Skip to main content

சாயம் வெளுத்துப் போன ஜால்ரா பேர்வழிகள், சந்தர்ப்பவாதிகள்! -அ.தி.மு.க. அமைச்சர்களுக்கு ஐ.பெரியசாமி கண்டனம்!

Published on 01/07/2020 | Edited on 01/07/2020

 

ip

 

அ.தி.மு.க. அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், பாண்டியராஜன் ஆகியோரை கண்டித்து தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் ஐ.பெரியசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். 

 

அதில், “முதலமைச்சர் ஏதாவது மக்கள் நலன் சார்ந்த அறிவிப்புகளை வெளியிடுவதற்கு ஒரு நாளைக்கு முன்போ அல்லது ஒரு மணி நேரத்திற்கு முன்போ அறிக்கை விட்டு- நான் சொல்லித்தான் இந்த அறிவிப்பு வந்துள்ளது என ஒரு தவறான தகவலை தி.மு.க. தலைவர் மக்களிடத்திலே ஏற்படுத்தி வருகிறார்” என்று, “2000 கோடி ரூபாய் பாரத்நெட் டெண்டர் புகழ்” அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டியளித்திருப்பதற்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

 

அடிக்கடி “உரிமையாளரை” மாற்றும் “வாடகைதாரருக்கு” எங்கள் கழகத் தலைவரை விமர்சிக்க யோக்கியதை இல்லை. 

 

சசிகலா, டி.டி.வி. தினகரன், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம். தற்போது முதலமைச்சர் பழனிசாமி என்று, “பச்சோந்தி” போல் உரிமையாளரை மாற்றிய உதயகுமாரே, இந்த ஆட்சியில் ஒரு வாடகைதாரர்தான்! வாடகை செலுத்தும் உரிமையாளர் பழனிசாமிக்கு, அவர் “ஜால்ரா” அடிக்கலாம். ஆனால் எங்கள் கழகத் தலைவரைப் பார்த்து விமர்சனம் செய்ய அவருக்கு எந்த அருகதையும் இல்லை.

 

16.3.2020 அன்றிலிருந்து எங்கள் கழகத் தலைவர் வெளியிட்ட ஆலோசனைகளை ஒன்றிரண்டை நிறைவேற்றி- மக்கள் உயிர்காக்கும் எண்ணற்ற அரிய ஆலோசனைகளைப் புறக்கணித்த மகாபாவிகளைக் கொண்ட “ஊழல் கூடாரம்” அ.தி.மு.க. ஆட்சி.

 

அமைச்சர் திரு. உதயகுமார், மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் உறுப்பினர். ஆனால் சொந்த மதுரை மாவட்ட மக்களை கரோனாவின் பிடியில் குலை நடுங்க வைத்து விட்டு - டெண்டரில் கமிஷன் பார்க்கும் வேலையில் சென்னையில் தீவிரமாக இருக்கிறார்.

 

எங்கள் தலைவரின், “ஒன்றிணைவோம் வா” திட்டத்தின் பணி அவர் கண்ணுக்குத் தெரியவில்லை. அ.தி.மு.க. அமைச்சர்களும், முதலமைச்சரும் வீட்டிற்குள்ளேயே- ஏன், கஜானாவிற்குள்ளேயே முடங்கிக் கிடந்த போது, கரோனாப் பணிகளில் ஈடுபட்டவர், எங்கள் கழகத் தலைவர். 

 

இன்றைக்கும் கட்சி நிர்வாகிகள் முதல் உள்ளாட்சி மன்ற நிர்வாகிகள் வரை, அனைவரையும் தினமும் இப்பணிகளில் ஈடுபடுத்தி வருபவர்!

 

கரோனா காலத்தில்- மக்களுக்கு யார் உதவி செய்தாலும், அதை வரவேற்க வேண்டியது ஒரு பொறுப்புள்ள அரசின் கடமை. அதிலும் எதிர்க்கட்சி, மாபெரும் “ஒன்றிணைவோம் வா” என்ற மக்கள் இயக்கத்தை நடத்திய போது- அதை வரவேற்க மனமில்லை என்றாலும், கொச்சைப் படுத்தும் கொடுமையான அரசு, இங்குள்ள அ.தி.மு.க. அரசு. ஏனென்றால் அமைச்சர் திரு. உதயகுமாருக்கோ- முதலமைச்சருக்கோ மக்கள் பணியில் அக்கறை இல்லை. 

 

பிரதான எதிர்க்கட்சித் தலைவரின் ஆலோசனை வழங்கும் அறிக்கைகளையும், மக்கள் நல உதவிகளையும், பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் உறுப்பினராக இருப்பவரே கொச்சைப் படுத்துவது என்பது, இவர் “அதுக்கு லாயக்கில்லை” என்பதைத்தான் தெரியப்படுத்துகிறது.

 

மாநில பேரிடர் மேலாண்மைத் தலைவரான முதலமைச்சரும், உறுப்பினரான திரு. உதயகுமாரும் படுதோல்வி அடைந்து, நிர்க்கதியாக நிற்கிறார்கள். 

 

ஜூன் 1 ஆம் தேதி, மதுரையில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எவரும் இல்லை. ஆனால் ஜூன் 30 ஆம் தேதி, அங்கு பாதிக்கப்பட்டுள்ளவர்கள் 2,557 பேர். 

 

3 பேராக இருந்த கரோனா மரணம், நேற்று மதுரையில் 32 ஆக உயர்ந்திருக்கிறது. கடந்த நான்கு தினங்களாக, தினமும் 200 பேர் கரோனாவால் அங்கு பாதிக்கப்படுகிறார்கள். தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்களில் மதுரைக்கு மட்டும் தனி ஊரடங்கு போட வேண்டிய நிலை ஏற்பட்டது. பேரிடர் மேலாண்மை உறுப்பினரின் மாவட்டத்தில் இதுதான் நிர்வாக லட்சணம் !

 

தமிழ்நாட்டில் ஜூன் 1 ஆம் தேதி பாதிக்கப்பட்டோர் 23,495 பேர்தான். ஆனால் நேற்றைய கணக்குப்படி 90,167.

 

அதே போல் தமிழக அளவில் இறந்தவர்களின் எண்ணிக்கையான 184, நேற்றைய கணக்குப்படி 1,201 ஆக உயர்ந்து மக்களை அச்சப்படுத்திக் கொண்டிருக்கிறது.

 

கரோனா மரணம் நோய்த் தொற்றை விட வேகமாக இரட்டிப்பு ஆகிறது என்று இன்று, “டைம்ஸ் ஆப் இந்தியா” பத்திரிக்கைச் செய்தி வெளியிட்டுள்ளது. அதில் “கரோனா நோய்த் தொற்றுக்கு உள்ளானவர்களில் 40 சதவீதம் பேர், இரு நாட்கள் கூட  மருத்துவமனையில் உயிருடன் இருப்பதில்லை” என்ற அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது. கரோனா நோய்த் தொற்றை ஒழிக்கும் பணியில், அ.தி.மு.க. அரசின் அரைவேக்காட்டு நிர்வாகம் இதுதான்.

 

மக்கள் நலனில் ஆக்கபூர்வமான ஆலோசனைகள் அடங்கிய அறிக்கைகளை வெளியிடுவது, எங்கள் கழகத் தலைவர். ஆனால் கரோனா நோய்த் தொற்றை பரவ விட்டு- நோய்த் தொற்று - நோய்த் தடுப்பு நடவடிக்கைகளில் ஊழல் செய்து- மருத்துவமனைகளில் இரு நாட்கள் கூட உயிருடன் கரோனா நோயாளிகள் இருக்க முடியாத ஒரு அபாயகரமான- அச்சமூட்டும் சூழலை மக்களுக்கு ஏற்படுத்தியுள்ளது, பேரிடர் மேலாண்மை ஆணைய உறுப்பினர் திரு. உதயகுமாரும், தலைவர் முதலமைச்சர் திரு. பழனிசாமியும்தான். இந்தத் தோல்வியால் அடித்தட்டு மக்கள் வரை அச்சத்தில் உறைந்து போயிருக்கிறார்கள் என்பதுதான் உண்மை.

 

“பொதுவாழ்வில் இருப்போரை முடக்கிப் போட அறிக்கைகளை விடுகிறார்” என்று கூறும் அமைச்சர் திரு. உதயகுமார், பொது வாழ்வு என்றால், கிலோ என்ன விலை என்று கேட்பவர். "பாரத் நெட்" டெண்டர் திட்ட ஊழல் - எங்கள் கழகத் தலைவர் கூறியது போல், இன்றைக்கு டெல்லி செங்கோட்டை வரை அ.தி.மு.க. அரசின் மானம் காற்றில் பறக்கிறது. 

 

மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்தோஷ்பாபு விருப்ப ஓய்வில் சென்றது, பிறகு அவரை வேறு “டம்மி” துறைக்கு மாற்றியது, ஜூனியர் ஐ.ஏ.எஸ். அதிகாரியை நியமித்து, உள்ளூர் கம்பெனிகள் கலந்து கொள்ள முடியாதபடி டெண்டர் விதிகளை முறைகேடாக உருவாக்கியது என்று, ஊழலில் ருசி பார்த்துக் கொண்டிருக்கும் அமைச்சர் திரு. உதயகுமார், மத்திய அரசு, டெண்டரை ரத்து செய்ய உத்தரவிட்ட பிறகும், “மீசையில் மண் ஒட்டவில்லை” என்று பேசுவது, அசிங்கத்தின்- அருவருப்பின் அடையாளம். 

 

இந்நேரம், வேறு தன்மானம் உள்ள அமைச்சர் இருந்திருந்தால்- இப்போதுள்ள திரு. பழனிசாமியின் வாடகை வீட்டையாவது காலி செய்து விட்டுச் சென்றிருப்பார்.

 

“டெண்டர் விவாகரத்தில் முகாந்திரமில்லாமல் குற்றம் சாட்டுகிறீர்கள் என்ற கேள்விக்கு மூக்கறுபட்டு நீதிமன்றத்திலிருந்து வழக்கை தி.மு.க. வாபஸ் பெற்றதாக” ஒரு அபாண்டமான பொய் சொல்கிறார். லஞ்ச ஊழல் தடுப்புத் துறையை விட்டு, புகாரில் முகாந்திரமில்லை என்று நீதிமன்றத்தில் அறிக்கை கொடுக்க வைத்தது யார்? உடம்பெல்லாம் ஊழல்- பேசுவதெல்லாம் பொய் என்று வாழ்ந்து கொண்டிருக்கும் திரு. உதயகுமார் திடீரென்று அரிச்சந்திரன் வேடம் போடக்கூடாது. மதுரை மக்கள் எள்ளி நகையாடுவார்கள். 

 

ஊழல் இல்லை என்று அமைச்சர் சொல்வது உண்மையென்றால், "பாரத் நெட்" டெண்டர் குறித்த கோப்புகள் அனைத்தையும் பொது வெளியில் கொண்டு வந்து என்னுடன்  விவாதிக்கும் தெம்பும், திராணியும் திரு. உதயகுமாருக்கு இருக்கிறதா? குறிப்பாக தற்போதுள்ள தகவல் தொழில்நுட்பச் செயலாளர் கையெழுத்துப் போடாத அந்தக் கோப்பை எடுத்து வரத் தயாரா?

 

இன்னொரு அமைச்சர்! அவர் பெயர் திரு. பாண்டியராஜன். பிறப்பிலேயே கட்சி தாவும் கலையுடன் அவதரித்தவர். இனி சந்திரமண்டலத்தில் புதிதாக ஒரு கட்சி துவங்கினால் அங்கும் “துண்டு” போடக் காத்திருந்து- “தன்மானத்தை" விலை பேசுபவர். அவரெல்லாம் எங்கள் கழகத் தலைவர் விடும் அறிக்கைகளைப் பற்றி பேசுவதற்குத் தகுதி இல்லை. 

 

ஒரு தலைமைக்கு விசுவாசமாக இருக்க முடியாதவர்- தமிழ் வளர்ச்சித் துறையில் தமிழை ஒவ்வொரு நாளும் படுகொலை செய்து கொண்டிருப்பவர், எங்கள் கழகத் தலைவரைப் பார்த்துப் பேச யோக்கியதை இல்லை.

 

“முதலமைச்சர் எடுக்கும் முடிவுகளைத் தெரிந்து கொண்டு முன்கூட்டியே ஆலோசனைகள் என்ற பெயரில் அறிக்கைகளை விடுகிறார்” என்று, அவமானமாத்தை மறைத்துக் கொண்டு பேட்டி கொடுக்கிறார். அவரிடம் நான் கேட்க விரும்புவது; உங்கள் முதலமைச்சரின் முடிவு எடுக்கும் ரகசியம் எங்கள் கழகத் தலைவருக்கு தெரிகிறது என்று சொல்வதற்கே உங்களுக்கு வெட்கமாக இல்லையா?" என் வீட்டுச் சமாச்சாரம் அடுத்த வீட்டுக்காரருக்குத் தெரிகிறது" என்று தெருவில் நின்று புலம்பினால், அதுக்கு “அர்த்தம் வேறு” என்பதை அமைச்சர் திரு. பாண்டியராஜன் உணர வேண்டும்!

 

http://onelink.to/nknapp

 

ஆகவே அமைச்சர்கள் திரு. உதயகுமாரும், திரு. பாண்டியராஜனும் “பேட்டி” என்ற பெயரில் “பிதற்ற" வேண்டாம். பதற்றத்தில் உள்ள மக்களைப் பாருங்கள். 

 

எங்கள் கழகத் தலைவர் அளிக்கும் பொன்னான ஆலோசனைகளைக் கேளுங்கள். “வீடு” “வீடாக” குடியேறி வந்த பழக்க தோஷத்தில் எதைப்பார்த்தாலும் சந்தேகப்படாதீர்கள்.

 

கரோனா கால மக்கள் பணியில் ஒரு பிராதன எதிர்க்கட்சி- “ஒன்றிணைவோம் வா” என்று, ஒரு மாபெரும் இயக்கத்தை நடத்தி மக்களின் பட்டினியைப் போக்கப் பாடுபட்டுள்ளது என்றால்- இந்தியாவிலேயே அது திராவிட முன்னேற்றக் கழகம் மட்டும்தான்! எங்கள் கழகத் தலைவர் மட்டும்தான்! நீங்கள் எல்லாம் சாயம் வெளுத்துப் போன ஜால்ரா பேர்வழிகள். சந்தர்ப்பவாதிகள். அரசியல் உலகம் வெட்கப்பட வேண்டிய பேர்வழிகள் என்று தெரிவித்துக் கொள்ளக் கடமைப்பட்டுள்ளேன். இவ்வாறு கூறியுள்ளார். 
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“என்ன எல்லாரும் பளபளன்னு இருக்கீங்க... ஆயிரம் ரூபாய் வந்துடுச்சா” - கதிர் ஆனந்த் பிரச்சாரம்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Kathir Anand campaign in Vellore

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பரதராமி, கல்லப்பாடி, கொண்டசமுத்திரம்,  பி.கே.புரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வேலூர் பாராளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் பிரச்சாரம் மேற்கொண்டார்

அப்போது பேசிய கதிர் ஆனந்த், ட்ரைவர் வண்டி மேல இருக்க ஹெட் லைட் எல்லாம் ஆஃப் பண்ணுப்பா. என் மூஞ்சு தெரியமாட்டுதாம் என்று கூற, உடனடியாக ட்ரைவரும் லைட் ஆஃப் பண்ண, மக்களை பார்த்து இப்போது எனது முகம் தெளிவாக தெரிகிறதா? என்று கேட்டார். அதற்கு மக்களும் தொண்டர்களும் தெரியுது தெரியுது என்று சிரித்துக்கொண்டே கூற தனது பேச்சைத் தொடங்கினார்.

அந்த கலகலப்பு குறையாமல் இருக்க மக்களைப் பார்த்து, என்ன எல்லாரும் பல பளபளன்னு இருக்கீங்க... எல்லாம் ஃபுல்லா மேக்கப் போட்டு வந்து இருக்கீங்களா... ஃபேரன் லவ்லி, ஸ்டிக்கர் பொட்டு எல்லாம் போட்டு ஜம்முன்னு வந்திருக்கீங்களா... என்று கேட்க கூட்டத்தில் இருந்தவர்கள் சிரிக்க ஆரம்பிக்க, அதைவிட உங்க முகத்தை பார்க்கும் போது ஒரு புன்னகை, சந்தோஷம் தெரிகிறது.

நான் வந்தவுடனே சீதாராமன் கிட்ட கேட்டேன், “என்னாங்க எல்லார் மத்திலயும் ஒரு சந்தோஷம் இருக்குதே என்னா காரணம்னு கேட்டேன். அதுக்கு அவரு சொன்னாரு எல்லாருக்கும் மாசம் மாசம் ரூ. 1000 பணம் கொடுக்குறாங்களாம். அதான் எல்லாரும் ஹாப்பியா இருக்காங்களாமானு சொன்னாரு...’ என்ன உண்மையா அது? என்று பெண்களை பார்த்து கேட்க, அவர்களும் ஆம் என்று கூச்சலிட்டனர். அப்பொழுது சிலர் இன்னும் எங்களுக்கு வரவில்லை என கூறினர். அதற்கு இந்த தேர்தல் முடிந்தவுடன் அனைவருக்கும் கலைஞர் மகளிர் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று  மக்களிடையே தனது கலகலப்பான பேச்சை தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

இருப்பினும், ஃபேரன் லவ்லி போட்டீங்களா? பொட்டு வச்சீங்களா? பளபளன்னு இருக்கீங்க என கதிர் ஆனந்த் கேட்டது பெண்களிடம் முகச்சுழிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை எதிர்க்கட்சிகள், பெண்களை கொச்சைப்படுத்தி பேசுகிறார் வேட்பாளர். இது மேட்டிமைத்தனம், ஆயிரம் ரூபாய் இல்லை என்றால் பெண்கள் என்ன பொட்டு வைக்கக் கூடாதா? தங்களை அழகுபடுத்திக் கொள்ளக் கூடாதா? எனக் கேள்வி எழுப்பி விமர்சனம் செய்து வருகின்றனர்.

Next Story

“எதிரணி வேட்பாளர் போல் எங்கிருந்தோ வந்தவன் அல்ல நான்” - அ.தி.மு.க. வேட்பாளர் பிரச்சாரம்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
AIADMK candidate Karuppaiya campaign in Trichy

திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் கருப்பையா திருவரங்கம்  ரெங்கநாதர் கோவில் ரெங்கா ரெங்கா கோபுரம் முன் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கி தனது பிரச்சாரத்தை நேற்று மாலை தொடங்கினார். இந்த வாக்கு சேகரிப்பு நிகழ்ச்சிக்கு வடக்கு மாவட்டச் செயலாளர் பரஞ்ஜோதி தலைமை தாங்கிப் பேசினார்.

அப்போது பரஞ்ஜோதி பேசுகையில், திருச்சி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் எடப்பாடியாரின் ஆசி பெற்ற அதிமுக வேட்பாளர் கருப்பையாவை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெறச் செய்ய வேண்டும். அவர் வெற்றி பெற்றால் திருச்சி பாராளுமன்ற தொகுதி மக்களின் குரலாக நிச்சயம் பாராளுமன்றத்தில் குரல் கொடுப்பார். மக்களின் வளர்ச்சி திட்டங்களுக்கு பாடுபடுவார் என்றார்.

திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் ப.குமார் பேசியபோது, ஸ்ரீரங்கம் மண் இங்கு இருப்பவர்கள் மட்டுமல்லாமல் உலகத்தில் இருப்பவர்கள் யார் இங்கு வந்தாலும் அவரை உயரே தூக்கி விடுகின்ற மண். எனவே நிச்சயம் கருப்பையாவையும் உயரே கொண்டு வரும். அவர் மக்கள் பணி சிறப்பாக செய்வார். திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. அந்த வெற்றிடத்தை நிரப்புகின்ற தகுதி அதிமுகவிற்கு மட்டும்தான் உள்ளது என்பதை பொதுமக்கள் நிரூபிப்பார்கள். கருப்பையா திருச்சியிலிருந்து மக்கள் பணி ஆற்றுவார் என உறுதியளிக்கின்றோம் என்றார்.

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பேசுகையில், திருச்சி நாடாளுமன்ற தொகுதி எதை எதிர்பார்க்கிறதோ எதை ஆழமாக வேண்டும் என்று நினைக்கின்றதோ நாடாளுமன்ற உறுப்பினர் எப்படி சிறப்பாக செயல்பட வேண்டும் என நம்புகிறார்களோ அந்த நம்பிக்கைக்கு பாத்திரமாக உங்களுடைய உணர்வுகளுக்கு பாத்திரமாக உழைக்கக் கூடியவர் இளைஞர் கருப்பையா. உங்களை தாங்கியும் பிடிப்பார். உங்களுக்காக பாராளுமன்றத்தில் ஓங்கியும் குரல் கொடுப்பார் என்றார்.

ரெங்கா ரெங்கா கோபுரத்திற்கு முன்பாக வேட்பாளர் கருப்பையா பேசுகையில், எதிர் அணியில் நிற்கும் வேட்பாளரை போல் எங்கிருந்தோ வந்து தேவைக்காக ரெங்க நாதரையும் மக்களையும் சந்திக்கக் கூடியவர் நான் அல்ல. இந்த மண்ணின் மைந்தன் ஆகிய நான் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும். மக்களின் உரிமைகளை நாடாளுமன்றத்தில் ஒலிக்க செய்ய வேண்டும் என்பதற்காகவே போட்டியிடுகிறேன் என்றார்.

பிரச்சாரத்தில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், மாவட்டச் செயலாளர்கள் குமார், பரஞ்சோதி, சீனிவாசன், அமைப்புச் செயலாளர்கள் ரத்தினவேல், மனோகரன், முன்னாள் அமைச்சர் வளர்மதி, சிறுபான்மை பிரிவு மாவட்டச் செயலாளர் புல்லட் ஜான், மீனவர் அணி பேரூர் கண்ணதாசன், இளைஞரணி மாவட்ட துணை செயலாளர் தேவா, ஜெயலலிதா பேரவை துணைச் செயலாளர் வி.என்.ஆர்.செல்வம், தமிழரசன், ஒன்றிய செயலாளர்கள் முத்துக்கருப்பன், ஜெயக்குமார், கோப்பு நடராஜ், பகுதி செயலாளர்கள் டைமன் திருப்பதி, சுந்தர்ராஜன், பொதுக்குழு உறுப்பினர் பிரியா சிவகுமார் மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.