ADVERTISEMENT

பெண் குழந்தைகளின் கும்மியுடன் நடந்த கலாச்சார பொங்கல் விழா

11:25 AM Jan 18, 2019 | bagathsingh

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள செரியலூர் கிராமத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொங்கலுக்கு மறுநாள் வித்தியாசமான திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. செரியலூர் கிராமத்தில் பிறந்த பெண் குழந்தைகள் வயதுக்கு வருவதற்கு முன்பு இந்த திருவிழாவில் கலந்துகொள்ள வேண்டும். பிறந்த சிறு குழந்தைகள் இருக்கும் வீட்டில் குழந்தைகளின் தாய் அல்லது சகோதரிகள் கலந்து கொள்வார்கள். திருவிழாவில் பங்கேற்கும் குழந்தைகள், பெண்கள் திருவிழா முடியும் வரை விரதம் இருந்து கலந்துகொள்ள வேண்டும்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

செரியலூர் கிராமத்தில் பெண் குழந்தைகள் உள்ள வீட்டில் காலையில் வெற்றுப் பொங்கல் வைத்து 3 படையல் வைத்து, ஒரு படையலை விரதம் இருப்பவர்கள் சாப்பிடவும் மற்ற இரு படையல்களை ஒரு ஓலை கூடையில் இரு பெரிய சாணிப் பிள்ளையார்களுடன் 92 சிறு சாணப் பிள்ளையார் செய்து அதில் கூழைப் பூ, ஆவாரம் பூ, அருகம்புல், வேப்பிலை, கரும்பு, வெல்லம் ஆகியவற்றை வைத்து கிராமத்தின் மையப்பகுதியில் உள்ள பாலை மரத்தடியில் கிராமத்தின் பெண்கள், பெண் குழந்தைகள் தனித்தனியாக கும்மியடித்து வழிபாடு செய்து அணிவகுத்து தீர்த்தான் ஊரணி வரை கொண்டு சென்றனர். அங்கு கூடையில் உள்ள பொங்கலை மட்டும் தனியாக எடுத்துக்கொண்டு மற்ற பொருட்களை குழியில் புதைத்துவிட்டு ஒரு சிறு பிள்ளையாரை அருகில் உள்ள ராக்காச்சி அம்மன் கோயில் காட்டில் வைத்து வழிபட்டு சென்றனர். இந்த திருவிழாவை கொப்பித் திருவிழா என்று இப்பகுதி பொதுமக்கள் கூறுகின்றனர். இந்த திருவிழாவில் ஏராளமான பெண் குழந்தைகள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டனர். மேலும் திருவிழாவைக் காண சுற்றுவட்டார கிராமங்களில் இருந்தும் ஏராளமானோர் வந்திருந்தனர்.

இது குறித்து அந்த பகுதி பெண்கள் மற்றும் கிராம மக்கள் கூறும் போது, காத்தான் - தீர்த்தான் என இரு சகோதரர்கள் முந்தைய காலத்தில் வாழ்ந்துள்ளனர். அதில் காத்தான் மகள் கொப்பி அம்மாள் சிறு குழந்தையாக இருக்கும்போது தனது பெரியப்பா தீர்த்தான் வீட்டுக்கு காட்டுப் பகுதியில் சென்று காணாமல் போய்விட்டார். பல நாட்களுக்கு பிறகு ஊரின் மையப்பகுதியில் உள்ள பாலை மரத்தின் மேல் இருந்து அம்மை நோய் தாக்கி இறந்து கீழே விழுந்ததை பார்த்து கிராமமே சோகத்தில் ஆழ்ந்துள்ளது. அதன் பிறகு இந்த கொடிய நோயான அம்மைநோய் வந்து யாரும் இறக்கக் கூடாது என்பதற்காக அம்மைக்கு பலியான கொப்பியம்மாளை நினைத்து சிறு பெண் குழந்தைகள் அம்மைக்கு எதிரான நோய் தடுப்பு மூலிகைகளுடன் ஊர்வலமாக சென்று தீர்த்தான் ஊரணியில் சிறப்பு வழிபாடு செய்வது வழக்கமாக உள்ளது. இது பன்நெடுங்காலமாக உள்ளது. அதனால் காலங்கள் மாறினாலும் கலாச்சாரத்தை மாற்ற விரும்பாமல் கிராமத்தினர் இந்த வழிபாட்டை செய்து வருகிறோம். வெளியூர், வெளிநாடுகளில் வசிப்பவர்களும் இந்த நாளில் சொந்த ஊருக்கு வந்துவிடுவார்கள் என்றனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT