ADVERTISEMENT

மத்திய, கர்நாடக அரசுகளின் துரோகத்தை முறியடிக்க தமிழக முதல்வர் ராசிமணல் பகுதியை பார்வையிட வேண்டும்; பி.ஆர்.பாண்டியன்!

03:31 PM Feb 01, 2019 | selvakumar

"ராசிமணல் பகுதியை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நேரில் சென்று பார்வையிட்டு மத்திய,கர்நாடக அரசுகளின் துரோகத்தை முறியடிக்க வேண்டும். இல்லையென்றால் தமிழகத்தை காப்பாற்ற முடியாது என்கிறார் தமிழக காவிரி விவசாயிகள் சங்கங்களின் பொதுசெயலாளர் பி.ஆர்.பாண்டியன்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

அவர் மேலும் கூறுகையில், " மத்திய அரசும் கர்நாடக அரசும் கூட்டு சேர்ந்து காவிரியில் தமிழக உரிமையை பறிப்பதற்கான முயற்சியை அரசியல் லாப நோக்கத்தோடு எடுத்து வருகிறார்கள். சட்டத்திற்குப் புறம்பாக ஏற்கனவே 6 அணைகளை கர்நாடக அரசு கட்டி முடித்திருக்கிறது.

இந்த நிலையில் உச்ச நீதிமன்றமும் நடுவர்மன்ற இறுதி தீர்ப்பை ஏற்று காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளநிலையில் அந்த ஆணையத்தை முடக்கும் நோக்கத்தோடு கர்நாடக அரசு எடுக்கும் முயற்சிக்கு மத்திய மோடி அரசுதுணை போகிறது.

கர்நாடகத்திலிருந்து தமிழக எல்லை நோக்கி ஓடிவரும் காவிரி நீரை தடுத்து மேகதாதுவில் சட்டத்திற்கு புறம்பாக அணை கட்டுவதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அதை சாதகமாக்கிக் கொண்டு அணை கட்டுவதற்கு கர்நாடக அரசாங்கம் முயற்சிக்கிறது. அதனை நியாயப்படுத்துவதற்கான முயற்சியும் செய்துவருகிறது. சட்டவிரோதமாக அணைகட்டி தமிழகத்தை அழிக்கும் நோக்கத்தோடு செயல்படும் குமாரசாமி அரசும் மத்திய மோடிஅரசும் கூட்டு சேர்ந்து செயல்படுவதை நியாயப்படுத்துவதற்கு வடமாநிலங்களை சேர்ந்த பல மொழிகளை கொண்டுவரும் ஊடகம், பத்திரிகை, செய்தியாளர்களை, அழைத்துவந்து அணைக்கட்டும் பகுதியை பார்வையிட செய்து, தமிழகத்தில் தண்ணீர் கடலில் சென்று கலப்பதை தடுத்து நிறுத்தவே அணைகட்ட உள்ளோம், நாங்கள் உரிய தண்ணீரை தமிழகத்திற்கு வழங்குவோம் என நியாயப்படுத்துவதற்கான மறைமுக மோசடி நடவடிக்கையில் கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி முயற்சித்து வருகிறார். இதனை வன்மையாக கண்டிக்கிறோம்.

அதனை தடுத்து நிறுத்துவதற்கு தமிழக அரசாங்கம் முயற்சி எடுக்க வேண்டும். தமிழகம் நோக்கி வரக்கூடிய தண்ணீரை தடுத்து அணை கட்ட கர்நாடக அரசுக்கு சட்டரீதியாக உரிமை இல்லை. ஆனால் தமிழகம் வழியே கடலுக்கு செல்லக்கூடிய காவிரி நீரை தடுத்து அணைகட்டி தண்ணீரை தமிழகமும், மின்சாரத்தை கர்நாடகமும், பயன்படுத்திக் கொள்வதற்கு ராசிமணலில் தமிழகம் அணை கட்டுவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்பதை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நேரடியாகவே சென்று ராசிமணல் பகுதியை பார்வையிட்டு உலகறிய எடுத்துரைக்க வேண்டும்.

தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள், பத்திரிகையாளர்கள், ஆய்வாளர்கள், வல்லுநர்களைக் கொண்ட குழுவோடு முதலமைச்சர் உடனடியாக அங்கு சென்று பார்வையிடவேண்டும். நாம் வெறும் சட்டத்தை மட்டுமே பேசி, சட்டரீதியாக எதிர் கொள்ளலாம் என்பது நியாயமாக இருந்தாலும், மத்திய மோடி அரசு, கர்நாடகா குமாரசாமி அரசாங்கத்தோடு கூட்டு சேர்ந்து திட்டமிட்டு சட்டத்தை புறக்கணித்து தமிழகத்திற்கு எதிராக அரசியல் லாபம் கருதி ஒன்றாகி உள்ளனர். ஆனால் நாம் சட்டத்தை மட்டுமே பேசிக் கொண்டிருப்பது பொருத்தம் இருக்காது ஆகவே நமக்கு உள்ள சட்ட உரிமைகளை களத்திலிருந்து எடுத்துக்காட்டி வெல்வதற்கான முயற்சியை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அவசரகால நடவடிக்கையாக மேற்கொள்ள வேண்டும்.

இல்லையெனில் தமிழகம் அழிந்து போகும் என்பதை தமிழக அரசாங்கம் எச்சரிக்கையோடு உணர வேண்டும்." என்றார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT