உத்திர பிரதேச மாநிலம் லக்கிம்பூர்கேரி என்ற இடத்தில் மத்திய பா.ஜ.க. அமைச்சர் அஜய் மிஸ்ரா, உ.பி. துணை முதல்வர் கேசவ பிரசாத் மவுரியா (பா.ஜ.க.) ஆகியோர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் அமைச்சர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக அங்குள்ள விவசாயிகள் ஒன்று திரண்டு போராட்டம் நடத்தினார்கள்.
அப்போது விவசாயிகளின் போராட்டக் கூட்டத்திற்குள் சென்ற அவர்களது வாகனங்கள் மோதி சம்பவ இடத்திலேயே நான்கு விவசாயிகள் துடிதுடித்து இறந்து போனார்கள். இறந்த விவசாயிகளின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறுவதற்காகக் காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகியான பிரியங்கா காந்தி உத்திர பிரதேசத்திற்கு நேரில் சென்றார். ஆனால் அவரை அனுமதிக்காமல் சிறை வைக்கப்பட்டுள்ளார்.
இதைக் கண்டித்தும், கொல்லப்பட்ட விவசாயிகளுக்கு நீதி கேட்டும், இந்தச் சம்பவத்திற்குக் காரணமான மத்திய மற்றும் மாநில பா.ஜ.க. அமைச்சர்கள் மீது கொலை வழக்குப் பதியக் கோரியும் காங்கிரஸார் நாடு முழுக்க போராட்டம் நடத்தி வருகிறார்கள். ஈரோடு மாவட்டத்தில் தெற்கு மாவட்டத் தலைவர் மக்கள் ராஜன் தலைமையில் சிவகிரியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.