ தொகுதிகளுக்கு முறையாக நிதி ஒதுக்கீடு செய்வது கிடையாது. ஆனால், எடப்பாடி பழனிச்சாமி தொகுதிக்கு உட்பட்ட இரண்டு யூனியன்களுக்கு 20 கோடிநிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் உள்ள மக்கள், நம் மக்கள் ஆகையால் அவர்களது தேவைகளை பூர்த்தி செய்வதற்காக தமிழக முதல்வர் தேவையான நிதிகளை ஒதுக்கீடு செய்து பணிகளை மேற்கொண்டு வருகின்றார். மத்தியில் இந்த முறை கண்டிப்பான முறையில் ஆட்சி மாற்றம் என்பது நடைபெறும். ஆகையால் நாங்கள் கொடுக்கக்கூடிய வாக்குறுதிகள் அனைத்தும் முழுமையாக நிறைவேற்றப்படும் என்று கூறினார்.