தமிழகத்தில் 14 விதமான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து அமல்படுத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. புதுச்சேரியிலும் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கவேண்டும் என்று அரசியல் கட்சிகள் மற்றும் பொது நல அமைப்புகள் கோரிக்கை விடுத்து வந்தன. அரசும் இதை ஏற்று தடை விதித்து அறிவிப்பு வெளியிட்டது. ஆனால் நடைமுறைப்படுத்தாமல் அமல்படுத்துவதற்கான தேதியை உறுதி செய்யாமல் இருந்து வந்தது. பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிப்பதற்கான அரசாணை பிறப்பிக்கப்படாததால் பிளாஸ்டிக் பொருட்கள் புழக்கத்தில் இருந்து வந்தன.
இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் அமைச்சர் கந்தசாமி தலைமையில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிப்பது குறித்து ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. அப்போது ஒரு சில பொருட்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. அந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி ஆகஸ்டு 1-ஆம் தேதி முதல் (இன்று) பிளாஸ்டிக் தடை அமலுக்கு வரும் என்று அமைச்சர் கந்தசாமி அறிவித்திருந்தார். அதையடுத்து இந்த தடை உத்தரவு இன்று (வெள்ளிக்கிழமை) முதல் அமலுக்கு வருகிறது.
இதுகுறித்து புதுச்சேரி அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் துறை இயக்குனர் ஸ்மிதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “ புதுச்சேரி அரசு புதுவை யூனியன் பிரதேசத்தில் ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்க உத்தேசித்து பொதுமக்களின் கருத்துகளை பெற அதன் வரைவு அறிக்கை கடந்த 8.2.2019 அன்று அரசு சார்பில் வெளியிட்டது. அதன்படி சுற்றுச்சூழல் துறை அமைச்சரின் தலைமையில் பிளாஸ்டிக் வர்த்தகர் சங்கம், ஜவுளி சங்கம் மற்றும் உணவு விடுதி சங்கம் போன்ற பல்வேறு அமைப்புகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.
மேலும் இது தொடர்பாக புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி நேற்று சட்டசபை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், “ புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
பிளாஸ்டிக் பயன்படுத்துவதால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுகிறது. வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டு தண்ணீர் செல்வதில் தடை ஏற்படுகிறது. மனிதர்களுக்கு நோய் உருவாகும் நிலை உள்ளது என்பதால் பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்ய அரசு முடிவு செய்துள்ளது. இந்த தடை ஆணையை மாசு கட்டுப்பாட்டு கழகம், நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர்கள் உள்ளிட்ட அதிகாரிகள், வருவாய் துறை தாசில்தார், உணவு ஆய்வாளர்கள் நடைமுறைப்படுத்துவார்கள். மக்களின் ஆரோக்கிய வாழ்க்கையை கருத்தில் கொண்டு இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தடை செய்யப்பட்ட பொருட்களுக்கு மாற்றாக 8 வகையான பொருட்கள் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் தடை ஆணையை மீறுபவர்கள் மீது சட்டவிதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும். ரூ 5,000 முதல் 1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும்” என்றார்.