ADVERTISEMENT

கர்ப்பிணி பெண் தற்கொலை; கணவர், மாமனார் கைது

10:36 AM Oct 29, 2022 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

கள்ளக்குறிச்சி அருகில் உள்ள நீலமங்கலம் புது காலனி பகுதியைச் சேர்ந்தவர் தொப்பளான். இவரது மகன் புருஷோத்தமன்(23). இவருக்கும் கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள நல்லூர் நகர் பகுதியைச் சேர்ந்த பழனிவேல் என்பவரது மகள் ஐஸ்வர்யா(22) இருவரும் காதலித்து கடந்த 2018 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டுள்ளனர். இவர்களுக்கு இரண்டு வயதில் பெண் குழந்தை ஒன்றும் உள்ளது. மேலும் ஐஸ்வர்யா தற்போது ஒன்பது மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.

இவரது கணவர் புருஷோத்தமன் சுப துக்க காரியங்களில் மேளம் வாசிக்கும் தொழில் செய்து வருவதாகவும் அந்த வகையில் நிகழ்ச்சிக்குச் செல்லும் போது வேறு பெண்களுடன் நெருங்கி பழகி வந்ததாகவும் கூறப்படுகிறது. இது குறித்து ஐஸ்வர்யா கணவரிடம் அவ்வப்போது கண்டித்து வந்துள்ளார். இதை மனதில் வைத்து கணவர் புருஷோத்தமன், மாமனார் பழனிவேல் இருவரும் பெற்றோர் வீட்டுக்குச் சென்று கூடுதலாக வரதட்சணையாகப் பணம், நகை வாங்கி வரும்படி ஐஸ்வர்யாவை அவ்வப்போது கொடுமைப்படுத்தி வந்துள்ளனர். இதனால் கணவன், மனைவி, மாமனார் மூவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து தீபாவளி அன்று வெளியூருக்குச் சென்ற புருஷோத்தமன் இரவு வெகுநேரம் கழித்து வீட்டிற்கு வந்துள்ளார். தீபாவளி அன்று கூட வீட்டிற்கு இவ்வளவு நேரம் கழித்து வரலாமா என்று கணவரை ஐஸ்வர்யா கண்டித்துள்ளார். இதனால் கணவன், மனைவி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் ஐஸ்வர்யா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதையறிந்த அக்கம் பக்கத்தினர் ஐஸ்வர்யாவை மீட்டு கள்ளக்குறிச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்குக் கொண்டு சென்று சேர்த்துள்ளனர். பிறகு அங்கிருந்து கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு சிகிச்சை பலனின்றி 9 மாத கர்ப்பிணி ஐஸ்வர்யா பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அத்துடன் அவரின் வயிற்றில் வளர்ந்த குழந்தையும் உயிரிழந்துள்ளது.

இந்த நிலையில், ஐஸ்வர்யாவின் தாயார் அம்சவள்ளி தனது மகள் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறிக் கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் வழக்குப் பதிவு செய்த சப்-இன்ஸ்பெக்டர் சந்திரன் ஐஸ்வர்யாவின் கணவர் புருஷோத்தமன், அவரது தந்தை பழனிவேல் ஆகிய இருவரையும் கைது செய்துள்ளார். மேலும், வரதட்சணை கொடுமை குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கர்ப்பிணி மனைவியை கொடுமைப்படுத்தி அவரது இறப்புக்குக் காரணமான கணவர் மற்றும் மாமனாரின் செயல் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT