வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு சிறையிலிருந்து பிணையில் வந்த தொழிலாளி, அவமானம் தாங்க முடியாமல் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே மூக்குடி கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி பழனிச்சாமி (50). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ரவிக்குமார் (35) என்பவருக்கும் சில மாதங்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டு அறந்தாங்கி காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் ரவிக்குமார் கொடுத்த புகாரின் பேரில் பழனிச்சாமி மீது பி.சி.ஆர். வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
முன்ஜாமீன் பெறப்படாத நிலையில், பழனிச்சாமி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு பிறகு நிபந்தனை பிணை பெற்று வெளியே வந்தார். அதன் காரணமாக இவர் கடந்த சில நாட்களாக நிபந்தனை பிணைக்காக கையெழுத்து போட்டு வருகிறார். இந்த நிலையில், சிறையில் அடைத்துவிட்டார்களே என்ற ஆதங்கத்தில் மன உளைச்சல் ஏற்பட்டு அந்த மன உளைச்சலில் வீட்டிலிருந்து சற்று தூரத்தில் உள்ள மரத்தில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார்.
பழனிச்சாமி உயிரை மாய்த்துக் கொள்ள காரணமாக இருந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பழனிச்சாமியின் உறவினர்கள் சடலத்தை வாங்க மறுத்து திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் அதிகாரிகள் சமாதான பேச்சுவார்த்தை நடத்திய பிறகு மறியல் கைவிடப்பட்டது.